ஒரு ஜெர்மானியச் சிறுகதையில் ஒரு காட்சியை பார்ப்போமா??.
ஒரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள்.
விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது.அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து , அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது ?, என ஆதங்கமாகக் கேட்டார்.
"எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது", என அப்பா வருத்தமான குரலில் சொல்லவே, நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார். இதைக்கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான்..."உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்?".
"உண்மைதான். தேநீர் கோப்பையைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள். அவள் கவனமாக மேஜைமீது அதை வைக்கவில்லை.ஆகவே தவறி விழுந்து விட்டது. இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக்கொள்வாரா? நிச்சயம் என் மீது சந்தேகப்படவே செய்வார்.அதற்குப் பதிலாக செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டுவிடுவதே சரி என நினைத்தேன்.
ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கி சொல்லியிருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார். அதன்பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும்.மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும். உறவுகளை உடை படாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப்படவே செய்கின்றன".
அப்பாவின் முப்பதுஆண்டுகால அனுபவம் தான் அவரை இந்த முடிவு எடுக்க செய்திருக்கிறது. வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே!
இதற்கு மாறாக சிலர் தங்களது சுயநலத்திற்காக குடும்ப உறவுகளை சிதைத்து கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள் .உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிது. காப்பாற்றிக்கொள்வது எளிதல்ல. வீட்டுக் கொடுத்தலும், புரிதலும், அரவணைத்துப் போதலும் அத்தியாவசமானது.
நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன.
சிறியதோ, பெரியதோ எப்படியிருப்பினும், ஒரு செயலின் பின்னுள்ள எண்ணம் முக்கியமானது. நற்செயல்கள் புரிவதற்கு நல்லெண்ணங்களே முதற்படி. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு வழிமுறைகளை நாம் அறிவோம். ஆனால் நல்லெண்ணெங்களை உருவாக்கிக் கொள்ளவும் கடை பிடிக்கவும் என்ன வழிமுறைகள் இருக்கின்றன? அதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள்? நல்ல எண்ணங்கள் மனதில் பதிய வேண்டுமென்று நம் முந்தைய தலைமுறை பெற்றோர்கள் , ஒரே விஷயத்தை பலமுறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்போது மனதில் அது ஆழமாக பதிந்து விடும்.நாம் எல்லோரும் அப்படியிருக்கிறோமா என்று நம்மையே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கம்ப ராமாயணத்தில் ஆயிரம் பாடல்களை மனதில் இருந்து சொல்லக்கூடியவர் அன்று இருந்தார்கள்.திருக்குறள், சிலப்பதிகாரம்,முழுமையாக அறிந்தவர்கள், ஷேக்ஸ்பியரின் முழு நாடகத்தையும் நினைவில் வைத்திருந்து எடுத்து சொல்லும் திறன் கொண்டவர்கள் பலர் இருந்தார்கள். இன்று நாம் கணினியை அதிகம் சார்ந்து இயங்குவதால் நினைவாற்றலை இழந்து வருகிறோம். அதன் முக்கியத்துவமும் பெரிதாக மனதில் இல்லை.இப்படியே போனால் அடுத்த தலைமுறைக்கு தனது தந்தை, தாயின் பெயர் தவிர வேறெதுவும் நினைவில் நிற்காது.
கவிதை படித்தல் என்பது நினைவாற்றலை காப்பாற்றும் வழி என்கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசா.
அடுத்தவருக்கு இடையூறு செய்கிறோம் என்று தெரிந்தும் அதை பற்றி துளிக்கூட குற்ற உணர்ச்சி கொள்ளாத இளம் தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.
மேலே ஒரு இடத்தில் குறிப்பிட்டது போல விட்டுக் கொடுத்தலும் , புரிந்து கொள்ளுதலும், அரவணைத்துப்போக முயல்வதும் தான் உறவுகளை காப்பாற்ற வழிவகுக்கும். இச்செயல்களை அடுத்த தலைமுறையினர்க்கு புரிய வைப்பது நம் தலைமுறையின் கடமை ஆகும்..
(-------கடவுளின் நாக்கு என்ற தலைப்பில் வந்த திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரையின் ஒரு பகுதியைத் தழுவியது.....
Tuesday, 10 January 2017
படித்ததில் பிடித்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment