Saturday, 15 October 2016

மனுஷ்யபுத்திரன்

துண்டிக்கப்பட்ட நாவுகளின் குரல்
..................................
மனுஷ்ய புத்திரன்

அரண்மனைக் காவலர்கள்
அதிகாலையிலேயே
கையில் குத்தீட்டியுடன்
கதவு தட்ட வந்துவிட்டார்கள்

அரசியைப் பற்றி
என்ன பேசிக்கொண்டிருந்தாய்
என்றார்கள்
கழுத்தில் ஈட்டியின் ஒரு முனையை
வைத்து அழுத்தியவாறு

உண்மையில் எனக்கு
அரசர்களைப் பற்றியோ
அரசிகளைப் பற்றியோ
எதுவும் தெரியாது
என்று நான் சொன்னதை
அவர்கள் நம்பவிலை

இந்த நாட்களில்
எங்கெங்கும் நிழல்கள் விழுகின்றன
நான்  அறையை சுற்றிலும் பார்த்தேன்
‘’ இதோ இங்கே இருக்கும்
எனது சொந்த நிழலிடம்தான்
பேசிக்கொண்டிருந்தேன்’’
என்றேன் பயத்துடன்

இந்த நாட்களில்
மக்கள் தீய கனவுகளைக் காண்கிறார்கள்
’’நான் என் கனவுகள் குறித்து
கடவுளிடம் முறையிட்டுகொண்டிருந்தேன்’’
என்றேன் பதட்டத்துடன்

இந்த நாட்களில்
உண்மைக்கு பொய்க்கும் இடையிலான
வித்தியாசங்கள் அழிக்கப்பட்டுவிட்டன
’’கண்ணாடியில் தெரியும்
என் பிம்பத்திடம்தான்
எது உண்மை என்று கேட்டுக்கொண்டிருந்தேன்’’
என்றேன் பரிதாபமாக

இந்த நாட்களில்
ஒவ்வொருவரும் இருட்டறைகளில்
நடக்குமாறு நிர்பந்திக்கபட்டிருக்கிறார்கள்
’’நான் வழி தேடுவதற்காக
ஒரு தீக்குச்சியை கிழித்ததைத் தவிர
வேறு எதையும் பேசவில்லை’’
என்றேன் கண்ணீருடன்

அவர்கள்
அரசியைப் பற்றிய வதந்திகள் பரப்பியதற்காக
என்னை நிர்வாணமாக
தெருக்களில் இழுத்துச் சென்றார்கள்
நகர வாசிகள் படபடவென
ஜன்னல்களை சாத்திக்கொண்டார்கள்
தெருவில் நின்றவர்கள்
தாங்கள் கேட்கும் திறனவற்றர்கள்
பேசும் திறனற்றவர்கள்
என கைகளை உயர்த்தி சைகயால் காட்டியபடி
சந்துகளில் ஓடினார்கள்

சலவைத்தொழிலாளியின்
சந்தேககத்தால்தான்
சீதை தீக்குழியில் இறங்கினாள்
காலம் மாறிவிட்டது
சந்தேகிக்கிற ஒவ்வொருவரும்
தீக்குழிக்கு செல்லவேண்டும் என்பதுதான்
இப்போது உத்தரவு

எனக்கான அக்கினிக் குண்டத்தின் முன்
நின்றுகொண்டு அவர்களிடம்
ஒன்றே ஒன்றுதான் கேட்டேன்
’’நான் தனியறையில்
எனக்கு நானே பேசிக்கொள்வது
எனக்கே சரியாக கேட்காதபோது
எப்படி உங்களுக்கு கேட்கிறது?’’

அவர்கள் சிரித்தார்கள்
’’எதையும் கேட்க வேண்டியதில்லை
இந்த நகரமே எதைப் பேசுகிறது
என்று எங்களுக்குத் தெரியும்
நான்கு பேரின் நாக்கை அறுத்தால்
எல்லா நாக்குகளும் தானே அடங்கிவிடும’’

குடிமக்களின் துண்டிக்கபட்ட நாவுகளை
தாம்பாளத்தில் வைத்து
அரசர்களுக்கு பரிசளிக்கும் முறை என்பது
நீண்டகாலமாக இருந்துவருவதுதான்
என்றான் அவர்களில் ஒருவன்

நாக்குகளை வெட்டிய பிறகு
அரசியைப் பற்றி சிந்திப்பதை
எப்படி நிறுத்துவது என்று கேட்க விரும்பினேன்
ஆனால் நான் கேட்கவில்லை
எல்லாவற்றிற்கும்  நிச்சயம்
ஒரு ஏற்பாடு இருக்கும்

15. 10. 2016
காலை 6. 41

நன்றி: மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment