Sunday, 29 October 2017

ச.தமிழ்ச்செல்வன்-தங்கத்தின் பதிவு

*புதுமைப்பித்தனோடு சகவாசம் ஏற்பட்டபிறகு, தரையோடு பதித்த அடுப்பும் பாட்டியும் நினைவுக்கு வரும்போதெல்லாம்  சங்கிலித்தொடர் போல செல்லம்மாள் கதை வந்து நின்று விடும். செல்லம்மாளுக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் அல்லவா? அடுப்போடு தொடர்புடைய கதை அது. காலையில் பிரம்மநாயகம் பிள்ளை கடைக்குகிளம்பும்போது செல்லம்மாள் உடம்புக்கு முடியாமல் கிடப்பாள். உட்காரக்கூட முடியாமல் நடுங்கும் அவளுக்கு வைத்தியங்கள் செய்து அவளை படுக்க வைத்துவிட்டு வேலைக்கு போவார். மாலையில் திரும்பி வந்து பார்த்தால்... "அவள் கிடந்த நிலை, தூக்கமல்ல என்பதை உணர்த்தியது... கண்கள் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும் சிறிது துடிப்பு. சுவாசம் மெல்லிய இழை ஓடிக்கொண்டிருந்தது.*

*நிமிந்து பின்புறமாக புழக்கடைக்குச் சென்றார். போகும்போது அவர் பார்வை சமையற்கட்டில் விழுந்தது உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது. "வாசிக்கும் போதெல்லாம் கண்ணீர் வெடித்து வரும் இடம் இது. கதையின் அடுத்த காட்சியில் செல்ம்மாள் இறந்து போவாள். சாகும் நிமிடம் வரை உயிருக்குப் போராடும் சமயத்திலும்கூட எனக்குக் கண்கள் கசியவில்லை. 'வரிசையாக எடுத்து அடுக்கி இருந்தது' என்கிற வரிதான்... அந்த வரியில் என் அம்மாவும் வாழ்கிறார். எங்கள் அம்மா படுக்கையில் வீழும் வரை சமைத்து முடித்த உணவு வகைகளை வரிசையாக அடுக்கி வைப்பார். என் அம்மா என்றில்லை எல்லா அம்மாக்களுமே இப்படித்தான். பல வீடுகளில் பார்த்திருக்கிறோமே. எங்க அம்மா சாதம் வடித்த பெரிய பாத்திரத்துக்கு மட்டும் துடைத்து மூணுபக்கமும் திருநீறு பூசிவிடுவார்கள். அடுப்படிக்கே ஒரு தெய்வீகக்கலை சட்டென வந்துவிடும். ஒவ்வொரு மதிய உணவு தயாரிப்பின்போதும் இதைப் பார்க்கலாம்.  பாத்திரங்களின் சைசும் பெரிதிலிருந்து சிறிது நோக்கி இந்த வரிசை சரியாக இருக்கும். எல்லா அம்மாக்களுமே புதுமைப்பித்தனின் செல்லம்மாக்கள்தான் என்று ஒரு வரி மனசில் ஓடும். நம்மையறியாமலே கன்னங்களில் நீர் வழியும்.*

-ச.தமிழ்ச்செல்வன்.

No comments:

Post a Comment