Sunday, 17 March 2024

புத்தகம்-10


Reading_Marathon2024
#24RM050

Book no:10/100+

உனது பையில் ஒரு கூழாங்கல்
-திக் நாட் ஹஞ்ச்
தமிழில்:அமலன் ஸ்டான்லி

வேகமும் பரபரப்புமான நமது வாழ்க்கையில் இயற்கையான எளிமையும் மகிழ்ச்சியும் இன்பமும் இங்கேயே உண்டு, இந்த தருணத்தில் உண்டு. அமைதியின் பகிர்தல் என்பதை தாண்டி நாம் அதுவாகவே ஆகிவிடும் அர்த்தத்தில் இந்த நூலில் அமைதி குறித்த குறிப்புகள் ஏராளம் .ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ் என்பது போல தியானம், அமைதி, இன்பம் ஆகியவற்றை நாம் தொலைத்தவற்றை தேடிக் கொடுக்கும் ஒரு இயந்திரம் போல இந்த புத்தகம் அமைந்துள்ளது.

சமீபத்தில் ஒரு குழந்தைகளின் கூட்டத்தில் டிம் எனும் சிறுவன் மிக அழகாக முறுவலித்தான். நீ அழகாக புன்னகைக்கிறாய் என்றேன். அதுக்கு அவன் நன்றி என்றான். நீயல்ல நானே உனக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் உன் புன்னகையால் வாழ்வை மிக அழகு படுத்துகிறாய். மேலும் இன்னொரு இடத்தில்.. நாம் அன்றாட வாழ்வில் புன்னகைக்க முடிகிறது என்றால் நம்மால் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க முடிகிறது என்றால் நாம் ஒருவர் மட்டுமல்ல நம்மில் ஒவ்வொருவரும் அதனால் பயனடைவோம் என்கிறார்.

புறச் சூழல்கள் அனைத்தும் ஒன்று கூடி உண்மையான நம்மிடம் இருந்து நம்மை அப்புறப்படுத்த நினைக்கும் போது, துரத்த முனையும் போது, தியானம் மிக முக்கியமாக பயன் அளிக்கிறது. அது நம்மையே நாம் அறியும் வகையில் இருக்கிறது. நம்மை நாம் தனித்து வைத்த வைத்திருக்காமல் இயற்கையிடம் ஒப்படைக்க வேண்டும் அது குறித்துச் செல்லும்போதுஉண்மையின் சாரம் இருந்தால்தான் வாழ்க்கையிலும் அது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும். செடிகளை ஊன்றும் போது அது சொல்லுமாம்.. நான் பூமியிடம் என்னை ஒப்புவிக்கிறேன், பூமி தன்னை என்னிடம் ஒப்பு வைக்கிறாள் என்று.

ஒரு குழந்தை எப்படி அனைவராலும் போற்றப்படும் ஒரு ஞானியை தனக்குள் கிரகித்து பரவசத்துடன் புரிந்துணர்வு கொள்கிறது. தன் விருப்பத்துக்குள் அது எப்படி தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை பற்பல கதைகள் மூலம் பெரியவர்களுக்கு என்னுள் பயிற்சியாக எடுத்துக்காட்டுகிறது
இந்தக் கணம் தான் நமக்கு வாழ கிடைக்கிறது. இது புத்தரின் போதனை. வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம் உங்களுக்கு வந்துவிட்டதா என யாரேனும் கேட்டால் இன்னும் இல்லை என்றே உங்களில் பெரும்பாலோர் பதில் சொல்லுகிறீர்கள். அச்சிறந்த கணம் இன்னும் நிகழவில்லை, வெகு விரைவில் நிகழும் என நம்புகிறோம் .ஆனால் அந்த சிறந்த கணம் ஒரு நாள் நம்மை வந்து சேரும் என முன் எப்போதும் போல் தொடர்ந்து காத்திருந்தால் அது நிகழாது. உங்களுக்கான மகிழ்ச்சி எதிர்காலத்தில் ஒளிந்து இருக்கிறது என நம்ப வேண்டாம். உண்மையில் இக்கணமே உங்களுக்கான மகிழ்ச்சியை தொட முடியும். உயிர்ப்புடன் இருப்பீர்கள்.

விழிப்புணர்வை பற்றி சொல்லும் போது அது சூரிய ஒளி போல செயல்படுகிறது .எந்த முயற்சியும் இல்லாமல் சூரியன் எல்லாவற்றிலும் ஒளிர்கிறான் துலங்க செய்கிறான். யாவையும் அவ் ஒலியால் மாற்றுகின்றான். அதுபோல் நாம் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்கிறார்

ரசித்தவை

*உங்களின் இருதயத்தில் நீங்கள் சுமந்து செல்லும் துயரம் என்பது இச்சமூகத்தின் துயரமே. அத்துயரத்தை நீங்கள் உங்களோடு எடுத்து வந்தால் இச்சமூகத்தை நீங்கள் சுமந்து வருவதாகாகவே அர்த்தம்

*நமது மனம் நதியைப் போன்றது ஏராளமான எண்ணங்களும் உணர்ச்சிகளும் அதனுடைய ஓடிக்கொண்டிருக்கின்றன இதில் அமைதியும் அன்பையும் ஊடேற்ற வேண்டும்

*உலகின் வளம் குன்றா நீரை நான் சுவைத்தேன்

*நீங்கள் ஒரு மரத்தை தொடும் போது ஒருவித அழகையும் புத்துணர்வையும் அதனிடமிருந்து திரும்ப பெறுவீர்கள். மரங்கள் அருமையானவை. புயலிலும் திடகாத்திரமாக நிற்பவை. மரங்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்

தியானம் குறித்தும் நம்மையே நாம் அறிந்து கொள்ளும் விதத்திலும் எளிமையான சொற்களில் புத்த மத கருத்துகளில் நாம் அன்றாடம் காணும் விஷயங்களில் எல்லாம் மேற்கோள்கள் அமைந்திருக்கின்றன புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து விட முடியாது ஆங்காங்கே நின்று இளைப்பாரி தன் படித்துக் கொள்ளச் செல்ல வேண்டும் ஏனெனில் புரிந்து கொள்ள புரிந்து கொண்ட கருத்துக்களை அசைபோட நமக்கு சில நேரம் தாமதம் ஆகலாம் தியானம் குறித்து அமைதி குறித்து வாசிக்க விரும்புபவர்கள் இந்த புத்தகத்தினை படிக்கலாம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment