Saturday, 17 July 2021

124 ஆண்டு கால வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை! - ஒலிம்பிக் 2021 துளிகள்


The most important thing in the Olympic Games is not winning but taking part; The essential thing in life is not conquering but fighting well
Barren Pierre de coubertin

ஒலிம்பிக் போட்டி என்றவுடன் சட்டென நினைவுக்கு வருபவை இந்த வரிகளே. ஜெஸி ஓவன்ஸையும், லஸ் லாங்கையும் பள்ளி வயதில் அறிமுகம் செய்தவை ஒலிம்பிக் போட்டிகளே. ஒவ்வொரு விளையாட்டு வீரனின் கனவுகளை நனவாக்குபவை இப்போட்டிகளே.

முதல் ஒலிம்பிக் போட்டி 1896ல் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

கோடைகால ஒலிம்பிக் போலவே 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக்கும் நடத்தப்பட்டு வருகின்றன


1994 முதல் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டு கழித்து குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதுவரை மொத்தம் 31 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.


தற்போது ஜப்பானின் டோக்கியோவில் ஜூலை 23 முதல் துவங்கும் போட்டியானது 32வது போட்டியாகும். ஒட்டு மொத்தமாக 339 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. டோக்கியோவின் 32வது ஒலிம்பிக்கை ஜப்பான் பேரரசர் நாருஹிடோ துவக்கி வைக்கும் போட்டி, ஜப்பானின் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

ஆயிரம் முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மார்ச் 25 அன்று ஜப்பானின் புகுஷிமாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு அதற்கான தொடர் ஓட்டம் ஆரம்பமானது.

ஜூலை 23 அன்று வில்வித்தை உள்ளிட்ட சில போட்டிகள் துவங்கினாலும் தடகள போட்டிகள் பெரும்பகுதி ஜூலை 24 சனிக்கிழமையன்று தொடங்குகிறது.


16 நாட்கள் நடைபெறும் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. கடந்த 124 ஆண்டு கால ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ளது. முன்பு 1940 இல் இதேபோல டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்கின் பாரம்பரியம் கிரேக்கத்தில் நடைபெற்ற பண்டைய ஒலிம்பிக்கில் இருந்து பெறப்பட்டது. ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை விளையாட்டுகளை நடத்துவதற்கான கால இடைவெளி ‘ஒலிம்பியாட்’ என்று அழைக்கப்படுகிறது.


ஒலிம்பியாட் சுழற்சி ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நாளில் தொடங்கி நான்காம் ஆண்டில் டிசம்பர் முப்பத்தியோராம் தேதி முடிவடைகிறது. கொரோனா காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பின் ஐந்தாவது ஆண்டில் நடக்க இருக்கிறது.1916,1940,1944ம் ஆண்டுகளில் உலகப்போர் காரணமாக நடைபெறவில்லை.2024 கோடைகால விளையாட்டுக்கள் பாரிஸிலும், 2028 இல் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறும்.

#ஒலிம்பிக் சின்னங்கள்


ஒலிம்பிக் என்றவுடன் முதலில் நினைவுக்கு ஐந்து வளையங்களுடைய ஒலிம்பிக் கொடி ஆகும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ’பியரி டி கூபர்டீன்’ என்பவரால் 1912ஆம் ஆண்டு, இந்த கொடி உருவாக்கப்பட்டது.


ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஒருங்கிணைந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து கண்டங்களை குறிப்பதாக ஒலிம்பிக் சட்டத்தின் 8ஆவது விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதில் உள்ள நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை ஆகிய 6 நிறங்களில் ஏதாவது ஒரு நிறமாவது ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் தேசியக் கொடிகளிலும் இடம் பெற்றிருக்கும் என்பதாலேயே, இந்த நிறங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.


Immortal spirit of antiquity என்று துவங்கும் பாடலை கிரேக்க பாடலாசிரியர் கோஸ்டிஸ் பலமாஸ் எழுதி சமராஸ் இசையமைத்த இப்பாடலே ஒலிம்பிக் கீதமாகும். சிடியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் எனும் இலத்தின் மொழி சொற்கள் ஒலிம்பிக்கின் தாரக மந்திரமாகும். தமிழில் "வேகமாய், உயர்வாய், வலுவாய்"என மொழிபெயர்த்தால் கிடைப்பது.

ஒலிம்பிக் போட்டியில் ரொக்கப்பரிசு கிடையாது. தங்கம், வெள்ளி, வெண்கலப் பரிசுகள் வழங்கப்படும். பதக்கத்தில் கிரேக்க பெண் கடவுள் நைக்கியின் பெயர் இருக்கும்.


நீலம், சிகப்பு என இரண்டு நிறம், இரண்டு அமைப்புகளில் ஒலிம்பிக் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் Miraitowa என பெயரிடப்பட்டுள்ள நீல நிற சின்னம் ஒலிம்பிக் தொடருக்கும், Someity என பெயரிடப்பட்டுள்ள சிகப்பு நிற சின்னம் பாராலிம்பிக் தொடருக்கும் ஆகும்.


1980 ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் சின்னங்கள் அந்நாட்டின் சிறப்பை விளக்கும் வகையில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


#ஒலிம்பிக் துளிகள்


*ஒலிம்பிக் பதக்க நிகழ்ச்சியின் போது பங்கேற்பாளர்கள்,பதக்கம் வழங்குவோர் என யாரும் போட்டோ எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்


*206 நாடுகளை சேர்ந்த 11000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

*இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியினர் நிறவெறிக்கு எதிராக முதல் ஆட்டத்தின் போது முழங்காலில் சிறிது நேரம் நிற்க உள்ளனர்.

*வில்வித்தை, தடகளம், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டெபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் கலப்பு பிரிவில் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.


*டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.அவற்றில் நான்கு இந்த ஒலிம்பிக்கில் அறிமுகமாகிறது.. கராத்தே, ஸ்கேட்டிங்,sport climbing, surfing

ஆகியவற்றோடு 13 ஆண்டுக்கு முன் நீக்கப்பட்ட பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் சேர்க்கப்பட்டுள்ளது.


*கிரிக்கெட் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போட்டிகள் ஒலிம்பிக்கில் நடத்தப்படுவதில்லை.


*டிராக், நீச்சல், டிரையத்லான், வில்வித்தை மற்றும் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட கலப்பு பாலின அணிகளுக்கான ரிலேக்கள் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் இந்த வருடம் நடைபெற உள்ளது.


*கொரொனா காரணமாக இரு அணிகளும்.. ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை எனில் இரு அணிகளுக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


#இந்தியா


19ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இந்தியா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று வந்துள்ளது.இதுவரை 9 தங்கம், 7 வெள்ளி,12 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளது. ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் (1920,1924,1976,1984,1988,1992) பதக்கமின்றி நாடு திரும்பியுள்ளது. ஜப்பானின் டோக்கியோ 2021 ஒலிம்பிக்கில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் என 119பேர் 16பிரிவுகளில் 85 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானால் உருவாக்கப்பட்ட Hindustani Way எனும் பாடலை அனன்யா, நிர்மிகா சிங்,சிஷிர் சமந்த் எழுத அனன்யா பாடியுள்ளார். துவக்க விழாவில் இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் செல்வர்.

நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 119 வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் அடங்குவார்கள். 85 பந்தயங்களில் நமது அணி பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அதிக எண்ணிக்கை கொண்ட இந்திய அணி இது தான்.

*ஆறு முறை சாம்பியனான மேரி கோம் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டி இது.


*மஹாராஷ்டிராவை சேர்ந்த தீபக் காப்ரா ஜிம்னாஸ்டிக் அம்பயராக ஒலிம்பிக்கில் பணியாற்ற உள்ளார்.


*இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மற்ற விளையாட்டு தூர்தர்ஷனிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைன் பார்வையாளர்களுக்கு, சோனி எல்.ஐ.வி.யில் நேரலையில் இருக்கும்.


*தமிழகத்தில் இருந்து 12 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.பவானி தேவி (ஃபென்சிங்); சத்தியன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்); சரத் ​​கமல் (டேபிள் டென்னிஸ்); நேத்ரா குமனன், கணபதி, மற்றும் வருண் (படகோட்டம்); அரோக்கியா ராஜீவ், நாகநாதன் பாண்டி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி (ரிலே ரேஸ்); மற்றும் மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்).


*தமிழக வீரர்கள் 12 பேருக்கும் ஊக்கத் தொகையாக ஐந்து இலட்சம் தமிழக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
*டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 3 கோடி அறிவித்துள்ளன

இந்த ஆண்டு பதக்கங்கள் விளையாட்டு வீரர்களின் கழுத்தில் அணிவிக்கப்பட மாட்டாது. மேடைக்கு முன் பதக்கங்கள் கொண்டு வரப்படும். அவர்களே எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். குழு புகைப்படம் எடுக்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமாதானத்திற்காகவும், நட்புறவின் அடிப்படையிலும் நடைபெறும் இப்போட்டிகள் எவ்வித இடர்பாடும் இன்றி நடந்து முடிய வேண்டுமென பிரார்த்திக்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.ஒவ்வொரு வீரர்களும் தாய்நாட்டின் பெருமையினை உலகளவில் பறைசாற்ற காத்துள்ளனர்.

உலகமே இவர்களின் வெற்றியை உற்று நோக்கி கரவொலி எழுப்ப எதிர்பார்த்துள்ளனர்.


"முதல் அடியிலும், முடிவு அடியிலும் ஒரே விழிப்புணர்வுடன் இருப்பவனுக்கே சிகரங்கள் சாத்தியம். அதில் ஏறிய பிறகு அவனே சிகரமாகி விடுகிறான்" எனும் வெ.இறையன்புவின் வரிகள் விளையாட்டு வீரர்களுக்கே முழுவதும் பொருந்துகிறது.

திறமையின் மூலம் வெல்லும் அனைவரும் போற்றதலுக்குரியவர்களே! அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவராயினும் வணக்கத்திற்குரியவர்களே! வரவேற்க காத்திருப்போம்.

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment