Tuesday, 26 March 2024

தோல்வியும் வெற்றியும்


தோல்வியும் வெற்றியும்…
--------------------------------------------

வெற்றி பெற்ற அனைவரும்,  அனைத்து முறையும் வெற்றியடைந்தவர்களாக இருப்பதில்லை. இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவராக கருதப்படும் ராகுல் த்ராவிட் ஒரு முறை, "நான் இந்தியாவுக்காக 600க்கும் மேற்பட்ட போட்டிகளில் களமிறங்கியிருக்கிறேன். ஆனால் அதில் 400 முறைகள் நான் 50 ரன்களுக்கும் குறைவாக அடித்து ஆட்டமிழந்திருக்கிறேன். எனது பெரும்பான்மை விளையாட்டுகள் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன" என்கிறார். 

இயற்கையும் இதையேத் தான் சொல்கிறது. "தோல்வி முயற்சிகளின் விதி" (Law of Failed Attempts) என்ற ஒன்றை கூறுவார்கள். இயற்கையின் இயல்பில் வெற்றிகளை விட தோல்வியில் முடிந்த முயற்சிகளும் செயல்களுமே மிக அதிகம். 

காட்டின் ராஜாவான சிங்கம், தனது வேட்டைகளில் நான்கில் ஒரு முறை தான் அதற்கான இரையை பெறுகிறது. அதாவது அதன் முயற்சிகள் 75% தோல்வியில் முடிகின்றன. மீன்கள் இடும் முட்டைகளில் பாதிக்கு பாதி உண்ணப்பட்டு விடுகின்றன. பாதிக்கு பாதி கரடி குட்டிகள் இரண்டு வருடங்களுக்குள் இறந்துவிடுகின்றன. இந்த பூமியில் பொழியும் மழையில் 70 சதவீதம் கடலில் பெய்கின்றது. தாவரங்களின் விதைகளில் பெரும்பாலானவை பறவைகளால் உண்ணப்பட்டு விடுகின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது பறவைகள், விலங்குகள், தாவரங்கள், இந்த பூமியின் இயற்கை சக்திகள் அனைத்தும் தோல்வியடையும் முயற்சிகளை எளிதாக, இயல்பாக எடுத்துக்கொள்கின்றன என புரிகிறது. 

ஆனால் மனிதன் மட்டுமே சில முயற்சிகள் எதிர்பார்த்த விளைவைத் தராத போதே தோல்வியுற்றதாக கருதிக்கொள்கிறான். எல்லா முயற்சியுமே வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்க்கிறான்.

முயல் வேட்டைக்கு சென்ற ஒருவன் நான்கு முயல்களை வேட்டையாடி கொண்டுவருவதை விட, யானை வேட்டைக்குச் சென்ற ஒருவன், யானையால் தூக்கி எறியப்பட்டு, உடலெல்லாம் காயத்துடன் தோல்வியுடன் திரும்புவது தான் மிகப்பெரிய வெற்றி என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

குருவிடம் ஒரு பக்தர், “குருவே, உங்களிடம் பல கோரிக்கைகள் வைத்து, நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்குமே நல்லது நடந்துவிடுவதில்லையே.. ஏன் இந்த பாரபட்சம்?” என கேட்கிறார். 

குரு சொல்கிறார், “ஐயா, மாமரத்தில் பூக்கும் எல்லா பூக்களுமே கனிகள் ஆகிவிடுவதில்லை” என பதிலளிக்கிறார். ஆக, பிரபஞ்ச இயக்கத்தில், தோல்வி என்பது இயல்பானது.

எந்த ஒரு செயலிலும் முழு தோல்வி அல்லது முழு வெற்றி என்ற ஒன்று அமையாது. "ஒன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி"யாக  இருப்பதால், நமது வெற்றி - தோல்வி ஆகியவை நம் மனம் உருவாக்கிக்கொள்ளும் "வெற்று மாயை" என்றாகிறது. இதனை புரிந்து கொண்டால், நமது மனம் வெற்றியைக் கொண்டாடாது, தோல்வியில் துவளாது... ! 

🌸

-janakiram

No comments:

Post a Comment