Thursday, 14 March 2024

கோகுல்


தனக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது என நண்பர் கவலைப்பட்டார். என்னென்ன மறக்கிறது எனக் கேட்டேன். சில தகவல்கள், நிகழ்வுகள், இடங்கள், உரையாடல்கள். அன்றாடத்தைப் பாதிக்கும் அளவுக்குச் சிக்கலானதாக மாறவில்லை என்பதால் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றேன். நண்பருக்குச் சமாதானமாகவில்லை.

துல்லியமான நினைவாற்றல் குறித்து நம் சூழலில் ஒருவிதமான பெருமிதம் நிலவுகிறது. அதிலும் ஓர் எழுத்தாளனுக்கு அல்லது எழுத்தாளனாக விரும்புகிறவனுக்கு அதிக நினைவாற்றல் அவசியம். கல்வி என்பதே இங்கே மனப்பாடச் சக்தியை ஒட்டி அமைவதால் ஏற்பட்ட அழுத்தம் இது. நான் ஏகப்பட்ட விஷயங்களை நினைவில் வைத்திருந்தேன். பார்த்தவை, படித்தவை, கேட்டவை, மேற்கோள்கள், மெய்யியல் கூற்றுகள், எழுத்தாளர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், அவர்களது அனுபவங்கள், எந்தப் படம் எந்த ஆண்டு வெளியானது, அதன் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் நடிகையர் குறித்த தகவல்கள், அவர்களது பின்புலம், எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், எந்தெந்தக் கலப்பினம் ஊடாடியிருக்கிறது என எண்ணற்ற தகவல்கள் மூளையில் கொட்டிக் கிடந்தன. ஒரு நடிகையின் பெற்றோர் யார், எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையெல்லாம்கூடச் சேகரித்து வைத்திருந்தேன். கூகுளையோ விக்கிபீடியாவையோ தேட வேண்டிய தேவையே இருந்ததில்லை. 

ஆனால், காலப்போக்கில் சில விஷயங்கள் மறக்கத் தொடங்கின. வயதாவதாலோ, எல்லாமே எளிதாகக் கிடைக்கிற மிதப்பிலோ மூளையின் குப்பைக் கிடங்கு காலியாக ஆரம்பித்தது. திடீரென ஒரு படம் பற்றிய சிந்தனை ஓடும். ஒரு காட்சி மனத்தில் விரியும். அதன் ஒளிப்பதிவாளர் யார் என நினைவைத் துழாவுவேன். முதல் கட்டத்தில் எரிச்சலாகவும் விரக்தியாகவும் இருந்தது. நினைவாற்றல் பிசகுவது குறித்து வருந்தினேன். ஐயோ, இத்தனை நாள் பாடுபட்டதெல்லாம் வீணா என்கிற அங்கலாய்ப்பு வதைத்தது. 

தற்சமயம் அந்தத் துயர மனநிலை ஏதுமில்லை. தகவல் ஏதேனும் மறந்துவிட்டால் மூளையைக் குடைவதுமில்லை. எது மறக்கிறது, எது நினைவில் தங்கியிருக்கிறது என்பதற்கான வேறுபாட்டைக் கண்டறிந்தேன். எந்த விஷயத்தைக் குறித்துச் சிந்தித்திருக்கிறேனோ அல்லது எந்த விஷயம் என்னைப் பாதித்துச் சிந்தனையாக மாறியிருக்கிறதோ அது மட்டுமே மூளையில் படிகிறது. மற்றவற்றைத் தானாகவே மனம் அகற்றிவிடுகிறது. 

ஒரு தகவல் சிந்தனையாக உருமாறியிருந்து அதை நினைவில் வைத்திருந்தாலே போதுமானது. சிந்தனை மட்டுமே முக்கியம், கவைக்குதவாத சாதாரண தகவல்கள் அல்ல.

-கோகுல்

No comments:

Post a Comment