நன்றி :பாரத்பாரதி
💥என் விரோதியின் மரணச்செய்தியை
காலம்ஒரு ராஜாளியைப்போல்
என் தோள்களில் அமர்த்துகிறது
பத்தாண்டுகளுக்குப்பிறகு
அவன் படியேறுகிறேன்
வெடித்துச்சிதறும் அழுகையும்
வெந்தழல் குழம்பாய் கண்ணீரும்
உருகியோட துயரவீட்டின் மையத்தில் கிடத்தியிருந்தார்கள் அவனை
💥தினவெடுத்த தோளில் மிச்சமிருக்கும்
அவன் வாழ்நாட்கள் அகாலத்தின்
அர்த்தம் புரிய வைத்தது
உப்பிய உதட்டில் என்னை நிந்திக்கும்
சொற்களிருக்கலாம்
விரோதிக்காக முதல்முறை
என் கண்கள்
ஒரு கவிதைக்குப்போதுமான
மையைச் சுரக்கிறது
கசிவுகளுக்குப்பிறகான
ஆசுவாசங்களோடு வெளியேற
எத்தனிக்கையில் நான் கண்டிருக்கக்கூடாது
அவன் அலமாரியிலிருந்த
கைதட்டும் குரங்குபொம்மையை
- நிலாகண்ணன்
No comments:
Post a Comment