Saturday, 1 October 2016

செம..

செம
.....
ஒரு புளிய மரத்தில்
தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தேன்
அதைக்கண்ட வழிப்போக்கர் ஒருவர்
" செம" என்றார்
நான் தலைகீழாகவே
அவரை நோக்கி
நன்றியுடன் புன்னகைத்தேன்
அவசர வேலையாக
அந்தப் பக்கம் போன
என் காதலி ஒருத்தி
நான் தலைகீழாக இருந்தபோதும்
எளிதாகவே அடையாளம் கண்டுகொண்டாள்
என்னை அப்படிப் பார்ப்பது
அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது
"செம" என்று எனக்கு
தலைகீழாகவே ஒரு முத்தம் கொடுத்தாள்
மறைவிடம் தேடி
மரத்தடிக்கு சிறு நீர் கழிக்கவந்த
இலக்கிய விமர்சகர் ஒருவர்
தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பனைக் கண்டு
கொஞ்சம் பயந்துவிட்டார்
நான் அவரிடம் அப்போதுதான் உதித்த
ஒரு கவிதை சொல்லிவிட்டு
' இது தலைகீழாக எழுதப்பட்ட கவிதை
உங்களுக்கு புரியவேண்டும் என்றால்
நீங்கள் என்னைப்போலவே
தலை கீழாகவே தொங்கிக்கொண்டு
கேட்க வேண்டும்" என்றேன்
" செம..செம "என்று இரண்டுமுறை சொல்லிவிட்டு
வேகமாக போய்விட்டார்
பிறகு நான் தொங்கிக்கொண்டிருந்த
அதே கிளையில்
ஒரு காக்கை வந்தமர்ந்தது
என்னைப் பார்த்து
" செம" என்று உற்சாகமாக கத்தியது
நான் செம என்றால்
என்னவென்று
தழைகீழாகவே சிந்திக்கத் தொடங்கினேன்
செம என்றால் செம்மையை குறிக்கலாம்
செம என்றால் செழுமையைக் குறிக்கலாம்
செம என்றால் சிறப்பைக் குறிக்கலாம்
செம என்றால் ஒருவருக்கு சொல்லவந்த ஒன்று சொல்லவரவில்லை
என்பதைக் குறிக்கலாம்
செம என்றால் ஒருவர் ஒன்றும் சொல்லவிரும்பவில்லை
என்பதைக் குறிக்கலாம்
செம என்றால் அது ஒருவரின்
பொறுப்பற்ற தனத்தைக் குறிக்கலாம்
செம என்பது ஒரு வார்த்தையல்ல
ஒரு சப்தம் என்கிறார்கள் சிலர்
கலவியின் போது தன்னியல்பாய்
எழும் சப்தம்போல
பகலில் தூங்கும் மனிதர்கள் விடும்
மந்தமான கொட்டாவிதான்
இந்த செம என்கிறார்
ஒரு மொழியியலாளர்.
- மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment