Friday, 30 July 2021

ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம், தர்மம் ஒன்றுதானே? - பாரத் பெட்ரோலியம் விவகார பின்னணி


ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்றால் உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது
விக்டர் ஹியுகோ

"Pure for sure" இந்த வார்த்தைகளை அறியாத வாகன ஓட்டியே இல்லை எனலாம். ஒற்றை விரலில் அற்புதம் எனச் சொல்லும் குறியீடு போல பாரத் பெட்ரோலியம் லோகோவை பார்த்திருப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை சிறந்த தரமான எரிபொருள்கள், மற்றும் சேவைகளுடன் பூர்த்தி செய்வதை "நிச்சயமாக தூய்மையானது" எனும் உத்தரவாதத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் விதத்தில் இருக்கும். இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனத்தைத் தொடர்ந்து நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் பாரத் பெட்ரோலியம் கழகம் (BPCL) ஆகும்.


மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்துக்கு மும்பை, பினா, நுமாலிகார்க், கொச்சி ஆகிய இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கின்றன.1920ம் ஆண்டு துவங்கப்பட்ட பர்மாஷெல் கூட்டு நிறுவனம், ஜனவரி 24, 1976 அன்று, பர்மா ஷெல் குழும நிறுவனங்கள் இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டு நூறு சதவீத பங்குகளை மத்திய அரசு வாங்கியது. ஆகஸ்ட் 1, 1977 அன்று, இது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டது. நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட முதல் சுத்திகரிப்பு நிலையம் இதுவாகும்


BPCL நிறுவனம் 1992ல் சில்லறை விற்பனை நிலையங்களை ஆரம்பித்தது.1994ல் பிற நிறுவனங்களுடன் இணைந்து லூப்ரிகன்ட் ஆயில் விற்பனையிலும் இறங்கியது. சமையல் எரிவாயுவில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்று.பிபிசிஎல் 2.1 கோடி உஜ்வாலா வாடிக்கையாளர்கள் உட்பட 8.4 கோடிக்கும் மேற்பட்ட உள்நாட்டு எல்பிஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நாடு முழுவதும் 15079 பெட்ரோல் நிலையங்களும், ஆறாயிரத்துக்கு மேற்பட்ட எல்பிஜி முகவர்களும், 13000 நிரந்தரத் தொழிலாளர்களும் இருக்கின்றனர்.


நாட்டின் பெட்ரோலிய உற்பத்தியில் 24 சதவிகிதத்தை கொண்டுள்ளது BPCL. மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த நிதியாண்டில், பங்கு விற்பனையின் பின்னணியில் பிபிசிஎல் பதிவுசெய்த நிகர லாபம் ரூ 19,041.67 கோடியாகும். ஜனவரி-மார்ச் காலாண்டில், நிகர லாபம் ரூ .2,777.62 கோடிகள் ஆகும்.


#தனியார்மயம்

இந்தியாவில் லாபம் வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் மத்திய அரசுக்கு இருக்கும் 53.29 பங்குகளை தனியாருக்கு விற்க, கடந்த 2019 ல் செப்டம்பர் 30ம் நாள் முதலீட்டாளர் குழுவின் ஒப்புதல் பெற்று,2020 மார்ச் 31க்குள் பங்குகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் கொரொனா தொற்று காரணமாக இதைப் பற்றி பேசாததால் நிம்மதியடைந்திருந்த நிலையில் மீண்டும் பட்ஜெட்டில் பாரத் நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் 1.05 இலட்சம் கோடி நிதி கிடைக்கும் என கூறப்பட்டது.


பங்குகளை வாங்க வந்த நிறுவனங்கள் நூறு சதவிகித பங்குகளையும் வாங்க உத்தேசித்துள்ளதாக கூறியது. பூனைகளை விட புலிகள் வலிமையானவை என எலிகள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை என்பது போல உடனே மத்திய அரசு ஒப்புக்கொண்டு நூறு சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதித்தது. வாஜ்பாய் காலத்தில் BPCL மற்றும் HPCL நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சி செய்தது. BPCL நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு முன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அனுமதியை பெறுதல் அவசியமென்று உச்சநீதிமன்றம் 2003ம் ஆண்டு தீர்ப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவால் HPCL ன் 34.1%பங்குகளை விற்காமல் தடுக்கப்பட்டது.


தற்போதைய குளிர் கால கூட்டத் தொடரில் நூறு சதவிகித அந்நிய முதலீட்டுக்கான அனுமதியை அளித்துள்ளது. பங்குகளை வாங்கும் நிறுவனமே ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கவனிக்கும் எனவும் அறிவித்தது.

ஒரு நிறுவனம் அரசாங்க நிறுவனமாய் இருக்கும் போது மக்களும் நிறுவனங்களும் ஆர்வத்துடன் முதலீடு செய்வர். அதுவே பெட்ரோலிய நிறுவன பங்குகளைத் தனியாருக்கு விற்பதன் மூலம், அந்த நிறுவனம் தனது மதிப்பீட்டை இழக்கும் என்று தரக் குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ (Moody's) எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


(எந்த முதலீட்டாளரும் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன் தாங்கள் முதலீடு செய்யப்போகும் நாட்டுக்கு மூடிஸ், பிட்ச், எஸ்&பி போன்ற நிறுவனங்கள் அளி்த்துள்ள கிரேட்(தரம்) என்ன என்பதை கவனித்து ஆய்வு செய்தபின்புதான் முதலீடு செய்வார்கள்) இதன் காரணமாக பங்குகளின் மதிப்பு குறையும். பொருளாதார பாதிப்பு ஏற்படும்)


பணமாக்குதல் அல்லது நவீனமயமாக்குதல் எனும் கருத்துப்படி மத்திய அரசு செயல்படுகிறது.சர்வதேச் முதலீட்டாளர்களை ஈர்க்க BPCL பங்கு விற்பனை மூலம் அந்நிய முதலீட்டை விரிவுபடுத்தியுள்ளது மத்திய அரசு. வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுள்ள அனில் அகர்வாலின் வேதாந்தா, திங்க் கேஸ் மற்றும் அப்பல்லோ மேனேஜ்மென்ட் போன்ற நிறுவனங்கள் பங்குகளை வாங்க முன்னனியில் இருக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்கின்றனர்.

பாரத் பெட்ரோலிய நிறுவனம் என்பது மக்களின் சொத்து. இதன் மூலம் கிடைக்கும் பங்கு தொகை பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.ஏற்கனவே ஒன்றிணைத்தல், துணை நிறுவனங்களாக மாற்றி வருவதாக கூறுகின்றனர். தற்போது தனியாருக்கு அளிக்கும் போது விலை நிர்ணய உரிமை அனைத்தும் தனியார்வசமே சென்றுவிடும். கடந்த ஆண்டில், ’பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு, மானியம் தொடர்ந்து வழங்கப்படும்’ என அறிவித்தது மத்திய அரசு. ’பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய நேரடி முதலீடு உதவும். அதன் படி அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை உருவாக்கியுள்ளனர்’ என்றும் தெரிவித்தது.


இந்த நிதி ஆண்டில் பொதுத்துறை பங்குகள் மூலம் 1,75,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் வளர்ச்சிப்பாதையில் செல்ல முடியும் என்கின்றனர்.திறம்பட நிர்வகித்தால் இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனம் மூலமே சாத்தியப்படும் என்கின்றனர் சிலர். ஏற்கனவே HPCL ன் பங்குகளை பொதுத்துறை நிறுவனங்களுக்கு உள்ளேயே மாற்றிக் கொடுத்ததில் என்ன ஆனது எனக் கேட்கின்றனர் வல்லுநர்கள்.


"ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம் ஆனால் தர்மம் ஒன்றுதான்" என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது. வருங்காலத்தில் தான் இதற்கான விடைதெரியும்.


-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment