Sunday, 29 October 2017

சதிஸ்

சென்னையின் குடிசாலைத் தாமரைகள்
- வெய்யில்

* மெரினாவிற்கு காவல் நிற்கிறது
ஒற்றைப்பனை
கண்ணகி சிலைக்குச் சற்று பின்னே.
வாசனையெழ
அலைகுடிகளின் அடுப்புகள் புகைகின்றன 
அதன் தூரில்
வித்தைக் குரங்குகளின் இடுப்புக்கயிறு
முடிச்சிடப்பட்டிருக்கிறது.
ஈனவே ஈனாத ஆண் பனையது- ஆனாலும்
பார்க்க சில நேரம்
கொற்றவையைப்போல
கொல்கவி ஔவையைப்போல
இருட்டுகிற நேரத்தில்
அறஉணர்ச்சியின் கறுத்த செங்குத்து வடிவம்போல.

* திருவல்லிக்கேணி தெருக்களெங்கும்
பெருகியோடுகிற ரத்தம்.
என் முதுகெலும்பில் அச்சம் இறங்குகிறது.
36 கீறல்கள் விழுந்த தேச வரைபடமல்லவோ நமது
இங்கே என்ன நடக்கிறது.
குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டுத் தோல்களை
நாய்கள் நுகர்கின்றன – ஓ...
மதியச் சாப்பாட்டுக்கு அழைக்கும்
சந்தோச ரத்தவாடையே நெஞ்சில் பால்வார்த்தாய்.
உலகவங்கி குறித்து ஒன்றும் அறியாத மூதாட்டி
பள்ளிவாசலுக்கு எதிரே
செம்மறி வியாபாரிகளிடம் அருகம்புல் விற்கிறாள்
புல்லின் பசுமைதான் இந்த நகரம்
அப்படித்தானே?

* குடிசாலையில் திருநங்கைகளிடம் ஆசி பெறுகிறேன்.
பீகாரிச் சிறுவன் தன் சிறிய விரல்களால்
அவித்த முட்டையைக் கீறி 
ஒரு தாமரையை மலர்த்தி டேபிளில் வைத்தான்.
அதன்மீது தூவுகிற மிளகுத்தூள் குறித்து 
இந்நேரம் சிந்திப்பது உகந்ததல்ல.
இங்கேதான் ஏதோவொரு மேன்ஷன் மூலையில்
என் எதிர்காலம் குந்தியிருக்கிறது.
சுன்னத் செய்யப்பட்ட சிறுவனின் கோவணம்
வெண்மையாய் அழகாய் சுற்றப்பட்டிருக்கிறது
அவன் வெடித்து அழுகிறான்
என் ஆதார் அட்டை புகைப்படத்தின் கண்களால். 

* சப்-வேக்குள் இருவர் வாய்முத்தத்திலிருக்கிறார்கள்.
மனம் பிறழ்ந்தவன்
தன் நிழலைத் தேடி வெளியே வருகிறான்.
அங்கொரு மின்சாரக் கம்பத்தின் அருகேதான்
சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கிறேன்.
சென்னை வெயில் நீதிமானைப் போன்றது - வாழ்க அது
இலங்கைக்குக் கூலிகளாய்ப் போனவர்களைப்போல
மூன்று மாதங்களுக்கு முன்பு
இந்த வங்கி வாசலில் வரிசைகட்டி நின்றவர்களில் 
நீங்களும் ஒருவர்தானே
அப்போது எல்.ஐ.சி கட்டடத்திற்கு மேலேறி
தற்கொலைக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன் நான்.
ரயில்பாதைக்கான பாதாள வேலையில் 
புழுதியெழுந்துகொண்டிருந்தது மேல்நோக்கி
சரி பாதாள ரயில்கள் வரட்டுமே
ஜோராக அதில் பாய்ந்துகொள்ளலாம்தானே
எல்லாம் ஒரு நம்பிக்கைதானே!

No comments:

Post a Comment