Saturday, 4 March 2017

வே.நி.சூர்யா

தனக்கு மனநோய் இருக்கிறதென தெரிந்து கொண்ட அவன் மகிழ்ச்சியில் குதிக்கிறான்
அவன் கண்களில் இருந்து மங்கலாக காட்சி தரும் உலகம் தன் தோகையை விரிக்கிறது
அவன் புத்திக்குள் இருபது வருட நீள தூக்கு கயிறு நாய் வாலென அசைகிறது
அவன் நிழலிலிருந்து ஒரு நிழல் முளைத்து கத்தியெடுத்து குத்துகிறது
அவன் பார்க்கும் கண்ணாடியிலிருந்து அவன் உருவம் இடிந்து தரைமட்டமாகிறது
அவனுடைய தனியறையின் சுவர்கள் தனக்கு தானே பேசிக்கொள்ள தொடங்குகின்றன
அவன் கனவிலிருந்து அவன் தூக்கம் எழுந்து அவனை வதைக்கிறது
ஆனாலும் அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறான்
கூடவே
ஒரு மழலை போல மனநோயும் துள்ளிக்குதிக்கிறது

No comments:

Post a Comment