வெள்ளிக்கிழமைப் பின் மதியப் பேருந்துகளில், ஏதாவது ஒரு நேர்த்திக் கடனாக முடிகாணிக்கை செலுத்திவிட்டு சந்தனம் அப்பிய மொட்டைத் தலையோடு ஒன்றிரண்டு பேராவது தென்படுவார்கள்.
இன்று அப்படிப் பார்த்த ஒரு மனுஷிக்கு அதிகம் போனால் முப்பது வயதுக்கு ' 'முன்னப்பின்னே' இருக்கும். கன்னங்கரேர் என்று அப்படி ஒரு அழகு. பக்கவாட்டில் மூக்கும் நாடியும் கால அகாலத்துக் கற் சிற்பம். பக்கத்தில் இருந்த ஆண்பிள்ளையோடு இறங்கும் வரை ஒரு சொல் உதிர்க்கவில்லை. பாவி, அந்த மன்னனும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடக் கடன் கொடுக்கவில்லை.
பஸ்ஸை விட்டு இறங்கி வந்து ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆகப் போகிறது. எனக்கு அந்த முகத்தை நினைக்க நினைக்கக் கஷ்டமாக இருக்கிறது.
கல்லைக்கட்டி இன்னும் எத்தனை பேரை வாழ்க்கை இப்படிக் கடலில் தாழ்த்திக்கொண்டே இருக்குமோ தெரியவில்லை.
-வண்ணதாசன்.
No comments:
Post a Comment