24.09.2017
பதிவு - 53
நூலிலிருந்து நெசவு
*பயணங்கள் முடிவதில்லை*
வாழ்க்கைப் பாடங்கள் படிப்பதற்கு மிகச்சிறந்த ஆசான், பயணங்கள். பலவிதமான ஊர்களுக்கும் சென்று, வித விதமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். பயணங்களின் போது கிடைக்கும் நட்புகள் சிலசமயம் உறவுகளை விட வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகின்றனர். புது வகை உணவுகள், மனித பழக்க வழக்கங்கள், பிரமிக்கத்தக்க கட்டிடங்கள், கலைகள், பூகோள அமைப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இவற்றை காணும்போது மனம் குதூகலிக்கும். சுற்றுலா என்று செல்வது வேறு. பயணம் என்பது வேறு. கண்களை திறந்து, காதுகளை தீட்டி பயணிக்கும்போது, பலவிதமான நிஜங்கள் நம்மைத் தாக்கும், புன்முறுவல் செய்ய வைக்கும், படிப்பினை தரும், நல்ல அனுபவங்களை சிலசமயம் மோசமானதாகவும் இருக்கும்; ஆனால், எந்த பள்ளிக்கூடங்களிலும் கிடைக்காத பாடம் நமக்கு கிட்டும்.
*ஊர் சுற்றி*
'பாட்ஷா' என்ற திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருப்பார். "எட்டு எட்டா மனித வாழ்வை, பிரிச்சிக்கோ...என துவங்கும் பாடல்". கேட்டிருப்பீர்கள். அதில், *ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமும் அல்ல! நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமும் அல்ல* இப்படி ஒரு வரி வரும். உண்மைதான்.
50 வயதுக்குள் உலகில் பல்வேறு இடங்களுக்கு சென்று பயணிப்பது இவ்வுலகை ரசிக்க, ஆழமாக நேசிக்க, புரிந்து கொள்ள உதவும். பயணம் செய்ய வயது ஒரு தடையல்ல! இருப்பினும், வயதான காலத்தில் சில இடங்களுக்குச் சென்று அதன் முழு பரிமாணத்தையும், அழகுணர்ச்சியோடு பார்த்து ரசிக்க உடல் இடம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, நண்பர்களே, நான் கூற விழைவது, வாய்ப்பு கிடைக்கும் போது, அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு "ஊர் சுற்றுங்கள்" என்பதே!
*எஸ். ராமகிருஷ்ணன்*
"எஸ்ரா" எனப்படும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சம கால எழுத்தாளர்களில் மிகச்சிறந்த ஓர் எழுத்தாளர். எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள், திரைப்பட நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், உலக இலக்கிய பேருரைகள், வரலாறு, மொழிபெயர்ப்புகள், என இலக்கியம் படைத்து வரும் எஸ்.ராமகிருஷ்ணன், இலக்கில்லாமல் பயணம் செய்து எழுதிய, *இலக்கற்ற பயணி* என்ற நூலில் அவர் எழுதியதை வாசிப்போமா?!
"பயணம் என்னை உருமாற்றுகிறது, சந்தோஷப்படுத்துகிறது. வாழ்தலின் இனிமையை எனக்கு புரிய வைக்கிறது" என்று இந்த நூலை ஆரம்பிக்கிறார். "25 வருடங்களுக்கும் மேலாக இலக்கில்லாமல் சுற்றித்திரிந்திருக்கிறேன். இதில் கண்டதும், பெற்றதும், கேட்டதும் ஏராளம். எதையெதையோ தேடி அலைகிறேன். மனிதர்கள் மேலுள்ள நம்பிக்கையைப் பயணம் வலிமையாக்குகிறது. ஒருவன் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து திரும்பினால் அவனுக்கு வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கையும்,பிடிப்பும் தானே வந்துவிடும். பயணம் கற்றுத்தரும் முதல்பாடமே, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். உடல் நோயுற்றால் பயணம் தடைபெறுவதோடு, மனதில் பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். தேசாந்திரியாக சுற்றிய பயணங்களில் கற்றுக்கொண்ட பாடம் நாக்கிற்கு அடிபணியக்கூடாது. தண்ணீரும், உணவும் கவனமாக பார்த்துக்கொண்டால் எங்கு வேண்டுமானாலும் போகலாம். கங்கை செல்லும் வழியெல்லாம் பின்தொடர்ந்து ஒரு பயணம், பிரம்மபுத்திராவின் குறுக்கே படகில் ஒரு பயணம், பேரழகு ததும்பும் அஜந்தா புத்த சிற்பங்கள், தில்வாரா ஜைனக்கோவில், லடாக்கின் பெளத்த மடாலயங்கள், கழுகு மலைச்சிற்பங்கள், கொனார்க்கின் கலவிச்சிற்பங்கள், தார்ப்பாலைவனத்தில் ஒட்டகமேறி மணலில் பயணம், அதிர நடக்கும் அஸ்ஸாம் காண்டாமிருகம், ரங்கணத்திட்டுக்கு சீசனில் வரும் சைபீரிய பறவைகள், உலகில் அதிக அளவு மழை பொழியும் சிரபுஞ்சியில் நனைவதற்கு என இவற்றையெல்லாம் கண்டு அனுபவிக்க வேண்டாமா?
இப்படிக்கூறும் ராமகிருஷ்ணன், இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும் பல இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறார். சாதாரண பயணக்கட்டுரையாக இல்லாமல் பொருள் பொதிந்த ஒரு தேடலாக, பலவிதமான உணர்வுகளை தட்டி எழுப்பும், ஒரு கவிதையாகத் தான் எனக்குத் தெரிகிறது. இந்த நூலில், பல இடங்களை பயணித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தாலும், நாம் ஒரு சில இடங்களுக்கு வாசிப்பின் மூலம் செல்வோம்.
*கனடாவின் ஏரிகள்*
உலகிலேயே மிக வலிமையான ஆயுதம் எது என்றால், இன்றைய சூழலில் "தண்ணீர்"தான். தண்ணீரின் தேசம் என்பது கனடா நாட்டிற்குத்தான் பொருந்தும்.
தண்ணீருக்குச் சிறகுகள் இருப்பதை கனடாவின் ஒன்டாரியோ ஏரியையும், சிம்கோ ஏரியையும் பார்த்தபோது உணர்ந்ததாக கூறுவதையும், கவித்துவமான வர்ணனைகளையும் நாளை தொடர்ந்து வாசிப்போம்.
அன்புடன்,
நாகா.
24.09.2017
No comments:
Post a Comment