வழக்கமாக
ஒரு நல்ல காப்பி குடித்தால்
இந்தத் தலைவலி போய்விடும்
என்றபோதும்
இந்தமுறை
ஒரு பெரிய காப்பி
குடிக்க விரும்புகிறேன்
தலைவலி இந்தமுறை
அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
பேப்பர் கப்புகளில்
தரப்படும் சிறிய காப்பிகள்
நெற்றியில் கருணையுடன் இடப்படும்
சிறிய முத்தங்கள்போல
சீக்கிரம் தீர்ந்துபோகின்றன
அந்தப்புரங்களில்
பானங்கள் அருந்தப் பயன்படுத்திய
பெரிய பீங்கான் கோப்பைகளில்
எனக்கு ஒரு பெரிய காப்பி வேண்டும்
ஒரு காப்பியில்
ஏதோ ஒரு துளியில்தான்
நம் தலைவலியை போக்கும்
மூலிகை கலந்திருக்கிறது என்றால்
அந்தத் துளி நாம் குடிக்கும் காப்பியில்
எப்போது வரும் என்று
நமக்கு தெரியாதுதானே
அதுவரை தீராததாய்
ஒரு காப்பி பெரிதாக இருக்கவேண்டும்
ஒரு பெரிய காப்பியை
தயாரிக்க உங்களுக்கு
அவகாசம் இல்லையென்றால்
காப்பியின் அருவி எங்கே விழுகிறது
என்றாவது சொல்லுங்கள்
நான் போய்
அதற்கு கீழ் நின்றுகொள்கிறேன்
-மனுஷ்ய புத்திரன்
Thursday, 6 October 2016
மனுஷ்யபுத்திரன்- பிரகாஷ்
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment