Sunday, 29 October 2017

இரா.ரவி

யாழினிது
(சிறார் சார்ந்த ஹைக்கூ)
நூல் ஆசிரியர் : கன்னிக்கோவில் இராஜா
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.

******

     இனிய நண்பர் கன்னிக்கோவில் இராஜா ஹைக்கூவில் தொடர்ந்து இயங்கி வருபவர்.  மின்மினி என்ற ஹைக்கூ இதழின் ஆசிரியர்.  நூல் வடிவமைப்பாளர். பன்முக ஆற்றல் மிக்கவர்.  எனது ‘ஆயிரம் ஹைக்கூ’ நூலை வடிவமைத்தவர்.

     சில ஆண்டுகளாக குழந்தை இலக்கியத்தில் இறங்கி தனிமுத்திரை பதித்து பரிசும் பாராட்டும் பெற்று வருகின்றார்.  குழந்தை இலக்கியத்தில் கதை, கவிதை எழுதியதொடு நின்று விடாமல் சிறார் சார்ந்த ஹைக்கூக்களும் வடித்துள்ளார்.

     குழந்தைகள் உலகத்தை படம்பிடித்துக் காட்டும் விதமாக படிக்க்கும் வாசகர்களின் குழந்தைப் பருவத்து நினைவுகளை மலர்விக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் உள்ளன.  குழந்தை நேயத்தை வலியுறுத்தும் விதமாக உள்ளன.

     காய்ச்சலில் குழந்தை
     மருந்து குடிக்கும்
     கரடி பொம்மை!

     முதல் ஹைக்கூவே முத்தாய்ப்பாக உள்ளது.  குழந்தை மருந்து குடிக்க மறுத்தால் கரடி பொம்மைக்கு மருந்து கொடுப்பது போல பாவனை செய்து விட்டு கொடுத்தால் குழந்தை மருந்தைக் குடித்து விடும்.

     தாத்தாவின் கரம் பற்றி
     நடக்கும் குழந்தை
     தள்ளாடும் நிழல்!

     தாத்தாவையும், பேத்தியையும் மட்டுமல்ல, படிந்த நிழலையும் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். 

     அச்சமில்லை அச்சமில்லை
     நடுங்கியபடி பாடும் குழந்தைகள்
     அகதி முகாம்!

     உண்மை தான். அகதி முகாமில் வாழும் குழந்தைகள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்கின்றனர்.  அச்சமில்லை பாடலை உதட்டளவில் மட்டுமே பாட முடியும்.

     மழலையின் முத்தம்
     ஈரமானது
     நெஞ்சம்!

     உண்மை தான். பல தாத்தாக்களும் பாட்டிகளும் பேரன் பேத்திகளின் முத்தத்தால் ஈர நெஞ்சம் அடைகின்றன. அதனைக் காட்சிப்படுத்தி உள்ளார்.

     பலூனை ஊத ஊத
     அகல விரிகிறது
     குழந்தையின் மனசு!

     குழந்தைக்கு பலூன் ஊதிக் கொடுத்திட்ட அனுபவம் உள்ள அனைவரும் அறிந்தக் காட்சியை அற்புதமாக வடித்துள்ளார்.

     ஆச்சரியமாகக் கேட்கும்
     பத்தாவது முறையும்
     காக்கா வடை கதை.

     எத்தனை முறை காக்கா வடை கதை சொன்னாலும் ரசனையுடன் குழந்தைகள் கேட்பது உண்மை. முற்றிலும் உண்மை.

     வீரிட்டழும் குழந்தை
     மெல்ல நிறுத்துகிறது
     தன் குரைப்பை நாய்!

     குழந்தையின் சத்தம் கேட்டு நாய் கூட கவனித்து தன் சத்தத்தை நிறுத்தி விட்டு மழலையின் சத்தத்திற்கு செவி மடுக்கும் நிகழ்வை ஹைக்கூவாக வடித்துள்ளார்.

     காற்றாடியோடு சிறுவர்கள்
     நூலை பற்றுகிறது
     மகிழ்ச்சி!

     சிறுவர்கள் பட்டம் விடும் அழகு .அழகு தான்.  அதில் அவர்கள் அடையும் மகிழ்ச்சியும் பரவசமாகும். பிரகாசமான விளக்கென ஒளிரும்.

     அம்மாவென அலறியது
     மம்மி டாடியை அழைத்தபடி
     கால் தடுக்கிய குழந்தை!

     அம்மா, அப்பாவின் புரியாத கண்டிப்புக்காக மம்மி டாடி என்று அழைக்கும் குழந்தை தடுக்கி விழுந்ததும் அனிச்சை செயலாக தாய்மொழியில் அம்மா என்ற அழைப்பது இயல்பு.

     நூல் முழுவதும் குழந்தைகள் உலகம் பற்றியே சிந்தித்து அழகிய ஹைக்கூ கவிதைகளை வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள்.  வாழ்த்துக்கள்.  ஹைக்கூ கவிதைகளைப் படிக்கப் படிக்க மழலைகள் நினைவும், மழலையாக இருந்த நிகழ்வும் வந்து அலைமோதுகின்றன.

*****

 

No comments:

Post a Comment