Sunday, 3 March 2024
டிசம்பர் 1947 இந்திய சூழல் குறித்து லண்டனில் பேசிய ஜெனரல் கரியப்பா அவர்கள், அகிம்சையால் எந்த பயனும் விளையாது. வலிமையான இராணுவம் மட்டுமே இந்தியாவை பலப்படுத்தி முன்னேற உதவும் எனக் குறிப்பிட்டிருந்தார்.கரியப்பா அவர்கள் காந்தியை நேரில் சந்தித்ததில்லை. கரியப்பா பேசியதை அறிந்த காந்தி , ஹரிஜன் இதழில் பதிலை எழுதினார். கரியப்பா போன்ற எந்த ஜெனரலாகஇருந்தாலும் அவர்கள் அகிம்சை குறித்து பேசாமல் இருப்பதே உகந்த அறிவாகும். உலகில் இராணுவ அறிவியலும் அதன் நடைமுறைகளும் திவாலாகி நிற்பதை பார்க்கிறோம். பங்கு சந்தை சூதாட்டத்தில் திவாலான ஒருவர், குறிப்பிட்ட வகை சூதாட்டம் சிறந்தது எனப் பேச இயலுமா என காந்தி தன் பார்வையை வைத்தார்.டில்லி திரும்பியவுடனேயே கரியப்பா அவர்கள் காந்தியை சந்திக்க நேரில் சென்றார். காந்திக்கோ அன்று மெளன தினம். கால்ஷூவை வெளியில் வைத்துவிட்டு உள்ளே சென்ற கரியப்பாவிற்கு இருக்கை ஒன்றைக் காட்டி காந்தி அமரச் சொன்னார். காந்தி தன் சர்க்கா வேலையில் இருந்தார். கரியப்பா காந்தி எதிரில் தரையில் அமர்ந்தார்.நான் உங்கள் அகிம்சை குறித்த பேச்சிற்கு பதில் எழுதியிருந்தேனே என பேப்பர் ஒன்றில் காந்தி எழுதி காட்டுகிறார். கரியப்பா முன்முறுவலுடன், என் போன்ற மிகச் சாதாரண ஒருவர் பேசியதையும் பொருட்படுத்தி அதற்கு தன் பதிலைத் தர மகாத்மா நேரம் எடுத்துக்கொண்டதற்கு நன்றி சொல்லவும், குழந்தைகளாகிய நாங்கள் எப்படி அறிந்துகொள்ளவேண்டும் என்பதைப் பெறவும் வந்ததாக கரியப்பா சொல்கிறார்.கரியப்பா இராணுவ வீரர்கள் குறித்த அற்புதமான புரிதலை காந்தி முன் வைக்கிறார். நாங்கள் சபிக்கப்பட்ட இனம். நீங்கள் கூட எங்களை வன்முறையாளர் எனக் கருதக்கூடும்.. உலகிலேயே போரை விரும்பாத கம்யூனிட்டி என்றால் இராணுவ வீரர்கள்தான். வீரர்களாக நாங்கள் யார் மீதும் போர் தொடுப்பதில்லை. மக்களுக்காக எனச் சொல்லப்படும் அரசாங்கங்கள்தான் , தங்களுக்கு இடையேயான தகராறுகளை பேசி தீர்த்துக்கொள்ளமுடியாமல், போர் என பிரகடனப்படுத்துகிறார்கள். அரசாங்கம் சொல்வதை உயிரை கொடுத்தாவது செய்யவேண்டிய கடமைக்காக நாங்கள் வீரர்களை பயிற்சிவிக்க வேண்டியுள்ளது. போரே கூடாது என்கிற அகிம்சையை விரும்பும் அரசாங்கங்களை மக்கள்தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்து விட்டால் வீரர்கள் ஏன் போர் வன்முறையில் இறங்கப்போகிறார்கள் என கரியப்பா விரிவாக தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.In democratic country soldiers do not initiate war..Governments என்கிற பதிலை தந்துவிட்டு , கரியப்பா காந்தியிடம் அறிவுரை ஒன்றை தனக்குத் தருமாறு வேண்டினார்.இரண்டுநாட்கள் கழிந்த பின்னர் முழு யூனிபார்ம் உடன் சென்று கரியப்பா காந்திக்கு சல்யூட் செய்தார். அப்போதும் தான் கேட்ட அறிவுரையை நினைவு படுத்தினார்.I ask you , please, to give me the ‘ child’s guide to knowledge’..tell me please, how can I put this over, that is the spirit of non violence to the troops..without endangering their sense of duty to train themselves well professionally as soldiers. I am a child in this. I want your guidance.கரியப்பா காந்தி முன் மிக நேர்மையாக துல்லியமாக தனக்கு வேண்டிய அறிவுரை ஒன்றை கேட்பதை காந்தி நன்றாக உணர்ந்தார். காந்தி எந்தவித தயக்கமும் இல்லாமல் தன் இயல்பான நேர்மை உண்மைத்தன்மையுடன் பதில் அளித்தார்.Yes you are all my children..I am a child too, but happen to be a bigger child. I have given more thought to this question..You asked me to tell you in a tangible concrete form..I am still groping in the dark for the answer. I will find and I will give it to you some day..எந்த இருட்டான சூழலிலும் இருட்டான கேள்விக்கும் வெளிச்சம் தரும் பதிலைக் காணவேண்டும், காணமுடியும் என்கிற நம்பிக்கையை காந்தி தன் உண்மையை நெருங்குதல் என்கிற பயிற்சியில் பெற்றிருந்தார். இதற்கான தேடலை செய்திட அவர் மனம் அலை பாய்ந்திருக்கும். ஆனால் அவரால் ஜன 30 1948க்கு பின்னர் உடல்ரீதியாக இருக்கவியலாமல் போனது. எந்த அகிம்சைக்கு அரசாங்கத்தின் இராணுவ வீரர்களுக்காக பதிலைத் தேடினாரோ , அந்த அகிம்சை வழியில் இறக்கவே அவர் விரும்பினார்.. துப்பாக்கி முனையால் அவர் தம் வாழ்வு வீழ்த்தப்பட்ட நாடகம் அரங்கேறியது.கரியப்பா போன்ற ஜெனரல்கள் காந்தி பேசிய இராணுவ நடைமுறைகளின் திவாலை உணர்ந்ததால் தான் வீரர்கள் போரை விரும்புவதில்லை..அரசாங்கம் விரும்புவதால் கடமை மட்டுமே ஆற்றுகிறார்கள் என காந்தியிடம் வாக்குமூலத்தை தந்தார். காந்தியை சாய்த்த அந்த குண்டு இன்று இராணுவ வலிமையான மஸ்குலர் பாரதம் என சிரித்துக்கொண்டு இருக்கிறது. கரியப்பாவின் கேள்விக்கான பதில் இன்னும் இருட்டில்தானா எவரிடமாவது அதற்கான சிறு காந்தி அகல் தெரிகிறதா.. கண்டால் சொல்லுங்களேன்-பட்டாபிராம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment