தனிமையில் எரியும் இரவின் சாம்பல்
நுரைத்து ஓடுகிறது
யமுனையில்
பிருந்தாவனத்தில் அலையும்
கைம்பெண்ணின்
பெரு மூச்சுகளை வாங்கி
குழலூதுகிறான்
பச்சை மாமலையன்
நிறமற்ற நீரில்
நிர்வாணம்
வண்ணப்பூவாகச் சுழல்கிறது
ஒரு காடு
வெந்து தணிகிறது
அவளது வெள்ளுடைகள்
மேகங்களாக
மிதந்து போய்க்கொண்டிருக்கின்றன
இதழ் தொட்ட கண்ணீரை
நாவால் வருடிச் சுவைக்கிறாள்
ஒரு துளிதான் என்றாலும்
போதும் என்பது போல
- பழநிபாரதி
No comments:
Post a Comment