Saturday, 16 March 2024

ஓரான் பாமுக்


"ஏதாவது பிரார்த்தனையையோ செய்யுளையோ மனப்பாடம் செய்ய வேண்டியிருப்பவர்களுக்கு வார்த்தைகளை ஞாபகத்தில் பதிக்க வேண்டியிருந்தால் கண்ணெதிரே தெரிகின்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தக் கூடாது என்பது தெரியவரும். வார்த்தைகள் தம்மைப் படியச் செய்து கொண்டதும் மனம் விடுதலையுற்று ஞாபகத்தூண்டல்களுக்கு உதவக்கூடிய பிம்பங்களைத் தேடிக்கொள்கிறது. எண்ணங்களிலிருந்து கண்கள் முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டு உலகை அதற்கே உரித்தான வியப்போடு கவனிக்கத் தொடங்குகின்றன. சில்லிட்ட குளிர்கால இரவுகளில் போர்வைக்குள் நடுங்கியபடி செய்யுளை மனனம் செய்துகொண்டே ஒரு கனவைப் போல இருட்டில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பாஸ்ஃபரஸ்ஸை சன்னல் வழியே வெறித்துக்கொண்டிருப்பேன். 

இருட்டில் செய்யுளை மனப்பாடப்படுத்திக்கொண்டே, வினோதமான ஞாபக விளையாட்டுகள், உத்திகளைக் கொண்டு அதை ஒப்பிப்பதற்கு திட்டமிட்டுக்கொண்டே, என் கண்கள் பாஸ்ஃபரஸ் நீரோட்டத்தில் மிக மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் ஏதோவொன்றின் மீது - அது அசாதாரணமாகத் தோற்றமளிக்கும் கப்பலாகவோ விடியலுக்கு முன் புறப்பட்டு விட்ட மீன்பிடிப் படகாகவோ இருக்கும்- நிலைத்திருக்கும். இவற்றின் மீது என் கவனம் குவியாவிட்டாலும் என் கண்கள் அவற்றின் வழக்கமான பணிகளிலிருந்து விலகாது. எதிரில் கடந்து செல்பவற்றை ஒரு கணம் கவனிக்கும்; பின் சற்று நேரம் கழித்துப் பிரக்ஞையில் உறைத்து, ஆம், அது ஒரு சரக்குக் கப்பல் என்று ஒப்புதல் அளிக்கும். 

குழந்தைப் பருவத்திலிருந்தே, இன்றுவரை பாஸ்ஃபரஸ்ஸை நோக்கி மேட்டுப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளில்தான் வசித்துவந்திருக்கிறேன். சன்னலுக்கு வெளியே தூரத்திலோ அடுக்ககங்களுக்கும் மசூதிகளின் கவிகைகளுக்கும் இடையிலோ பாஸ்ஃபரஸ் தெரிந்தே வந்திருக்கிறது. இஸ்தான்புல் வாசிகளுக்கு பாஸ்ஃபரஸ் தொலைதூரத்திலிருந்தாவது தமது சாளரங்கள் வழியே தெரிந்தாக வேண்டும். அது அவர்களுக்கு ஓர் ஆன்மீகக் கௌரவம் சார்ந்த விஷயம். இந்த இஸ்தான்புல் கட்டடங்களின் சன்னல்கள் மசூதிகளின் 'மிஹ்ராபு'கள் போல, கிறித்துவ தேவாலயங்களின் பலிபீடங்கள் போல, ஸினகாக்குகளின் tevans போல கடலையே நோக்கியிருப்பதற்கும் பாஸ்ஃபரஸ்ஸை நோக்கியிருக்கும் அமர்வறைகளின் எல்லா நாற்காலிகளும் சோபாக்களும் உணவு மேசைகளும் கடலை நோக்கியே அமைக்கப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். பாஸ்ஃபரஸ் காட்சிக்காக இவர்கள் எப்படியெல்லாம் சாளரங்களை அமைத்திருக்கிறார்கள் என்பதை மார்மராவிலிருந்து கப்பலில் வரும்போதே பேராசை பிடித்த சன்னல்கள் ஒன்றின் பார்வையை மற்றது மறைத்தபடியும் துருத்திக்கொண்டும், கட்டடமெங்கும் சன்னல் கண்களாகவும் மண்டியிருப்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்."

- இஸ்தான்புல்_ஒரு நகரத்தின் நினைவுகள்

- ஓரான் பாமுக் (தமிழில் - ஜி.குப்புசாமி)

No comments:

Post a Comment