Sunday, 31 March 2024

ஆடுஜீவிதம்


ஆடு ஜீவிதம் திரைப்படம் சொல்வது என்ன? ❤️ 

பென்யாமின் எழுதிய நாவலினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆடு ஜீவிதம். ஆடு ஜீவிதத்தின் பிரதான கதாப்பாத்திரமான நஜீப், தன்னுடைய குடும்பத்தின் பொருளாதார நிலையைச் சீர்செய்வதற்காக சவுதிக்கு வேலை தேடிச் செல்கிறான். நல்ல தங்குமிடமும் வசதியும் கிடைக்குமென்று வேலை தேடிச் செல்கிறான். ஆனால் அங்கு அவனுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக எல்லாம் நடக்கிறது. அவனுக்கு யாருமே இல்லாத பாலைவனத்தில் ஆடுகளைப் பராமரிக்கும் வேலை கிடைக்கிறது. அடிமைப்படுத்தப்படுகிறான். இந்த அடிமைத்தனத்தில் இருந்து அவன் மீள்கிறானா இல்லையா என்பது மிகுதிக் கதை.

முதலில், ஆடுகளைப் பராமரிக்கக் கொண்டுசெல்லப்பட்ட நஜீப், சில காலங்களின் பின் தான் தப்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையே கைவிட்டு ஆடுகளோடு ஆடாகத் தன்னையும் எண்ணிக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறான். ஆடுகளைப் போலவே நீர் அருந்தவும் உணவு உண்ணவும் செய்கிறான். 

இதில் ஒரு மனிதன் அடிமைப்படுத்தப் படுகிறான் என்பதைத் தாண்டி, அவனால் எவ்வளவு தூரம் ஒரு சூழ்நிலையைத் தாக்குப்பிடித்து, அதற்கு இசைவாக்கம் அடைந்து, தனது தப்பிப்பிழைத்தலுக்காகத் துன்பங்களை எல்லாம் கடக்கமுடிகிறது என்கிற வாழ்வியல் ஊக்கமும் சொல்லப்படுகிறது. இந்தப் பொதுவான அம்சம், உணர்வு எல்லாமே பாலைவனத்தில் வேலை தேடிப் போகிற  நஜீபுக்கு மட்டுமல்ல. நமது வாழ்விற்கும் பொருந்தும். ஒரு மனிதன் வாழ்வதற்கு இவ்வளவு துன்பப்படுகிறானா என்கிற கேள்வியும் ஒப்பீடுமே நமது துன்பங்களைக் குறைத்துவிடும். 

இதுபோல் திரைப்படங்கள், Survival  Adventurous  வகையைச் சார்ந்தது. பாலைவனத்தில், வெப்பக் காலநிலை, மணற்புயல், உயிரினங்களின் அச்சுறுத்தல்கள் எல்லாவற்றையும் தாண்டி நஜீப் எப்படித் தப்பிக்கிறான் என்பதைத் திரைப்படத்தில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சவுதியில் இருக்கும் அடிமைத்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள். அந்தத் துன்பத்திலும் அவனுடைய உறவுகளின் நினைப்பு அவனை எப்படிக் கொண்டுநடத்துகிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள். 

இதில் தப்பிக்கவேண்டும் என்கிற உந்துதல் அந்த மனிதர்களை, நீண்ட பாலைவனத்தின் அத்தனை துன்பத்தையும் கடக்க வைக்கிறது. 

Endurance running hypothesis என்று இருக்கிறது. இது உடல் ரீதியாகவே மனிதர்கள் நெடும்தூரம் ஓட உருவாக்கப்பட்டவர்கள் என்று சொல்கிறது. முன்னமெல்லாம் வேட்டையாடும்போது விலங்குகள் களைப்படையும் வரை மனிதனால் நெடுந்தூரம் விரட்டிச் சென்று வேட்டையாட முடிந்தது என்று சொல்கிறது. அதுபோல இவர்கள் தப்பிப்பிழைத்தலுக்காக நெடுந்தூரம் செல்கிறார்கள். We will keep walking until we die என்பான் நஜீபுடன் வரும் இப்ராஹிம். அது அப்படிப்பட்ட பயணம் தான். ஒரு உந்துதல் தேவைப்படுகிற பயணம். உயிருக்கான பயணம். வாழ்வுக்கான பயணம். ஒரு தனி மனிதனின் பயணம். அதை இந்தப் படம் மிக அழகாகக் காட்டியிருக்கிறது.

-சுதர்சன்

No comments:

Post a Comment