Sunday, 22 October 2017

வைரமுத்து

*வைரமுத்து*

*தோழிமார் கதை*

ஆத்தோரம் பூத்தமரம்
ஆனை அடங்கும்மரம்
கெளையெல்லாம் கூடுகட்டிக்
கிளியடையும் புங்கமரம்

புங்க மரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பாத்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா?
🏵
சிறுக்கிமக பாவாட
சீக்கிரமா அவுருதுன்னு
இறுக்கி முடிபோட்டு
எங்காத்தா கட்டிவிட

பட்டுச் சிறுகயிறு
பட்ட எடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில்நீ
எண்ணெய்வச்ச நெனவிருக்கா?
🏵
மருதாணி வச்சவெரல்
மடங்காம நானிருக்க
நாசமாப் போன
நடுமுதுகு தானரிக்க
சுருக்காநீ ஓடிவந்து
சொறிஞ்சகதை நெனவிருக்கா?
🏵
கருவாட்டுப்பானையில
சிறுவாட்டுக் காசெடுத்து
கோனார் கடை தேடிக்
குச்சிஐசு ஒண்ணுவாங்கி
நான்திங்க நீகுடுக்க
நீதிங்க நான்குடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி
கலர்கலராக் கண்ணீர்விட

பல்லால் கடிச்சுப்
பங்குபோட்ட வேளையில
வீதி மண்ணில் ரெண்டுதுண்டா
விழுந்திருச்சே நெனவிருக்கா?
🏵
வெள்ளாறு சலசலக்க
வெயி்ல்போல நெலவடிக்க
வெள்ளித் துருவல் போல்
வெள்ளைமணல் பளபளக்க

கண்ணாமூச்சி ஆடையில
கால்கொலுசு நீ தொலைக்க
சூடுவப்பா கெழவின்னு
சொல்லிச்சொல்லி நீ அழுக

எங்காலுக் கொலுச
எடுத்துனக்கு மாட்டிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன்
ஏனடீ நெனவிருக்கா?
🏵
பல்லாங்குழி ஆடையில
பருவம் திறந்துவிட

ஈரப்பசை கண்டு
என்னமோ ஏதோன்னு

சாகத்தான் போறேன்னு
சத்தமிட்டு நான்கத்த

விறுவிறுன்னு கொண்டாந்து
வீடுசேத்த நெனவிருக்கா?
🏵
ஒண்ணா வளந்தோம்
ஒருதட்டில் சொறுதின்னோம்

பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம்

ஒருபுருசன் கட்டி
ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச்
சம்மதிச்சோம் நெனவிருக்கா?
🏵
ஆடு கனவுகண்டா
அருவா அறியாது

புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம்

இருவது வயசோட
இருவேறு தெசையானோம்
🏵
தண்ணியில்லாக் காட்டுக்குத்
தாலிகட்டி நீ போக

வறட்டூறு தாண்டி
வாக்கப்பட்டு நான்போக

ஒம்புள்ள ஒம்புருசன்
ஒம்பொழப்பு ஒன்னோட

எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட
🏵
நாளும் கடந்திருச்சு
நரைகூட விழுந்திருச்சு

ஆத்தோரம் பூத்மரம்
ஆனைகட்டும் புங்கமரம்

போன வருசத்துப்
புயல்காத்தில் சாஞ்சிருச்சு.
🏵

No comments:

Post a Comment