படுக்கையறையில்...
எழுதுகோல்
தொலை பேசி
எதுவும் வைக்காதே
உன் சுத்தமான சுதந்திரம்
அந்தச்
சுவர்களுக்குள்ளேதான்
````````````````````````````
அறிவாளியாய் இரு
முட்டாளாய் நடி
````````````````````````````
கன்னக்குழி
அழகென்று
பெண்ணைப்
புகழாதே
அதுவே
உன் சவக்குழியாய்
இருக்கலாம்
```````````````````````````
சாப்பாட்டு மேஜையும்
கட்டிலும்
தொடமுடியாத
தூரத்தில் இருக்கட்டும்
அந்த தூரம்
உன் ஆயுளின் நீளம்
````````````````````````````
தும்மல் காதல்
இரண்டையும்
வெட்கப்படாமல்
வெளிப்படுத்து
அடக்கினால்
வேண்டாத இடத்தில்
வெளிப்பட்டுவிடும்
````````````````````````````
வாய் நீராடும்
வாய்ப்புள்ள
போதெல்லாம்
சுட்டுவிரல் கொண்டு
தொட்டழுத்து ஈறுகளை
பரவும் ரத்தம் பலம்
ஈறுகெட்டால்
சொல் எஞ்சும்
ஈறு கெட்டால்
பல் எஞ்சுமா?
````````````````````````````
புதுமனைவியின்
தாய்மை
புதுத்தொழிலில்
லாபம்
இரண்டையும்
மூன்றாண்டு
எதிர்பாராதே
````````````````````````````
மாட்டுவால் சூப்
மன்மத பானமாம்
துரும்பும் அதனால்
இரும்பாய் மாறுமாம்
இப்போது புரிகிறது
மாடு பிடித்தவனுக்கே
மணமகள் ஏன் என்று
`````````````````````````````
எப்போதும் கைக்குட்டை
இரண்டு கொள்
தும்மலுக்கொன்று
தூய்மைக்கொன்று
``````````````````````````````
நாய் குரைத்தால்
ஓடாதே
அச்சப்படல்
நாய்க்கு
அழைப்பு மடல்
எளியதன் பலவீனம்
வலியதன் பலம்
-வைரமுத்து
No comments:
Post a Comment