*கவிஞனாகிய அற்புதம்*
மஞ்சளாக மாறுகிற நிலவின் அதிசயத்தில்
வண்ணங்களைக் குறித்து
இதயத்தைக் கிளறுகிற அந்தியில்
சாலையில் மஞ்சளுடுப்பில் மஞ்சள் பூச்சூடி
வடிவாகச் செல்லும் பெண்ணில்
நிலவை விரல் நீட்டி குழந்தமையை நினைவூட்;டும்
குழந்தையில்
பிரிந்த காதலியின் கண்ணீரில்
உதிர்த்துப்போட்ட இலைகளின் குவியலுக்குப்பின்
நிற்கும் மொட்டைமரத்தின் பேரிழப்பில்
குப்பைகளைக் கிளரும் பூனைகளின் பசியில்
கோடையைத் தாங்கும் இலையடர்ந்த
பச்சை இலைகளின் கவர்ச்சியில்
கண்களைக் குச்சியில் பொருத்தி நடந்துபோகும்
குருடனில்
அமைதியிலுறைந்த புல்லாங்குழல்களைக் கூவி
விற்பவனில்
கயிறில் நடக்கும் சிறுமியின் விழுந்துவிடும் அபாயத்தில்
வசந்தம் தொடர உலகே மலர்களாகிச் சிரிக்கும்
காலத்தில்
முகில்கள் கருத்துச் சொட்டும் திடீர் மழையில்
அடம்பிடிக்கும் அடைமழையில்
தெறித்து உடல் நனைக்கும் சாரலில்
குடை மறந்து கொட்டும் மழையில் நனைதலில்
புழுங்கும் போது மரமசைந்து வரும் தென்றலில்
மழைக்காலம் முடிந்து துவங்கும் பனியின் நடுக்கத்தில்
பகலை வரையும் பரிதியில் இரவைத் தீட்டும்
வான்சுடர்களில்
என் உயிரின் மர்மத்தில் இவ்வுலகில் தோன்றியதில்
சொற்களால் கவிஞனாகிவிட்ட அற்புதத்தில்
விடுபடமுடியாத பால்யத்தில்
பறந்த வண்ணத்துப்பூச்சிகளில் விட்டில்களில்
மீன்களில்
உலகைக் காட்டிய என அம்மாவில்
அன்பின் உருவமான தகப்பனில்
தம்பி தங்கை ரத்தத் துடிப்புகளில்
நட்பில் படர்ந்த உயிரில் ஒரு கவிதை விரிகிறது
அனுபவத்தில் ஒரு சொல் பல சொல்லாகி
வாழ்வாகி புனைவாகி எழுதி முடிக்கப்பட்டவை
சுவரில் மாட்டிய காணக் கிடைக்காச் சித்திரங்கள்.
*-யாரோ*
No comments:
Post a Comment