Thursday, 26 January 2017

வைரமுத்து

*தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது!*

🖊வைரமுத்து

வாடிவாசல் திறந்துவிடும்
    வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
    கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
    கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
     தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
     அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
    பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
     இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
     கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
    சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
    உங்கள்குரல் கேட்டு

ஒருகொம்பு ஆணென்றால்
    மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
    இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
    தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
     வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
    திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
     கால்களுக்கும் வணக்கம்

சதுராடிக் களம்கண்ட
     சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
     நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
    களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
     நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
    வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
    ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
     புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
    ஆராய வேண்டும்

ஜூனியர் விகடன்
25.01.2017

No comments:

Post a Comment