1937ம் ஆண்டு காந்தி கொல்கத்தாவுக்கு வருகிறார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அண்ணன் சரத் சந்திர போஸ் வீட்டில் தங்குகிறார்.
காந்தி வங்காளத்துக்கு வரும்போதெல்லாம் 'குருதேவ்' ரவீந்திரநாத் தாகூரைச் சந்திப்பது வழக்கம். ஆனால், இந்தமுறை அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விடுகிறது. அதனால் அவர் தாகூரைச் சந்திக்கச் செல்லவில்லை.
இந்தத் தகவல் தாகூர் காதுக்குச் செல்கிறது, நான் காந்தியைப் பார்த்து நலம் விசாரிக்கவேண்டும் என்கிறார், அவர் தங்கியிருக்கும் இடத்துக்குப் புறப்பட்டு வருகிறார்.
அங்கு வந்தபிறகு ஒரு பிரச்சனை. காந்தி ஓய்வெடுத்துக்கொண்டிருப்பது மாடி அறையில். எழுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட தாகூரால் படியேற இயலாது.
அதனால் என்ன? சட்டென்று ஒரு நாற்காலியைக் கொண்டுவருகிறார்கள், அதில் தாகூரை உட்காரவைக்கிறார்கள், நான்கு பேர் சேர்ந்து அந்த நாற்காலியைத் தூக்கிக்கொண்டு மாடி ஏறுகிறார்கள். அந்த நால்வர்: சுபாஷ் சந்திர போஸ், ஜவகர்லால் நேரு, சரத் சந்திர போஸ், காந்தியின் உதவியாளர் மகாதேவ் தேசாய்.
No comments:
Post a Comment