குடிநீரென்பது
ஓடையாயிருந்தது
நதியாயிருந்தது
பின்
ஏரியாயிருந்தது
குளமாயிருந்தது
பின் ஒவ்வொரு வீட்டிலும்
கிணறாயிருந்தது
பின் சுருங்கி
ஆழ்துளைக் கிணறானது
பின்
பன்னாட்டு நிறுவனத்தின்
வியாபாரப் பொருளாகி
ஒரு லிட்டரில் அடைபட்டது
பின் அதுவும் சுருங்கி
அரை லிட்டரானது
இப்போது அதுவும் சுருங்கி
200 மிலி 100 மிலி என்றானது
அடிப்படைக் குடிநீர்
இனி சொட்டு மருந்தெனச்
சொட்டப்படுமோ?
-சௌவி
நிதானம்
எவ்வளவு பரபரப்பான
சாலையிலும் மிதிவண்டி
ஓட்டும் ஒருவன்
உலகத்தை வைத்திருக்கிறான்
நிதானமாக"!
-மணிகண்டபிரபு
நடக்கும் கால்களில்
வேகமும்
எதிர்ப்படுவோரின்
கரங்களிலோ
தோள்களிலோ
முட்டிக்கொண்டும்
கடக்கும் நபர்களின்
அசைவுகளிலும்
நகரும் பேருந்து
ஒலிப்பான்களின்
சத்தத்திலும்
பேருந்தினுள்ளே
ஒலிக்கும்
பண்பலையின் இரைச்சலிலும்
சத்தமின்றி
முட்டிமோதி
மௌனமாகிப் போகிறது
அழுக்குச் சேலை கட்டியிருக்கும்
அந்த யாசனைக்காரியின்
மடிக் குழந்தை
அழுகை
– இ . இளையபாரதி
தமிழன்பன்
பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாகிட முடியாது :
பத்து
நதிகளோடு பழகி
நீங்கள்
ஒரு நதியாக முடியாது :
பத்துப்
புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள்
பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள் .
- ஈரோடு தமிழன்பன்
கடும்புதர் விலக்கிச் சென்று
களாப் பழம் சேர்ப்பார் போல
நெடும்புவி மக்கட்கான
நினைப்பினிற் சென்று
பலப்பல நுணுக்கம் சேர்ப்பார்
படித்தவர் அவற்றையெல்லாம்
கொடும் என அள்ளி உன் தாள்
கொண்டார்க்குக் கொண்டு போவாய்
-பாரதிதாசன்
(அதாவது படித்து அறிந்த அனுபவங்களை ஷேர் செய்யுங்கள் னு சொல்றார்)
தூக்கத்தில் நடக்கும்
வியாதி
கூர்காவுக்கு!
-மணி
No comments:
Post a Comment