Wednesday, 24 August 2016

செவாலியர் விருது

பன்மொழிக் கலைஞன் கமல்ஹாசன் பத்மபூஷன், பத்மஸ்ரீ, தேசிய விருதுகள் பலவற்றைப் பெற்றவர். நடிகர் திலகம் ‘செவாலியர்’ சிவாஜி கணேசனுக்கு கடைசி வரை தேசிய விருது தரப்படவே இல்லை. “நடிப்பின் பல்கலைக்கழகமான அவரது பெயருடன் ‘தேசிய விருது’ இடம்பெறாதது, அந்த விருதுக்குத்தான் குறையே தவிர அவருக்கு அல்ல” என்று பேசிய கமல்ஹாசன், திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, சர்வதேச விருதான ‘ஹென்றி லேங்லொய்ஸ் விருது’ கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் அரசால் வழங்கப்பட்டது நினைவில் இருக்கலாம். இந்நிலையில், கமலின் நடிப்பாற்றலைப் பாராட்டி, பிரான்ஸ் கலைத்துறை அமைச்சகம், தனது உயரிய விருதான ‘செவாலியர்’ விருதை கமலுக்கு அறிவித்திருக்கிறது. 2016ஆம் வருடத்தில் மட்டும் நான்கு பேருக்கு செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த ஓவியரான S.H. ரசா, பல வருடங்களாக ஃபேஷன் டிசைனிங்கில் பணியாற்றிவரும் மனிஷா அரோரா, முன்னாள் ராணுவ அதிகாரியாகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் கவர்னராகவும் பொதுசேவை செய்துவந்த ஜே.ஜே.சிங் ஆகியோருக்கு இவ்வாண்டில் ‘செவாலியர்’ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பிரான்ஸ் ஆட்சி நடைபெற்றது முதல் இதுவரை 26 நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. யாருக்காவது கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக இந்த விருது வழங்கப்படுவதில்லை. 20 அல்லது 25 வருடங்களுக்கும் மேலாக குறிப்பிட்டத் துறையில் பொது சேவையில் ஈடுபட்டு தலைசிறந்த பங்காற்றலைக் கொடுக்கும் நபர்களுக்கு இவ்விருது வழங்கப்படும். ‘செவாலியர்’ என்பதற்கு Knight என்று பொருள். Légion d'honneur என சொல்லப்படும் இந்த கௌரவப் பெயரில் Knight (செவாலியர்), Officer, Commander, Two dignities : Grand Officer, Grand Cross ஆகிய விருதுகள் இருக்கின்றன. இவற்றில் தலைமையானது செவாலியர் எனப்படும் Knight விருது. நெப்போலியன் காலத்தில் போரிலும், அரசின் செயல்பாடுகளிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த கௌரவ விருது, இந்தியாவில் பிரெஞ்சு ஆட்சி பரவியபோது இந்தியாவுக்குள் நுழைந்தது. பிரெஞ்சு ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியர்களின் உழைப்பை மரியாதை செய்யும் பொருட்டு செவாலியர் விருது பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களில் கலைத்துறை சார்பாக முதல் செவாலியர் விருதைப் பெற்றவர் இயக்குநர் சத்யஜித்ரே (1987). அதன்பிறகு சிவாஜி கணேசனுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்ட விருது, பல வருடங்கள் கழித்து 2007இல் அமிதாப் பச்சனுக்கும், 2014இல் ஷாருக்கானுக்கும் வழங்கப்பட்டது.

நியாயப்படி பார்த்தால் கமல்ஹாசனுக்கு எப்போதோ வழங்கியிருக்கவேண்டும். காலம் தாழ்ந்தாலும், விதியின் பயனால் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது செவாலியர் விருது. விதி, கமல்ஹாசனும் இதே விதியைத்தான் நொந்துகொண்டார். விருது பெற்றது குறித்து பேசிய கமல் ‘இனி நான் செய்ய வேண்டிய வேலைகளுக்கான ஊக்கியாக இந்த விருதைப் பார்க்கிறேன். என் முன்னோர்கள் இயக்குநர் சத்யஜித்ரே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வழியில் இந்த விருது எனக்கு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த பெருமையைக் கண்டு ரசித்து ஆனந்தப்பட என் பெற்றோர்கள் இல்லை எனினும், உறவுகளும், நண்பர்களும் சூழ நின்று கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். இந்தியா முழுவதுமாக சேர்ந்து கமலை வாழ்த்தி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம், ‘கமலுக்காக பாராட்டு விழா எடுக்கப்போகிறோம்’ என வேலையைத் தொடங்கிவிட்டது. சிவாஜி கணேசனுக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டபோது மிகப்பெரிய விழா எடுத்து கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment