ஜி.நாகராஜன் நினைவோடை - சுந்தர ராமசாமி
தமிழ் இலக்கிய உலகில் ஜி.நாகராஜனை தவிர்த்து செல்ல ஒருவரால் கண்டிப்பாக முடியாது, வாசகர்களாகட்டும் அல்லது எழுத்தாளர்களாகட்டும். ஜி.நாகராஜனை கொண்டாடும் எந்தவொரு வாசகனுக்கும் இலக்கிய உலகிற்கு அப்பாலான அவரது உலகத்தை அறிந்துக்கொள்ள நேரும்பொழுது ஏற்படும் துக்கம் சொல்லி மாளாதது.
சுந்தர ராமசாமியின் நினைவோடை வரிசைகளில் கடைசியாக வந்த புத்தகம் “ஜி. நாகராஜன் நினைவோடை”. சுந்தர ராமசாமி சொல்லக் கேட்டு அரவிந்தன் இந்த நூலை தொகுத்துள்ளார். புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது வாழ்ந்து கெட்ட மனிதனை பற்றிய கதையை கேட்டது போன்றதொரு அனுபவத்தினை தருகிறது.
இந்த நினைவோடை முழுவதிலும் ஜி.நாகராஜனுடைய ஆக்கங்களைப் பற்றியோ அல்லது இலக்கியத்தை பற்றியோ எந்தவொரு இடத்திலும் சு.ரா விவரிக்கவில்லை. தனி ஒரு மனிதனின் வாழ்வையும் வீழ்ச்சியையும் நேரிருந்து பார்த்த அனுபவத்தினையே கூறியிருக்கிறார். ஜி.நாகராஜனை எந்த அளவிற்கு ஆச்சரியமாக பார்த்திருக்கிறாரோ பின்னாளில் அதே அளவு வெறுப்பும் கொண்டிருக்கிறார் சு.ரா.
புத்தகத்தின் பின்னட்டையில் இவ்வாராக இருக்கிறது ”ஜி. நாகராஜனின் அற்புதமானதும் அதிசயமானதுமான’ ரகசிய உலகம் பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளைப் பதிவு செய்துள்ளார் சுந்தர ராமசாமி”. ஜி. நாகராஜனை பின்னாளில் வெறுத்தாலும் சு.ராவால் அவரை தவிர்க்க முடியாமல் தான் இருந்திருக்கிறது.
ஜி.நாகராஜனின் மற்றவர்களிடத்து பழகும் விதம், உடை வழக்கம், மிக அதிகமான உண்ணும் அவருடைய உணவுப் பழக்கம், அபாரமான அவருடைய ஆங்கிலப் புலமை, மற்றவர்களுக்கு அவர் ஏற்படுத்திய அசௌகரியங்கள், அதைப் பற்றி அவர் குற்றவுணர்ச்சி கொள்ளாதிருத்தல், இறுதியாக அவரை இறப்புக்கு இழுத்துச் சென்ற குடிப்பழக்கம் இதைப் பற்றி மட்டுமே இந்த நூறு பக்கங்களில் சு.ரா பேசுகிறார்.
ஜி.நாகராஜனின் எழுத்துக்களைப் பற்றி அவர் விரிவாக எழுதாதற்கு காரணம் தெரியவில்லை. புத்தகத்தில் ஓரிடத்தில் இவ்வாறாக ஒரு கேள்வி சு.ரா விடம் கேட்கப்பட்டு இருக்கிறது “இலக்கியம் பற்றியாவது பேசுவாரா ?”
இலக்கியத்தை பற்றியெல்லாம் ஜி.நாகராஜன் சு.ராவிடம் பேசியதேயில்லை என்றொரு ஆச்சரியமான பதிலை தருகிறார்.
மற்றபடி ஜி.நாகராஜனின் ஆச்சரியப்படும் பண்புகளையும், சிறு சிறு விசயங்களையும் ஞாபகத்திலிருப்பதை நினைவு கூர்ந்திருக்கிறார். சில விசயங்களை கூறாமல் தவிர்த்திருப்பதும் வெளிப்படையாக தெரிகின்றது.
ஜி.நாகரஜனுடைய வாழ்க்கையை பற்றி இவ்வாறு சொல்கிறார், “விளம்புநிலை வாழ்க்கை மீது அவருக்கு இருந்தது ஒரு fascination” என்று. மேலும் அவருடைய எழுத்தைப் பற்றி சு.ரா சொல்வதெல்லாம் இதுதான், “அவர் தொடர்ந்து எழுதி வந்தபோது கூட தான் ஒரு எழுத்தாளர் என்று நினைத்ததில்லை. அவரது எழுத்து பலருக்குப் பிடித்துப்போய்விட்டிருந்தது. வாசகர்கள் தான் அவரை எழுத்தாளராக ஆக்கியிருக்கிறார்கள்”
எழுத்து சார்ந்து அவரை கொஞ்சமாவது இயங்க வைத்தது அவர் விளிம்பு நிலை வாழ்க்கையின் மீது கொண்டிருந்த ஆர்வம் தான் என்பது புலப்படுகின்றது. ஆனால் அதுவே தான் அவரது வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கின்றது. ஒவ்வொரு விசயம் சார்ந்தும் பல அடிப்படையான நுட்பமான விசயங்கள் அவருக்கு இயல்பிலேயே கைவந்திருக்கின்றது.
அவருடைய குடும்ப வாழ்க்கையை பற்றி பெரிதும் குறிப்பிடவில்லை. முதல் மனைவி இறந்த பின்னர் இரண்டாம் மணம் புரிந்துகொள்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள தேவையில்லை என்று கருதி சு.ரா அதை நாகராஜனிடம் வெளிப்படையாகவும் கூறுகிறார். அவருடைய வித்தியசமான வாழ்க்கை முறை குடும்ப வாழ்க்கைக்கு ஒவ்வாதது என்பதை எண்ணியே அவ்வாறு கூறியிருக்கிறார் என்பது புரிகின்றது.
பின்னாளில் நாகராஜன் சு.ராவிற்கு எழுதிய கடிதமொன்றின் கடைசி வரியில் தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் தன்னுடைய மனைவி தான் என்று எழுதியிருக்கிறார். இதனால் கோபமடைந்த சு.ரா நாகராஜனை திட்டி பத்துப் பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை பார்க்க வந்த நாகராஜனை தவிர்த்திருக்கிறார். தவிர்க்க முடியாமல் போன ஒரு கட்டத்தில் நாகராஜன் இவ்வாறாக சொல்கிறார், “ அந்த கடித்ததில் நாகலட்சுமியைப் பற்றி சொல்வது ஒருவிதமான கிண்டல் தான். யார் ஒரு காரியத்துக்குச் சற்றும் பொறுப்பில்லையோ அவர் தான் முழுவதற்கும் காரணம் என்று சொல்வது ஒருவித Satire தான்”.
சு.ரா ஜி.நாகராஜனை பற்றி பெரிதும் கவலைக் கொண்ட விசயம், “அவரால் பிறருக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறித்து அவர் கவலைப்படவும் மாட்டார், அதைப் பற்றி எந்தவொரு குற்றவுணர்ச்சியும் கொள்ள மாட்டார்” என்பது தான்.
அவருடைய உணவுப் பழக்கத்தைப் பற்றி தான் பெரிதும் வியப்புற்று அடிக்கடி சொல்கிறார். ‘ஹோட்டல் சர்வர்களே ஆச்சரியப்படும் விதத்தில் எக்கச்சக்கமாக சாப்பிட்டவர் அவர் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் ஒரே ஒரு சிறிய லட்டை மட்டுமே உண்டு வந்திருக்கிறார். அவர் இப்படி அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் மிலிட்டரியில் சேர்ந்த பொழுது வந்திருக்கிறது. சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி மிலிட்டரியில் சேர்ந்திருக்கிறார் அங்கு தான் அவருக்கு தாரளமாக அசைவ உணவும், மதுவும் கிடைத்திருக்கின்றது. அதே போல அதிகார மனப்பான்மையும் !
ஆனால் சு.ராவிடம் அந்த அதிகார மனப்பான்மையை எந்தவொரு சமயத்திலும் அவர் காட்டியதில்லை என்றே தெரிகின்றது.
நாகராஜன் மற்றவர்களுக்கு கொடுத்து வந்த சங்கடங்களைக் குறித்து சு.ரா கொண்டிருந்த அதிருப்தி புத்தகத்தில் ஆங்காங்கே தெரிகின்றது. அதனாலேயே பலகாலம் பொறுத்துக் கொண்ட நட்பை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் துண்டிக்க நினைக்கிறார். ஆனால் இதைப் பற்றியெல்லாம் ஜி.நாகராஜன் எப்பொழுதும் கவலைக் கொள்வதில்லை என்று அவரே குறிப்பிடுகின்றார்.
ஜி.நாகராஜனுடைய கடைசி காலத்தில் தெரிந்தவர்கள் அனைவரும் அவரை விலக்கியே வைத்திருக்கிறார்கள். சு.ரா உட்பட. அதனாலேயே அவர் கொண்டிருந்த குற்றவுணர்ச்சி கடைசி பக்கத்தில் தெளிவாகவே தெரிகின்றது.
தான் ஆதர்சமாக கொண்ட எழுத்தாளனுடைய நசிந்த வாழ்க்கைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாசகனுடைய நிலைமை துக்ககரமானது. இந்த எழுத்தாளனுடைய ஆக்கங்களை கடந்து வருவது அவ்வளவு எளிதானதல்ல, அதே போல அவனுடைய வாழ்க்கையையும்.
ஜி.நாகராஜன் நினைவோடை - சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்,
No comments:
Post a Comment