மழை பிடிக்காது என்றேன்
மழை பிடிக்கும் என்றாய்.....
இப்படித்தான் ஆரம்பமானது
நம் பேச்சு !
புடவை நுனியைத் தூக்கிப் பிடித்து
பூப்போட்ட குடைக்குள் நெளிந்து
சாலை நீர்க்குட்டைகளில் கால்படியாது
எரிச்சலோடு நான் நடக்க முயன்றதை
நீ பார்த்தாய் !
அலட்சியமாகக் காரை விட்டிறங்கி
கட்டம் போட்ட முழுக்கை சட்டை நனைய
கடைக்குள் நீ நுழைந்ததை நான் பார்த்தேன் !
நாம் பார்த்தோம் என்பதை
மழை பார்த்தது !
பாபிநெட் கொண்டை களைந்து
ஈரக் கூந்தலை நான் உலர்த்தும்போது
அப்போதுதான் குளித்தவன் போல
வேட்டிக்கு மாறி தலையைச் சிலுப்புவாய்
நான் கைநீட்டி மறிக்கும் போதே
என்மேல் கொத்தாய்த் தெறிக்கும்....
வீட்டுக்குள்ளும் மழை !
கணப்பு வைத்த வீடு உன்னுடையது !
அகன்ற கண்ணாடித் திறப்பின் ஊடாக
மழையைப் பார்த்துக் கொண்டே
சூடாகக் காபி அருந்தலாம்....
வெளியே என்ன நடக்கிறது என்றே தெரியாத,
அடைத்த சுவர்களுள்ள வீடு என்னுடையது !
மழை வருகிறது என்று எவரேனும் அறிவித்தால்
முன்னறைக்கு வந்து சன்னல் திறந்து பார்த்து
சட்டென்று மூடிவிடும் எனக்குக்
கணப்பில் குளிர்காய்வது பெரிய வேடிக்கை !
இடி இடித்தால் ஓடிவந்து உன்னைக்
கட்டிக் கொள்வேன் என்று நினைக்காத நீயும்
மின்னல் வெட்டினால், அட உன் கண்கள் எனக்
கவிதை எழுதுவாய் என்று நினைக்காத நானும்
பெரும் சவாலை விடுத்திருக்க வேண்டும்
மழை மோகினிக்கு.......
சாரலாக, தூறலாக, துளித்துளியாக,
பெருந்துளியாக, ஆலங்கட்டியாக
விதவித அவதாரங்களை எடுத்துப் பார்த்தாயிற்று.....
காரை விட்டிறங்கி வாசல் அடையுமுன்
தொப்பலாக நனைந்த அன்று
என் கடுகடுத்த முகத்தைப் பார்த்த பிறகுதான்
எனக்கான மாற்று உடைகள் உன்வீட்டில்
இடம் பிடித்தன.....
நீளும் கார் பயணங்களில், குறுக்கே விழுந்து
மறிக்கும் மழையை
ஷ்ஷ்ஷீய்க் ஷ்ஷ்ஷீய்க் என்று வைப்பரும்
விரட்டாதிருந்தால் என்ன செய்வேன் நான் ?
என்னால் சகிக்க முடிந்த ஒரே மழை
இசை மழை ......
இருக்கைகள், ஸ்டீரிங், மேற்கூரை, உட்புறம்
எல்லாம் வயலினில் தொப்பலாய் நனைய,
நான் எம்மாத்திரம் ...?
இரண்டு உதடுகளுக்கிடையேயான தூரத்தை
இசை நிறைத்து விட்டதை
வைப்பர் மழை பார்த்துக் கொண்டே சரிவது
சகிக்க முடியாத பொறாமையினால் இருக்கலாம்.....
கணப்பில் தீ எரிய எரிய
நானும் சரிந்த பின்மாலை நேரங்களைப் பார்த்து
மழை தலையிலடித்துக் கொண்டிருக்கும்
சன்னல் கூரையில் தளக் தளக் சத்தம்....
இரு மழைக் கம்பிகளுக்கிடையே
உன் உள்ளங்கையை நீட்டி எனக்கு
ஊஞ்சல் செய்து கொடுத்ததை
நினைக்காமலிருக்க முடியவில்லை...!
அமர இடமின்றி துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டு
காலத்தின் ஊஞ்சலால் விசிறியெறியப்பட்ட
இடம் சேறும் சகதியுமாக.....
மழை இருந்தது, நான் இருந்தேன்
மழை பிடிக்காத மற்றொருவரும் இருந்தார்....
தண்ணீர் இல்லாக் காட்டுக்கு
நீ மாற்றல் வாங்கிச் சென்றதாக
அறிந்தேன்.........
#தாமரை
No comments:
Post a Comment