Thursday, 6 October 2016

இறையன்பு கேள்வி பதில்

இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் கேள்வி நானே……. பதிலும் நானே…..

#01_ஒருவரை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சில உண்மைகளை பேசாமல் இருந்தால் போதும்.

#02_தவிர்க்க முடியாத ஆக்க சக்தி எது?

விழிப்புணர்வு

#03_பெருந்தன்மை குறைந்து வருகிறதே?

குறுகலான சந்துகளில் சிறிய வீட்டில் இயற்கையோடு தொடர்பு இல்லாமல் வாழ்கிற காரணத்தால் மனமும் குறுகி விடுகிறது. இதுவே மாநரகங்களில் இருப்பவர்களின்  சுயநலத்துக்கு காரணம்.

சில இடங்களில் வேலைக்கு போய் திரும்புவதே போர் முகாமுக்குச்சென்று பத்திரமாக உயிர் திரும்புவதைப் போல ஆயாசமாக இருக்கிறது. அகன்ற வெளியில் வானத்தைப் பார்த்தவாறு மரங்களோடும், செடிகளோடும் உரையாடி வாழ்கிற மனிதர்கள் இன்னமும் பெருந்தன்மையோடு இருக்கிறார்கள்.

#04_கருமிக்கும், ஊதாரிக்கும் வேறுபாடு?

ஊதாரி…… எதிர்காலக்கருமி.

#05_அண்மையில் படித்த நாவல்?

சுப்ரபாரதி மணியன் எழுதிய ‘நைரா’ என்கிற நாவலைப் படிக்க நேர்ந்தது. உலகமயமாக்கலின் பக்க விளைவுகளை பக்காவாக பேசுகிறது. அன்னிய நாட்டில் இருந்து வருபவர்கள் ஏற்படுத்தும் பண்பாட்டு தாக்கத்தையும், பணத்தின் பின்னால் ஒடுபவர்களுடைய பரபரப்பு விதி மீறல்களையும் சொல்லிச் சொல்லி புதினத்தின்  இடையிடையே பல குறியீடுகளைச்சொருகி புதினத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்கிறார். சுற்றுச்சூழல்,  மானுட விடுதலை குறித்தும் தொடர்ந்து சிந்திக்கும் இவரின் மிக முக்கியமான படைப்பு இது.

#06_பணத்தின் மீது ஏன் இத்தனை அபரிமிதமான ஆசை?

பணத்தின் மூலம் நிறைவேற்றிக்கொள்ளும் ஆடம்பரங்களின் அடர்த்தி அதிகரித்திருக்கிறது. ஒரு காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ரகங்களில் மட்டுமே சோப்புகள் கிடைத்தன. இப்போது நூற்றுக்கணக்கான வகைகள் வந்து விட்டன. உலகமயமாக்கல் காரணமாக எந்தக்கோடியில் இருந்தும் பொருட்களை இணையத்தின் வாயிலாக வரவழைத்துவிட முடியும்.

பணம்…. முட்டாள்களைக்கூட பிரபலமாக்கி விடுகிறது. சமூகம் அவர்களை பாசாங்குக்காகவாவது மதிக்கிறது. பணமும் ஒரு போதை. எந்தநேரமும் இறங்காத போதையாக இருப்பதால் அது பலரையும் வசீகரிக்கிறது. பலரும் தங்கள் பள்ளங்களையும் நிரப்ப பணத்தையே பயன்படுத்ததுகிறார்கள்.

#07_எப்போழுது குற்ற உணர்வு ஏற்படுகிறது?

சமூகமும், குடும்பமும் ஒருவருக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சமூகம் விதித்த நியதிகளை கடக்கிறவர்கள்…..  குற்ற உணர்வினால் பீடிக்க படிகிறார்கள். இன்னொரு பக்கம்.. ஒருவன் செய்த தவறால் விபரீத விளைவுகள் உண்டானால் அதற்குத் தான் தான் காரணம் என்கிற உணர்வு ஏற்படுகிறது.
இவையெல்லாம் குளிர்காலத்தில் குளிக்கும் போது குளிர்ந்த நீரின் முதல் குவளையை மேலே ஊற்றும் போது ஏற்படும் நடுக்கத்தை போல தற்காலிகமானது தான் அடுத்தடுத்து இவற்றை செய்கிறவர்கள் அவற்றை நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

தூய்மையான இதயம் ​​பெற்றவர்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாமல்… உள்ளுனர்வின் மையத்தில் இருந்து செயல்படுகிறார்கள். அவர்கள் குற்ற உணர்வில் விழுவதுமில்லை புனிதராகக் கருதி புளகாங்கிதம் அடைவதுமில்லை.

#08_நம் அன்பைப் புரிந்து கொள்ளாவதர்களைப்பற்றி!

புரிந்து கொள்வதற்கு அன்பு என்ன கணித சூத்திரமா? அது உணர்வு சம்பந்தப்பட்டது. 'பாம்பின் கால் பாம்பறியும்' என்பதற்கேற்ப அன்பு இருப்பவர்களால் தான் அன்பை உணர முடியும். அது எல்லாருக்கும் சாத்தியமல்ல காலை நுழைப்பவனின் பாதங்களையும் ஈரப்படுத்தி குளிர்வித்து விட்டுத்தானே செல்கிறது ஆறு.

#09_நா காக்க என்றால் என்ன பொருள்?

பேசுவதிலும் உண்பதிலும் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவமானப்பட, அவதிப்பட நேரிடும்.

No comments:

Post a Comment