Tuesday, 25 October 2016

குற்றமும் தண்டனையும்

நன்றி:சிவா

*தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்.*

19 ஆம் நூற்றாண்டில் இரு படைப்புகள்  உலகளாவிய பாதிப்பை செலுத்தியவை. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் முதல் படைப்பு. விக்தர் யூகோவின் ‘துன்பபப்ட்டவர்கள்’ அடுத்த படைப்பு. இரண்டுமே உலகமொழிகளில் எங்கும் மொழியாக்கம் செய்யபப்ட்டுள்ளன. மலையாளம் போன்ற மொழிகளில் நவீன இலக்கியமே அந்நாவல்களின் மொழிபெயர்ப்புகள் மூலம்தான் தொடங்கியது. தமிழில் அந்நாவல்கள் மொழியாக்கம் செய்யப்படவில்லை. யூகோவின் நாவலில் அபத்தமான சுருக்கம் ஒன்று கிடைக்கிறது. கவியோகி சுத்தானந்தபாரதியால் செய்யப்பட்டது.

இப்போது தமிழில் ‘குற்றமும் தண்டனையும்’  மிக நேர்த்தியான மொழியாக்கத்தில் மிக அழகிய படைப்பாக  பாரதி புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  இது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று.

மொழிபெயர்ப்பாலரான எம்.ஏ.சுசீலா அவர்கள். மதுரை  பாத்திமா பெண்கள் கல்லூரியில் தமிழாசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அற்புத படைப்பாளி.  அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பெண்ணிய நோக்கிலான இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.  பருவங்கள் மாறும், புதிய பிரவேசங்கள், தடை ஓட்டங்கள் ஆகிய சிறுகதைதொகுதிகளும் விடுதலைக்கு முந்தைய தமிழ்நாவல்களில் பெண்கள், பெண் இலக்கியம் வாசிப்பு, இலக்கிய இலக்குகள்  போன்ற கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன..
உமாமகேஸ்வரி போன்ற படைப்பாளிகளின் உருவாக்கத்திலும் அவருக்கு பெரும்பங்களிப்பு உண்டு.அவரது முதல் மொழிபெயர்ப்பு முயற்சி இந்நாவல்.

ரஸ்கால்நிகா·ப் என்ற இளைஞன் செய்யும் கொலைதான் இந்த புகழ்பெற்ற நாவலின் கரு. வாழ்வின் இக்கட்டுகளில் சிக்கி செயலற்று நிற்கும் நிலையில் ‘உதவாக்கரையான’ ஒரு கிழவியை பணத்துக்காகக் கொலைசெய்கிறான். அந்த குற்றத்திலிருந்து தப்பியும் விடுகிறான். ஆனால் அவனில் அந்தக் கொலை உருவாக்கும் ஆழமான உளப்போராட்டம் நாவல் முழுக்க நீள்கிறது. கடைசியில் அவன் தன் பாவங்களை அறிக்கையிடும் ஒரு சன்னிதியைக் கண்டடைகிறான். தன் குடும்பத்துக்காக பெரும் துயரத்தை தாங்கி நிற்கும் சோனியா என்ற விபச்சாரியில். அவள் முன் மண்டியிடுகிறான். ஏனென்றால் அவள் துயரம் சுமக்கும் மானுடக்குலத்தின் பிரதிநிதி. அவள் மனித இனத்தின் வலிமிக்க இதயம்போல
சோனியா ரஸ்கால்நிகா·பிடம் சொல்லும் சொற்கள்தான் இந்த நாவலின் உச்சம் ”நான்கு வீதிகளும் சந்திக்கும் அந்தச் சதுக்கத்துக்கு உடனே செல்லுங்கள். நாற்சந்தியிலே சதுக்கத்தின் மத்தியிலே சென்று நில்லுங்கள். மனிதர்களுக்கு முன்னால் மண்டியிடுங்கள். மண்ணைக் களங்கபப்டுத்திவிட்ட நீங்கள் அதை முத்தமிடுங்கள். இந்த உலகம் முழுக்க கேட்கும்வண்ணம் ‘நான் ஒரு கொலைகாரன்! நான் ஒரு கொலைகாரன்! ‘ என்று உரக்கச் சொல்லுங்கள்” சோனியாவின் கருத்தில் குற்றங்கள் என்பவை தனிமனிதர்களுக்கு எதிரானவை அல்ல. சமூகத்துக்கு எதிரானவையும் அல்ல. அவை மனிதகுலத்துக்கு எதிரானவை. ஆகவே அவற்றைச் செய்பவனுக்கு எதிரானவை. அவன் மண்டியிட வேண்டியது அதன் சன்னிதியில்தான்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இன நீதிகளே அறமாக எண்ணப்பட்ட ஒரு காலகட்டத்தில்– ருட்யார்ட் கிப்ளிங் போன்ற எழுத்தாளர்கள் கூட அதற்குள் நின்ற காலகட்டத்தில் – அழிவிலாத மானுட நீதி ஒன்றை தன் தரிசனமாக முன்வைத்தது தஸ்தயேவ்ஸ்கியின் பெரும் நாவல். அந்த ஒளி எப்போதும் மானுடகுலத்துக்கு வழிகாட்டக்கூடுவது. இலக்கியம் என்ற இயக்கத்தின் சாரமென்ன என்று காட்டும் பெரும் படைப்பு  இது.

உணர்ச்சிவேகம் நிறைந்த அக ஓட்டங்களும் சுழன்று சுழன்று செல்லும் சொற்றொடர்களும் கொண்ட இந்த நாவலை அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் சுசீலா. தமிழின் இலக்கிய மொழிபெயர்ப்பில் இது ஒரு சாதனை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நீதியைப்பற்றி சிந்தனைசெய்த அனைவரிலும் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய ஒரே படைப்பாளி அவர்தான். குறிப்பாக குற்றமும் தண்டனையும் என்ற அவரது மகத்தான நாவல். குற்றம் சார்புத்தன்மை கொண்டது, தண்டனை முழுமுற்றானது. இன்று செய்யப்பட்ட குற்றம் நாளை குற்றமிலாதாகலாம். அளிக்கப்பபட்ட தண்டனையை ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே குற்றம் வேறு தண்டனை வேறு. தண்டனை என்பது குற்றத்தை ஒருபோதும் சமன் செய்வதில்லை என்ற தரிசனத்தை அந்நாவல் உருவாக்கியது.

குற்றம் என்பது எதற்கு எதிரானது? நியாயப்படுத்தப்பட்ட குற்றம் என்ற ஒன்று உண்டா? மீண்டும் மீண்டும் வினாக்களை எழுப்பும் பெரும்படைப்பு தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும். உலகசிந்தனையில் அது உருவாக்கிய பாதிப்பு மிக அபூர்வமானது.  இப்படி அதைச் சொல்லலாம். அன்றுவரை நீதி என்பது தண்டிக்கும் சமூக அதிகாரத்தின் கோணத்திலேயே விவாதிக்கப்பட்டிருக்கிறது. தண்டனைக்குள்ளாகும் குற்றவாளியின் கோணத்தில் நீதியை அணுகச் செய்தது  அந்நாவல். துன்பப்பட்டவர்களின் ஒடுக்கபப்ட்டவர்களின் மனசாட்சியிலிருந்து நீதியை ஆராய அறைகூவியது.
குற்றங்களைப்பற்றிய தெளிவை மனிதகுலம் மேலும் மேலும் அடைவதையே மனிதநாகரீகத்தின் பரிணாமம் எனலாம். அதிலும் சென்ற நூற்றாண்டு என்பது மனிதவரலாற்றிலேயே நீதியுணர்வு மிக வேகமாக வளர்ச்சியடைந்த ஒரு காலகட்டம். ஓருலகம் என்ற மனச்சித்திரம் உருவானபோதே மானுடநீதி என்ற உருவகமும் உருவாகிவிட்டிருக்கிறது. மேலும் மேலும் நீதிக்காக ஏங்கும் ஒரு சிறுபான்மையினரில் இருந்து நீரில் விழுந்த கல் அலையெழுப்புவது போல நீதி பிறந்து விரிவடைகிறது. ஒரு தனிமனித மனசாட்சிப்பிரச்சினையாகத் தொடங்கும் இந்த தார்மீகத் தேடல் மெல்லமெல்ல சமூகத்தின் அறவுணர்வை மாற்றியமைப்பதை நமது சென்ற கால வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் உணரலாம்.

No comments:

Post a Comment