Sunday, 10 March 2024

புத்தகம்-8


Reading_Marathon2024
#24RM050

Book no:8/100+

உன்னால் கடக்க முடியும்
-ஓஷோ

பெரும்பாலான தன்னம்பிக்கை நூல்கள் எல்லாமே வார்த்தை ஜாலங்களால் அடுக்கிக் கொண்டு போவார்கள். ஆனால் ஓசோ எப்போதும் தத்துவத்துடன் உண்மை தன்மையை பற்றி மட்டுமே புத்தகத்தில் குறிப்பிடுவார் பேசுவார். என் விரலை கடித்து விடாதே நான் சுட்டிக்காட்டும் இடத்தை பார் என்பது போல அறியாததை நோக்கி மட்டுமே அவர் விரல்கள் காட்டுவார். அப்பாதையை கண்டுபிடித்து நாம் சென்றால் மட்டுமே அறியாமையை நாம் உணர்ந்து அதிலிருந்து கடக்க முடியும். நம்பிக்கை கொள்ளும் மனதை யாராலும் உருவாக்க முடியாது. ஏனெனில் மனதால் சந்தேகப்பட மட்டுமே முடியும். சந்தேகத்தை மறைக்க முடியும். ஆகவே நம்பிக்கையை இதயத்திலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த நம்பிக்கை சந்தேகங்கள் மன உறுதி என்பதையெல்லாம் மதங்களும் மனிதர்களும் எவ்வாறு புரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.. அதிலிருந்து நாம் கற்றுக் கள்ள வேண்டியது என்ன என்பதை, வெளிச்சத்தை இருளில் தேடி கண்டுபிடிப்பது போல இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயம் உண்மையை நோக்கியும் எதார்த்தத்தை வலியுறுத்தியும் பற்பல கதைகள் சம்பவங்களை உதாரணமாக கூறுகின்றன.

எப்போதும் முட்டாள் மனிதர்கள் கேட்பதுண்டு யாரிடம் கற்றுக்கொண்டாய்? என்று. எல்லாருக்கும் இந்த வழி தான் தெரியும். யார் உனக்கு தகவல் தந்தது என்று. நேர் எதிர்வழியில் தெரிந்து கொள்வது பற்றி அவர்கள் அறிய மாட்டார்கள். அதுதான் உண்மையான வழியில் அறிந்து கொள்வது. யாரும் உங்களுக்கு அறிவை புக ட்டுவதில்லை. மேலும் மேலும் உங்களுக்குள்ளேயே நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள்.

உபதேசங்கள் மட்டும் இல்லாமல் அதற்கு தகுந்த ஒரு கதைகளையும் சொல்லும் போது அந்த உபதேசங்களும் மனதில் பதிகின்றன. இதோ ஒரு கதையின் ரயில் வரும் பாதையில் நாய் குறுக்கே ஓடி ரயில் நாயின் வாலைத் துண்டித்து விட்டது. நாய் தன் காயங்களை ஆற்றிக் கண்டு வாலை தேடி அங்கே சென்றது.இன்னொரு ரயில் வந்து நாயின் தலையை துண்டித்தது. ஒரு வால் துண்டை தேடி போக தலையை இழந்து விடாதே என வாழ்வியல் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

அதே போல ஒரு பெரிய ஜோதிடர் மேலே உள்ள நட்சத்திரங்களை பார்த்தவாறு நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் உள்ள கிணற்றில் விழுந்து விட்டார். அந்த வழியே வந்த ஒரு பெண் அவரை காப்பாற்றி விடுகிறார். அதற்கு நன்றிக் கடனாக உன் ஜாதகத்தை என்னிடம் தா உன் வருங்காலத்தை பற்றி உனக்கு தெரிவிக்கிறேன் என்கிறார். அதற்கு அந்த பெண் நீ ஒரு முட்டாள். உன் முன்னாள் ஓரடியில் உள்ளதை கூட உன்னால் பார்க்க முடியவில்லை. வருங்காலத்தை பற்றி உன் கணிப்பை எப்படி நம்ப முடியும். நீ என்னை ஏமாற்ற முடியாது என்று பதில் சொல்கிறாள். ஒரு கற்பனை உலகில் வாழும் நபர்களை பற்றியும் இந்த கதையில் சொல்லி இருப்பார் .பின்னர் இதனை பற்றி விரிவாக உதாரணங்களுடன் விளக்கி இருப்பார்.

கனவின் செயல் உங்களை தூக்கத்தில் வைத்திருக்கும்.எல்லா கனவுகளின் செயல் நோக்கமும் அதுவே தான் .என்றோ ஒருநாள் சமுதாயம் சமமாக வர்க்க பேதம் இன்றி இருக்கும். இதுதான் கற்பனை உலகமான உடோப்பியா. ஒரு நாள் உருவாகும் அதில் துன்பங்கள் இராது. அந்த நாள் பூமி சொர்க்கம் ஆகும். இவை வெறும் கனவுகள். ஆறுதல் அளிப்பவை. சுகம் அளிப்பவை. காயத்துக்கு களிம்பு போன்றவை. ஆனால் களிம்பே இங்கே போலியானது என்பதை நாம் உணர வேண்டும். இரவு போய் விடியல் வரும் ஆனால் இரவு தான் நீடிக்கின்றது. தூக்கம் தொடர்கிறது துன்பங்கள் தொடர்ந்து நிலவுகிறது. வழிபடுதலும் ஒரு வகையான தப்பித்தல் தான் இது அதீத நாகரீகம் உடையது.

ஒரு மனிதன் ஒருவனை பின்தொடர்ந்து சென்று கொண்டிருப்பார். அவன் தடுமாறி கீழே விழுந்து பின் எழுந்து பின் இருப்பவனை பார்த்துச் சொன்னான். எவருமில்லை என்று. இரண்டு பக்கங்களில் இருந்தும் யாரும் இல்லை. அகங்காரம் சுயத்தை நோக்கினால் எவரும் இல்லை. சுயம் அகங்காரத்தை நோக்கினால் எவரும் இல்லை பார்வை ஏற்படும் போது வெறுமனே எவரும். இருப்பதில்லை இருவரும் காணாமல் போய்விடுகின்றனர் .இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது அகங்காரமும் சுயமும் நாம் எப்போதெல்லாம் கீழே விழுகிறோமோ அப்போது இரண்டும் நம்மை பெரிய பூதங்கள் போல் தோன்றி நம்மை உண்மையை அறிய விடாமல் செய்கிறது. ஆகவே இந்த இரண்டையும் மறைபொருளாக இதில் குறிப்பிட்டிருப்பார்

*மனம் உங்களை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தெரு நாய்களைப் போல துரத்தும் குரைக்கும் .ஆனால் நீங்கள் அதை கவனிக்கவிட்டால் மெல்ல மெல்ல இந்த நாய்களை பின்னே விட்டுச் செல்ல முடியும். அந்த குரைப்பு மேலும் தூரமாகி போகும்.

*ஏன் என்ற கேள்வி ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது மேலும் மேலும் தத்துவத்துக்கு இட்டுச் செல்லும் .அது இல்லாமல் தத்துவம் ஒரு தரிசு நிலம்

*மரம் ஒன்றுக்கு சொர்க்கத்தை தொட வேண்டுமானால் அது தன் வேர்களை நரகத்திற்கு அனுப்ப வேண்டும். உங்கள் வேர்களை நரகத்திற்கு அனுப்பாமல் நீங்கள் சொர்க்கத்தில் மலர முடியாது

*என்னைத் தவிர எல்லாரும் புத்திசாலிகளாக இருப்பார்கள் போல நான் குழம்பிப் போய் இருக்கிறேன் நானே முட்டாள் முட்டாளாக இருப்பதை அவர் தெரிந்து கொண்டதால் அவர் அறிவாளியாய் இருக்க முடிகிறது.

*அறியாமையின் அளவு மென்படலமாக இருக்கும் போதே கவனி

*(யின்-யாங்-)ஆண் தொடர்ந்து பெண்ணாகி கொண்டிருக்கிறான். பெண் தொடர்ந்து ஆணாகிக் கொண்டிருக்கிறாள் 
(கல்யாணத்துக்கு அப்புறம் இது உணர முடியுதுங்க)

*தேடல் ஒரு பெரிய வருங்காலத்தை முன் அறிவிக்கிறது. ஒரு மிகப்பெரிய தகவலுக்கு மனிதன் தயாராகிக் கொண்டிருக்கிறான்

*அனைவரையும் நேசி என்பதற்கு எதிரானவர் பிராய்டு. அவருடைய வாதம் எளிமையான பொருளாதார உடையது. நேசம் மெல்லியதாக பரவுவதை பற்றி எழுதும்போது அதீதமான நேச விரிதல் அதன் மதிப்பை குறைத்து விடும் என்கிறார். மனதின் பற்றாக்குறையாலேயே பொருளாதாரம் நிலவியிருக்கிறது.

*ஒருவர் பூ ஒன்றை எடுத்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சுற்றி இருப்பவரிடம் காட்டினால் ஒவ்வொருவரும் பூவைப் பற்றி சொன்னார்கள் ஒருவர் மட்டும் புன்னகைத்தார் பூ விளக்கப்பட வேண்டிய ஒன்றல்ல பூ தன்னிலையிலேயே ஒரு விளக்கம் தான். அங்கேயே இருக்கிறது நாம் அதை ரசிக்க மட்டுமே வேண்டும் எதையும் கூறத் தேவையில்லை.

*நினைவிருக்கட்டும் எல்லா பெரிய உண்மைகளும் எளிதானவை .பொய்கள் எளியவை அல்ல. அவற்றால் அப்படி இருக்க முடியாது

இதுதான் சொல்ல வருகிறார் என்பதனை இப்படித்தான் என்று ஓரிரு வரிகளில் சொல்ல முடியாது. கடலில் பயணம் செய்வது போல ஒரு முழு கடலையும் பார்க்க முடியாது இவரின் புத்தகமும் அப்படித்தான் .எல்லாவற்றையும் ஒரே வரியில் சொல்ல முடியாது. அந்த பெருமழையில் கொஞ்சம் நனைந்த உணர்வு தான் மேலிடுகிறது. ஓஷோவின் புத்தகங்கள் எல்லாமே அப்படித்தான். நமக்கு வேண்டியது இருக்கும் ,முரணும் இருக்கும் .ஆனால் தத்துவார்த்த ரீதியாக ஒரு கருத்தை முன்வைக்கின்ற போது நாமும் அதில் ஒன்றி போய் படித்து விடுகிறோம் தியானம் போல

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment