09.10.2017
*நூலேணி* படி- 1
திங்கட்கிழமை
*நான் மலாலா*
மலாலாவின் சிறப்பு;
2014 ம் ஆண்டின் உலக அமைதிக்கான நோபல் பரிசு மலாலா என்ற 17 வயது பாகிஸ்தான் சிறுமிக்கு வழங்கப்பட்டது. ஒரு மிகச்சிறந்த விருது, ஒரு மிகச்சிறந்த பெண்மணிக்கு ஒரு மிகச்சிறப்பான காரணத்திற்காக உலகின் உயரிய விருதாக அளிக்கப்பட்டதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்த நிகழ்வு அது! உலகம் முழுவதுமே வரவேற்ற இந்த நிகழ்வின் முக்கிய அம்சம் விருது பெற்றவர் வயதில் மிகவும் இளையவர்.மேலும்,
மலாலாவின் துணிச்சலுக்காகவும், சிறந்த சொல்வன்மைக்காகவும் பாகிஸ்தானின் தேசிய அமைதிப்பரிசு வழங்கப்பட்டது. சர்வதேசக் குழந்தைகள் அமைதிப்பரிசு, மற்றும் 2013 ம் ஆண்டின் சிறந்த நபருக்கு உண்டான பட்டியலில் டைம்ஸ் பத்திரிக்கையில் இடம் பெற்றது, என புகழின் உச்சத்துக்கே சென்ற இந்த மலாலா யார்?
தெரிந்து கொள்வோமா?
"மலாலா யூசுஃப்ஸை" என்ற முழுப்பெயர் கொண்ட இந்த சிறுமி, பெண்களின் கல்விக்காகப் போராடிய போது, தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட ஒரு சிறுமி. மிக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த சிறுமி எழுதிய புத்தகம்,
"நான் மலாலா"
( IAM MALALA ). இணைந்து உடன் இந்த நூலை எழுதியவர் 'கிரிஸ்டினா லாம்ப்' என்ற உலகின் தலைசிறந்த வெளிநாட்டுத் தொடர்பாளர் என்ற விருதினை 5 முறை பெற்ற "சண்டே டைம்ஸ்" பத்திரிகையில் பணியாற்றும் பத்திரிக்கையாளர். மிகவும் சுவாரசியமான இந்தப்புத்தகத்தை படிப்பது ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை தருகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
தீபாவளி என்பது தீயவை அகன்று நல்லது நடக்கும், இருள் அகன்று ஒளி பிறக்கும் என்பது ஐதீகம். இதைப் போல பெண் கல்வியறிவு பெற்று ஒளி பிறக்க, சாதனை புரிந்த இந்த மலாலாவின் வாழ்க்கையைப் பற்றிய இந்நூலை சென்ற வருட தீபாவளியன்று படிக்கும் வாய்ப்பு கிட்டியது, ஒரு எதேச்சையான நிகழ்வு.
ஒரே மூச்சில் படித்து முடிக்கும்படியான விறுவிறுப்பான ஒரு சுயசரிதம்.
அநீதி இழைக்கப்பட்டு, வாயடைக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இந்தப்புத்தகம் காணிக்கை என்ற சமர்ப்பணத்தோடு ஆரம்பிக்கும் இந்நூல் ஒலிக்கும் குரல் மிக சத்தமாக உலகில் உள்ளோர் அனைவரது காதுகளையும் சென்று தாக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துகிறது.
இந்த சிறுமியின் குறிக்கோள் மகத்தானது. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்க உரிமை உள்ளது என்பதே அது!
அந்த நாள்;
உலகத்தின் இருண்ட பகுதியில் வசித்து வந்த மலாலா உலகம் முழுவதும் பிரபலமான அந்த நாளின் நண்பகல் பொழுது. 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி டொயோட்டா டிரக் வண்டி ஒன்றில் 20 மாணவிகளும், 3 ஆசிரியைகளையும் ஏற்றிக்கொண்டு தூரத்தே தெரியும் ஹிந்துகுஷ் மலையின் உச்சியில் படர்ந்திருந்த பனித்தொப்பியை பார்த்தவாறு தேர்வு அட்டைகளையும், புத்தகப்பையையும் காலிடுக்கில் அணைத்தவாறு சென்று கொண்டிருந்தனர், சில பள்ளி மாணவிகள். அப்போது நடந்ததை ஒரு மாணவியான மலாலா இப்படி பதிவு செய்கிறார்.
*சோதனைச் சாவடி கடந்த 200 மீட்டர் தூரத்தில் வெளுத்த உடையணிந்த, தாடி வைத்த ஒருவன் பேருந்தை நிறுத்தினான். "இது குஷால் பள்ளியின் பேருந்துதானே?"என்று கேட்டான். ஆமாம் என்றார் ஓட்டுநர். "சில குழந்தைகள் பற்றிய தகவல் தேவை" என்றான் அவன்.
"அலுவலகத்திற்கு சென்று கேள்" என்றார் ஓட்டுநர். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு இளைஞன் வண்டியின் பின்புறம் வந்தான்."பார் உன்னிடம் யாரோ பேட்டி எடுக்க வருகிறார்கள்" என்றாள் தோழி மோனிபா.
அப்பாவுடன் சேர்ந்து "பெண்களுக்கு கல்வி தேவை" என்றும், பெண்களை வீட்டிலேயே பதுக்கி வைக்க நினைக்கும் தாலிபான்களுக்கு எதிராக பல நிகழ்ச்சிகளில் பேசி இருக்கிறேன். அதனால் ஊடகவியலாளர்கள் என்னை அடிக்கடி பேட்டி எடுப்பது வழக்கம். ஆனால் இப்படி நடுவீதியில் யாருமே பேசியதில்லை. ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த போதே உள்ளே வந்தவன் தன் முகத்தை கைக்குட்டையால் மறைத்து கண் மட்டுமே தெரியும்படி இருந்தான். 'இங்கு யார் மலாலா?' என்றான். யாரும் பதில் கூறவில்லை. ஆனால், அனைவரது பார்வையும் என்னை நோக்கித் திரும்பியது. முகத்தை மூடாமல் இருந்த ஒரே பெண் நான்தான். அவன், அப்போது தன் கறுப்பு துப்பாக்கியை உயர்த்தினான். பிறகு, எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. நான் உயிர்பிழைத்து, கண்விழித்துப் பார்த்தபோது, அவன் அடுத்தடுத்து மூன்று முறை சுட்டதாக என் தோழிகள் கூறினார்கள். முதலாவது என் இடது கண் அருகே பாய்ந்து இடது தோளுக்குச் சென்றது. இடது காதிலிருந்து ரத்தம் வழிய தோழி மோனிபா மேல மயங்கி சாய்ந்து விட்டேன். ஷாஸியாவின் இடது கையில்
இரண்டாவது குண்டும், அவளின் இடது தோளின் வழியாக கைனத் ரஸ்ஸின் வலது தோளில் மூன்றாவது குண்டும் பாய்ந்தது. இரத்தம் எங்கள் அனைவரின் உடலிலும்*
*மேல் சிகிச்சை*
சுயநினைவில்லாமல் பாகிஸ்தானிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டு இன்று வரை லண்டனின் பிர்மிங்காம் நகரில் உள்ள இந்த மலாலா யார்? அவளுக்கு என்ன ஆனது? எப்படி பிழைத்தாள்? ஏன் அவளை சுட்டார்கள்? தாலிபான் தீவிரவாதிகள் சுட்டார்கள் என்றால், ஏன்? அப்படி என்ன இந்த சிறுமி தவறு செய்தாள்? அல்லது நல்லது செய்தாள்?
ஆம்! நான்தான் மலாலா! இதுதான் என்கதை!
என்று கூறும் இந்த நூலை படிப்பது பல உலக விஷயங்களை அறிந்து கொள்ள ஒரு முக்கிய சாவி!
*ஸ்வாட் பள்ளத்தாக்கு*
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு திசையில் ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையோரத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஸ்வாட் பள்ளத்தாக்கு. மலைகளும், கொட்டும் அருவிகளும், தூய ஏரிகளும் கொண்ட சொர்க்கப்பூமி. ஒருகாலத்தில் 'ஸ்வாட் உத்யனா' என்று அழைக்கப்பட்ட இதன் அர்த்தம் "நந்தவனம்" என்பது. காட்டுப்பூக்கள் நிரம்பிய வயல்கள், பழத்தோப்புக்கள், மரகதச்சுரங்கங்கள், மீன்கள் நிரம்பிய ஏரிகள் கொண்ட ஸ்வாட்டை கிழக்கின் ஸ்விஸ் என்று சொல்வதுண்டு. பாகிஸ்தானின் செல்வந்தர்கள் தங்களது விடுமுறை தலமாக ரசிக்கவும், சுஃபி இசை மற்றும் நடனத்தை ரசிக்கவும் இங்கு செல்கிறார்கள். ஸ்வாட் பள்ளத்தாக்கின் ஒரே பெரிய நகரமான மிங்கோராவில் மலாலா குடும்பம் வசித்து வந்தது. குல்கடா என்றால் பூக்களின் இடம் என்று பொருள்பதிந்த இடத்தில் மலாலாவின் வீடு.
ஆதிகாலத்தில் பெளத்தர்களின் பிரதேசமாக இருந்த இந்த இடத்தில் இஸ்லாம் நுழைந்தது 11ம் நூற்றாண்டில். சுல்தான் முகமது கஜினி ஆப்கன் மீது படையெடுத்து அந்தப்பிரதேச மன்னரானார். சுமார் 1400 பெளத்த மடங்கள் இருந்த ஸ்வாட் நதிக்கரையில் இன்று இருப்பது உடைந்த ஸ்தூபிகளும், தலையில்லாத உருவச்சிலைகளும், உடைக்கப்பட்ட புத்தர் சிலைகளும்தான். "எங்கள் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் பிரமிட் வடிவிலான 'ஈலம்' மலை, எங்களுக்கு புனித மலை. பெளத்தர்கள் வருவதற்கு முன்பு மாவீரன் அலெக்சாண்டர், தனது பெரும் படைகளுடன் ஆப்கனில் இருந்து சிந்து நதிக்கு செல்லும் வழியில் இந்தப்பள்ளத்தாக்கை கடந்து சென்றிருக்கிறார்" என்றும் விருந்தோம்பல் எங்களது முக்கிய கலாச்சாரம் என்றும் கூறும் மலாலா யூசுஃப்ஸை பல சரித்திர நிகழ்வுகள், அந்த பிரதேச இயல்புகள், தட்பவெப்ப நிலை, மக்களின் இயல்புகள், பழக்க வழக்கங்கள் இவற்றை அழகான நதி ஓடுவது போல விவரிப்பதுடன், அரசியல் நிகழ்வுகளையும் நம்மோடு மிக தைரியமாக, துணிச்சலான பார்வையில் இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார்.
"யூசுஃப்ஸை" என்பது காந்தஹாரில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் பரவியிருக்கும் ஒரு பெரிய பாஷ்டூனிய இனம். கவனிக்கவும். காந்தஹார் என்பது நமது "மஹாபாரதம்" இதிகாசத்தில் கெளரவர்களின் தாயாரான காந்தாரியின் (திருதராஷ்டிரன் மனைவி) தேசம். இங்கு பல நூற்றாண்டுகளாக இனங்களுக்கிடையே போர் என்பது தொடர் கதையாக இருந்துள்ளது. 1947ல் பாகிஸ்தான் என்ற நாடு தனியாக பிரிந்து உருவானபிறகு, 1969ல் இந்தப் பள்ளத்தாக்கு பாகிஸ்தானுடன் இணைந்தது. "நான் முதலில் ஸ்வாட்டைச் சேர்ந்தவள், பின்பு பாஷ்டூனியர், அதன் பின் பாகிஸ்தானி என்று தன் தேசபக்தியை தெரிவிக்கும் மலாலாவுக்கு, தாலிபன்களால் எப்படி பிரச்னை ஏற்பட்டது என்று விரிவாக வாசிப்போம்.
*கலாச்சாரம்*
அந்தப்பகுதியில் நிலவிய கலாச்சாரத்தைப் பற்றி மலாலா குறிப்பிடும் போது இப்படி கூறுகிறார். " எங்கள் பகுதியில் சிறுவர்களும், ஆண்களும் சுதந்திரமாக நகரத்தை சுற்றி வரலாம். ஆனால், பெண்கள் வீட்டிலிருந்தபடியே சமைத்து சகோதரர்கள், தந்தை இவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும். என் அம்மாவோ, நானோ, ஒரு ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது. அந்த துணை ஒரு ஐந்து வயது சிறுவனாகக் கூட இருக்கலாம். இதுதான் எங்கள் கலாச்சாரம். என் சிறு வயதிலேயே நான் அவ்வாறு இருக்கப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். ஒரு பறவையை போல மலையின் சிகரங்களையும், அதற்கும் மேலே பறக்க வேண்டும் என்றும் கருதினேன். என் அப்பாவின் சுதந்திரம் என்னை ஊக்கப்படுத்தியது". என்கிறார் மலாலா.
ஏணிகளை கூரையின் மீது போடாதீர்கள், வானத்தின் மீது போடுங்கள்! எட்டுவதற்கான உயரம் இன்னும் மேலே!
இப்படி நினைத்து ஒரு குழந்தையாக, சிறுமியாக இருக்கும் போதே பல இன்னல்களை கடந்து,நோபல் பரிசு வாங்கிய மலாலாவின் கதையை படிப்போம்.
இன்று துவக்கிய இந்த "நூலேணி" யின் அடுத்த பதிவில் மேலே தொடர்ந்து வாசிப்போம்!
புதனன்று சந்திப்போம்!
அன்புடன்,
நாகா.
09.10.2017
No comments:
Post a Comment