தேநீர் கவிதை: உனக்கு என்ன அர்த்தம்?
ஈரோடு தமிழன்பன்
உன் பிறப்புச் சான்றிதழ்
உன் பெற்றோர் வாங்குவர்.
உன் இறப்புச் சான்றிதழ்
உனக்குப் பின்னால் இருப்பவர்
வாங்குவர்.
நீ என்ன வாங்குவாய்?
****
பகல்
வந்துபோனதற்கு
நட்சத்திரங்கள் அடையாளம்
இரவு
வந்து போனதற்கு
விடியலே அடையாளம்
நீ
வந்து போனதற்கு
என்ன அடையாளம்?
****
அகராதியில்
ஒரு புழுக்கூட இடம் பெற்றிருக்கும்
அதற்கு அர்த்தமும் இருக்கும்
நீ எதில் இடம்பெறுவாய்?
உனக்கு என்ன அர்த்தம்?
****
தன்னைக் கடப்பதற்கு
எந்த நதி ஓடம் கேட்கும்?
என்ன கிடைத்தால்
நீ உன்னைக் கடப்பாய்?
****
ஓர் எறும்பும் -
உனக்குத் தெரியும்
ஒருமுறைதான் சாகிறது
ஆனால் அதற்குள் வாழ்கிறது.
நீ எத்தனை முறை சாகிறாய்
ஒருமுறை கூட வாழாமல்?
****
தன்னைத் திறப்பதற்கு
எரிமலை எவரிடம் சாவி கேட்கும்?
உன்னைத் திறப்பதற்கு
உன்னிடமா... உலகத்திடமா?
எவ்விடம் சாவி?
****
ஒவ்வொரு இதழிலும்
ரோஜா இருப்பதால் ஒரு ரோஜாப் பூ உருவாகிறது.
ஒவ்வோர் அடியிலும்
உயரம் உழைப்பதால்
இமயம் நிமிர்கிறது.
****
நீ
ஒவ்வொரு நொடியிலும்
எதுவாக இருக்கிறாய்?
உன் வாழ்க்கை
எதுவாக இருக்கிறது?
No comments:
Post a Comment