கேள்விக்குறி-எஸ்.ரா.
"எனக்குனு யாரு இருக்கிறா ?"
-கட்டுரை.
.
‘‘எனக்குனு யாரு இருக்கிறா?’’
வேறு எப்போதையும்விட நோயுறும்போதுதான் மனதில் அதிகக் கேள்விகள் பிறக்கின்றன. வீடு கற்றுத்தர மறந்ததை, மருத்துவமனைப் படுக்கை கற்றுத்தந்துவிடுகிறது. புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் வந்ததைப் போல, பலருக்கும் வாழ்வின் அருமையும், யார் நமக்கு நெருக்க மானவர்கள், யார் நம்மைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் என்றும் நோயுறும்போதுதான் தெரியத் தொடங்குகிறது.
உடல் குறித்த நமது கவனம் மிக அலட்சியமானது. அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சைக்கிளுக்குத் தரும் முக்கியத்துவத்தைக்கூட நமது உடலுக்கு நாம் தருவதில்லை. இயல்பாக இருக்கும்போது உடலின் அற்புதம் நமக்குப் புரிவதே இல்லை.
வலியின் முன்னால் வயதோ, பணமோ, பேரோ, புகழோ எதுவும் இருப்பதில்லை. வலி,
மனிதனை உண்மைக்கு மிக நெருக்கமாக்குகிறது. தன்னைப் பற்றிக்கொண்டு இருந்த அத்தனைப் பெருமிதங்களையும் ஒரே நிமிஷத்தில் கரைத்து அழித்துவிடுகிறது. நோய் ஒரு வகையில் நம் உடலை மட்டுமல்ல; ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகிறது.
உடல் நோயுறும்போது மனதில் தோன்றும் முதல் கேள்வி, ‘எனக்குன்னு யாரு இருக்கா?’ என்பதுதான். மற்ற எந்த நேரங்களையும்விட சக மனிதனின் நெருக்கமும் அன்பும் அரவ ணைப்பும் மிகத் தேவையாக உள்ள தருணம் அதுதான்!
10 வயதில் காய்ச்சல் காண்பதற்கும் 30 வயதில் காய்ச்சலில் படுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 10 வயதில் காய்ச்சல் கண்டால், மற்ற எல்லோருக்கும் வருவது போல தனக்கும் காய்ச்சல் வந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், 30 வயதிலோ, ‘எனக்கு எப்படிக் காய்ச்சல் வந்தது? எத்தனை நாளில் சரியாகும்? ஒருவேளை சரியாகாமல் போனால் என்ன செய்வது?’ என்று சந்தேகங்களும் கேள்விகளும் நீரூற்றைப் போல பொங்கி வழியத் தொடங்குகின்றன.
அதைவிட, திடீரென உலகின் இயக்கத்திலிருந்து தான் துண்டிக்கப்பட்டுவிட்டதைப் போலவும், இப்படியே சில நாட்கள் கடந்து போனால் தன்னை உலகம் அடியோடு மறந்து விடும் என்பது போலவும் நோயாளி நினைக்கத் தொடங்குகிறான்.
உலகிலேயே மிகப் புரிந்துகொள்ள முடியாதது நோயாளிகளின் கோபம். உண்மையில், அவனது கோபம் மனிதர்களிடம் இல்லை. தன் உடலுக்குள் நடக்கும் புரியாத மாற்றங்களின் மீதான கோபத்தை அவன் தனக்கு நெருக்கமான மனிதர்களின் மீது காட்டுகிறான்.
மனைவியும் குழந்தைகளும் சகோதரர்களும் தான் படுக்கையில் கிடக்கும்போது இயல்பாகக் குளித்து, சாப்பிட்டு, காபி குடித்து தன் நாட்களைக் கழிக்கிறார்களே என்ற ஆத்திரம் பொங்கி வருகிறது. தனக்காக மற்றவர்கள் வருத்திக்கொள்ள வேண்டும் என்று நோயாளி ஆசைப்படுகிறான்.
நோயுறும்போது ஆணுக்குக் கிடைக்கும் அன்பும் அக்கறையும் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. பெண் நோயுறும் குடும்பங்களில் அது தேவையற்ற ஒரு பிரச்னை என்றே கருதப்படுகிறது. மனைவியோ, சகோதரியோ நோயுற்ற நேரங்களில் உடன் இருந்து அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் ஆண்கள் மிக சொற்பமானவர்களே!
நோய், நம் வயதை வேறு எந்த சந்தர்ப்பத்தையும்விடத் துல்லியமாக அடையாளம் காட்டிவிடுகிறது. அழுவதற்கு வயது தடையாக இருப்பதை நோயாளி பல நேரங்களில் உணர்கிறான். ஆனால், வயதை மீறி உடல் தன் இயல்பில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் துவங்கிவிடுகிறது. நோயாளியின் அழுகை, வலியால் மட்டும் ஏற்படக்கூடியதல்ல!
சில ஆண்டுகளுக்கு முன், சைதாப் பேட்டையிலிருந்த ஒரு நண்பனைக் காணச் சென்றபோது, அவனது அறைக் கதவு பாதி சாத்தப்பட்டு இருந்தது. கதவை தள்ளித் திறந்தபோது, ஜன்னலை ஒட்டி ஒரு பாயை விரித்து ஒரு ஆள் அழுக்கான வேஷ்டியை மூடிப் படுத்துக்கிடப்பது தெரிந்தது.அருகில் சென்று பார்த்தும், அவர் யார் என்று தெரியவில்லை.
பாய் முழுவதும் வாந்தி எடுக்கப்பட்டு, அதிலேயே அவர் படுத்துக் கிடப்பது தெரிந்தது. தலையணையில் எச்சில் உறைந்திருந்தது. ஏதோ உடல்நலமில்லை என்பது பார்த்த நிமிஷத்திலேயே தெரிந்தது. அவரை எழுப்பி உட்காரவைத்தேன். மஞ்சள் பூத்த கண்களோடு, மிக மெலிதான குரலில், ‘ஒரு டீ வாங்கித் தர முடியுமா?’ என்று கேட்டார்.
அருகிலிருந்த கடையில் டீ வாங்கி வந்து தந்தேன். அவரால் குடிக்க முடியவில்லை. உட்கார்ந்த நிலையில் வாந்தி எடுத்தார். அடிவயிறு பிடித்துக் கொண்டது போல, அவரது கண்கள் பிதுங்கின. வலியில் அவர் புலம்பினார். அப்போதுதான் கவனித்தேன், அவர் படுத்திருந்த பாய் முழுவதும் மஞ்சளாகியிருந்தது. அவரது உள்ளங்கையில்கூட மஞ்சள் படர்ந்திருந்தது.
மஞ்சள்காமாலை கண்டிருப்பது புரிந்தது. உடனே, அவரைப் பொது மருத்துவமனைக்கு அழைத்துப் போய்ச் சேர்த்துவிட்டு, அறையில் இருந்த மற்ற நண்பர்களுக்குத் தகவல் கொடுத்தேன்.
ஆனால், அவர் தங்கள் அறையைச் சேர்ந்தவர் இல்லை என்றும், பழைய மேன்ஷனில் இருந்த நபர் என்றும், குடித்துவிட்டு வந்து அதிக தொல்லை தரக்கூடியவர் என்றும் சொல்லி ஒதுங்கிக்கொண்டார்கள்.
ஒரு வார காலத்துக்கு மருந்தும் உணவும் முறையாகத் தரப்பட்ட போதும், அவர் நோயிலிருந்து விடுபடவேயில்லை. அவரைப் பற்றிய தகவலை அறிந்தவர்கள், நண்பர்கள் எனப் பலருக்கும் சொல்லியபோதும் யாரும் அவர் மீது அக்கறை எடுத்து அருகில் இருந்து பார்க்கத் தயாராக இல்லை.
நோயாளியாக இருப்பதைவிடவும், நண்பர்கள் இல்லாமல் இருப்பதுதான் தான் செய்த தவறு என்ற குற்ற உணர்வு அவரை துவளச் செய்யவே, என்னோடும் பேச மறுத்தவரைப் போல ஒடுங்கிப்போயிருந்தார். அவருக்குத் தேவை மருந்து மட்டுமல்ல; ஆரோக்கியமான உணவும் அருகிலிருந்து கவனிக்கும் அக்கறையான உறவுகளுமே என்று மருத்துவர்கள் சொன்னபோது, அதெல்லாம் சாத்தியமில்லை என்று மறுத்திருக்கிறார்.
மருத்துவமனையிலிருந்து ஊருக்கு அனுப்பிவைக்கும் நாளில் அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு நன்றி சொன்னபடியே ‘‘நண்பர்கள், தெரிந்தவர்கள்னு எவ்வளவு பேரை டிஸ்டர்ப் பண்ணியிருக்கேன்னு இப்போதான் புரியுது. இத்தனை நாள் வாழ்ந்ததுக்கு என்ன சம்பாதிச்சு வெச்சிருக்கேன். பத்து பேர் வாயில் விழுந்ததைத் தவிர, வேறு ஒண்ணுமே இல்லை. இவ்வளவு பெரிய ஊர்ல எனக்குனு ஒரு ஆள்கூட இல்லை. அவமானமா இருக்கு’’ என்று கூசிப்போனார்.
வாழ்க்கை, தன்னைப் புரியவைப்பதற்குச் சில நிகழ்வுகளையும் தருணங்களையும் ஏற்படுத்துகிறது போலும்! உடலில் தோன்றிய நோய் கால மாற்றத்தில் நீங்கிவிடக்கூடும். ஆனால், நோய்மை ஏற்படுத்திய புரிதல் வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கக்கூடியதல்லவா?
ஜோர்டான் நாட்டில், ஒரு கதைஇருக்கிறது. இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தார்கள். வெயிலும், எல்லையற்றுப் பரந்த மணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின. கையில் வைத்திருந்த தண்ணீரையும் உணவையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள். இருவரில் பணக் காரனாக இருந்தவன், தனது உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல்கொண்டான். அதனால், நண்பனுக்குத் தராமல் அதிக உணவை, தானே சாப்பிடத் தொடங்கினான். அது போல, தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான். தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தபோதும், ஏழ்மையிலிருந்த நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.
பாலைவனத்தில், ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அதில் உதிர்ந்த பழங்களை எல்லாம் ஏழை ஓடிப் போய் பொறுக்கிச் சேகரித்தான். பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறிக்க, ‘உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே... பிறகு, ஏன் இதைப் பறிக்கிறாய்?’ என்று கேட்டான் ஏழை.
பணக்காரன், ‘அப்படியானால், நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா?’ என்று சண்டையிட்டு, ஏழையின் முகத்தில் ஓங்கி ஒரு அடி அடித்தான். அந்த நிமிஷமே இருவரும் பிரிந்து, தனித்தனியே நடக்கத் தொடங்கினார்கள். வலியும் அவமானமும் கொண்டவனாக, பாலைவனத்தின் மணலில், ‘இன்று நண்பன் என்னை அடித்துவிட்டான்’ என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடக்கத் துவங்கினான் ஏழை.
சில நாட்கள் இருவரும் தனித் தனியாக நடந்து, தண்ணீர் கிடைக்கா மல் அலைந்து திரிந்தார்கள். அப் போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் கசிவதைக் கண்டு பணக்காரன் ஓடிச் சென்று தண்ணீர் குடிக்க முயன்றான். திடீரென நண்பனின் நினைவு வந்தது. ‘இவ்வளவு காலம் பழகிய நண்பனை, ஒரு கஷ்டம் என்று வந்ததும் ஏமாற்றிவிட்டோமே’ என்று தோன்றியதும், நண்பன் பெயரைச் சொல்லிச் சத்தமிட்டு அழைத்தான்.
அந்தக் குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன், அங்கே தண்ணீர் இருந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான். பணக்காரன், ‘இதில் உள்ள தண்ணீரை ஒருவன் மட்டுமே குடிக்க முடியும். நீயே குடித்துக்கொள்’ என்றான். உடனே ஏழை, தாகம் மிகுதியில், அந்தத் தண்ணீரை முழுவதும் குடித்துவிட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.
பின், இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினார்கள். ஏழை, அங்கிருந்த ஒரு கல்லில், ‘நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்’ என்று எழுதி வைத்தான். இந்த இரண்டையும் வானிலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த தேவதை அவர்கள் முன் தோன்றி, ஏழையிடம், ‘அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய். உதவி செய்தபோதோ அதைக் கல்லில் எழுதிவைக்கிறாய். அது ஏன்?’ என்று கேட்டது.
‘நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை. அதனால், அதை மணலில் எழுதிவைத்தேன். ஆனால், செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது. ஆகவே, அதைக் கல்லில் எழுதிவைத்தேன்’ என்றான் ஏழை என்பதாக முடிகிறது கதை.
உலகில் எந்த மனிதனும் தனியாள் இல்லை. அவனது செய்கைகளும் வெறுப்பும் கோபமுமே அவனைத் தனிமைப்படுத்துகின்றன. வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தையல்ல; மனித உறவுகளையே!
.
நன்றி -www.vikatan.com
No comments:
Post a Comment