Friday, 10 March 2017

மகுடேசுவரன்

உங்களிடம் டியூசன் படிக்காத உங்கள் மாணவன்

நான்

உங்களிடம் பள்ளியில் படிக்கிறேன்

ஆனால் நான்

என் சகாக்கள் பலரையும்போல்

உங்களிடம் டியூசன் படிக்கவில்லை


ஐயா

என்னிடம் மாற்றுச் சீருடை இல்லை

இருக்கும் இந்த ஒரே கால்சட்டையும்

விதைப்பை அடியில் கிழிபட்டிருக்கிறது

அதனால்தான் எப்பொழுதும்

கால்கட்டப்பட்டவன் போலவே அமர்கிறேன்


காதறுந்த துணிப்பையில்

என் புத்தகங்களைத் திணித்திருக்கிறேன்

முத்து முத்தான கையெழுத்தால்

நிறைந்து வழியும் என் ஏடுகள்

உங்களைப் பார்த்துப் பரிகாசித்ததை

நான் அறியவில்லை ஐயா !


என் உணவுப் போசியில்

கொஞ்சம் பழைய சோறு இருக்கிறது

எப்பொழுதும் நான்

நான்கு பேர் மத்தியில் உண்ணாமல்

தனித்து மூலையில் அமர்ந்து

வாரி வாரிச் சாப்பிடுவதை

நீங்கள் பார்த்திருக்கலாம்


ஒரேயொரு பழைய பேனா வைத்திருக்கிறேன்

கொஞ்சம் மை கசியும் என்றாலும்

மாவுபோல் எழுதும்

அது காணாமல் போன அன்று

நான் கதறிக் கதறி அழுதேன்

புல்மேயும் ஆடுபோல்

குனிந்த தலை நிமிராமல் தேடி

மைதானத்தில் கண்டெடுத்தபோதுதான்

எனக்கு உயிரே வந்தது.


காலில் செருப்பில்லை.

என்னிடமிருப்பவை

சகிக்கமுடியாத ஏழை அறிவாளியின்

தீட்சண்யம் மிகுந்த கண்கள் மட்டுமே

மறதியறியாத

கத்திக் கூர்மையை ஒத்த

சாம்பல் மூளை மட்டுமே


ஐயா

உங்கள் புறக்கணிப்பின் நெருப்புக்கு மத்தியில்

ஒரு பாவியைப்போல் வளைய வருகிறேன்


காரணமேயில்லாமல்

என்னைக் கடியாதீர்

ஒரு மாணவனை எப்படி நொறுக்குவது என்று

நீங்கள் அறிந்திருப்பதுபோல்

ஓர் ஆசானிடம் எப்படி அணுக்கமாவது என

நான் அறியவில்லை ஐயா !


பாடம் எடுக்கும்போது

என் கண்களையும் ஒருமுறை பாருங்கள் ஐயா !

-மகுடேசுவரன்

No comments:

Post a Comment