கற்றதும் பெற்றதும்-14
*மணி
கற்றாரை கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உசுக்கும் பிணம்
-ஒளவையார்
கொன்றைப் பூ மாலையை அணிந்த சிவபெருமானைக் குறிக்கும் வகையில் இதன் தலைப்பு கொன்றைவேந்தன் என பெயர் சூட்டப்பட்டது. ஆத்திச்சூடி என்பதே ஆத்திப் பூ மாலையை அணிந்த விநாயகன் என்பதை குறிப்பது. இது பலருக்கும் தெரியாது.
தனிமனித ஒழுக்கங்களை இவ்வளவு மிக எளிதாக சொன்னவர்கள் ஒளவையைத்தவிர யாரும் இருக்க முடியாது.இளமையில் கல் என்பது இந்த வரிகளுக்காகவே சொல்லப்பட்டிருக்கலாம்.
கொன்றை வேந்தன் 91 வரிகள் உள்ளன.இதில் உள்ள தெரியாத வரிகளை குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.
* ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
நிறைய பொருள் தேடுவார்கள் தானும் அனுபவிக்காமல் மற்றவர்களுக்கும் கொடுக்காமல் வாழ்வது தேனீக்கள் தேனை சேகரித்து வைத்து தானும் உண்ணாது,பிறர் அணுகவும் அனுமதியாது. ஒருநாள் தேனீக்களை விரட்டிவிட்டு தேனை எடுத்துக் கொண்டு செல்லும் கதை போலத்தான் உலோபிகள் சேமித்துக் கொள்ளும்
* ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
ஒரு ஊரில் நிலைத்து வாழா விட்டால் உனக்கு எப்படி நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். ஆகவே நல்ல நண்பன் துணையோடு ஒரு ஊரில் நீடித்து வாழவேண்டும் என்பதே பொருள்
*அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
நம்முடைய முக்கிய உணவுப்பொருள் அரிசி அதாவது நெல். நம் வாழ்க்கைக்கு அவசியமான பல பொருட்கள் எல்லாம் வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் உடலில் வலு இருக்கும் காலத்திலேயே பணத்தை சேமித்து கொள்ள வேண்டும். சம்பாதித்தால் மட்டும் போதாது சேமிக்கும் பழக்கம் வேண்டும். உரிய காலத்தில் சேமித்து வைத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாய் வாழலாம்.அஃக்கம் என்றால் தானியம்
* காவல்தானே பாவையர்க்கு அழகு
பெண்கள் தங்களுக்குத் தாங்களே காத்துக் கொள்ளும் காவலே சிறந்தது. பிறர் காவல் காக்க முடியாது.
* கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
உன்னிடம் வல்லமையுள்ளது, வெல்லும் திறமை உள்ளது, கூரான ஆயுதம் உள்ளவனைப் போல. ஆனால் செருக்குற்று நான் வெல்லுவேன் கொள்ளுவேன் என்று வீராப்பு பேசாது அமைதியாக இருக்க வேண்டும்.
தற்புகழ்ச்சி ஆகாது
* கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
வெற்றி தோல்வி வரும்போது சிலர் வியாபாரத்தை விட்டு விடுவார்கள். மனம் தளர்ந்து போவார்கள். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. துன்பம் வரும்போது தான் மன உறுதி பெற வேண்டும். அந்த உறுதி முயற்சியை ஊக்குவிக்கும். நஷ்டத்தை ஈடுகட்ட இழந்த பொருளை மீட்டுத் தரும். ஆகவே மனம் தளரக்கூடாது.
* கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
ஒரு வீட்டில் தீப்பற்றினால் பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவும்.அதுபோல் வம்பு பேசுதலில் விருப்பமுடைய ஒருவனிடம் போய் நீ கோள் சொல்வாய் ஆனால் அது தீயை விட வேகமாக பரவும்
*கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை
பிறரின் குற்றங்களை பெரிதுபடுத்தி சொல்லிக்கொண்டே இருந்தால்
பகை வளரும். அவர்கள் உங்களிடமிருந்து ஒதுங்கிப் போய்விடுவார்கள்.கெளவை-பழிச்சொல்
*சீரைத் தேடின் ஏரைத் தேடு
சீர்-சிறப்பு,ஏர்-கலப்பை.சிறந்த வாழ்க்கை வாழ விரும்பினால் உழவு செய்
(கடைக்குட்டி சிங்கக்கதையை அப்பவே சொல்லியிருக்கார்)
*சேமம் புகினும் யாமம் உறங்கு
சரியானபடி தூங்கவில்லையானால் உடல்நலம் கெடும்.இரவுக்காவல் செய்தாலுமே கொஞ்ச நேரமாவது தூங்க வேண்டும்
(ஜியோ யூசர்ஸ் கவனிக்கவும்)
*சோம்பர் என்பவர் சோம்பித்திரிவர்
சோம்பேறியாக இருப்பவர்கள் சோற்றுக்கு ஏங்கிச் சாவர்
*தையும் மாசியும் வைஅகத்து இரு
வைக்கோல் வேய்ந்த வீடு குளிருக்கு அடக்கம்.தை,மாசி பனியாயிருக்கும்.கூரையில் வேய்ந்த வைக்கோலில் உறங்கினால் உடல்நலன் பேணலாம்.
*நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவார்
தோற்றத்தை கண்டு எடை போடக்கூடாது.அவர்களிடம் ஏதேனும் ஒரு செயல் இருக்கும்.அதன் மூலம் அவர்கள் உயர்ந்தவர்களாக போற்றப்படுவார்கள்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment