கற்றதும் பெற்றதும்-24
*மணி
“சுதந்திரப்போராட்ட காலத்தில் எங்கு பார்த்தாலும் காந்திகளாகத் தெரிந்தார்கள். சுதந்திரம் கிடைத்த பின்னர் தெரிந்தது, காந்தி மட்டும்தான் காந்தி என்று”
- கிரிராஜ் கிஷோர்
பொதுவாய் சுதந்திரம் என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் நம்மில் உள்ளன.முதலில் பிரம்மித்து பார்ப்பது,பிறகு இந்த சுதந்திரம் தேவைதானா என தம் கருத்தில் பிறழ்வது, பின்பு மீண்டும் தருக்க ரீதியில் மனம் ஒரு சமநிலை அடைந்து சுதந்திரம் நல்லதுதான் என முடிவுக்கு வருவது. இந்த மனமாற்றமானது மாறிக்கொண்டே இருக்கும்.நீரில் மூழ்கியவனுக்கு வெளிவர வேண்டும் என்ற இலக்கு மட்டுமே இருக்கும்.அதுபோலத் தான் அக்காலத்தில் பெற்ற சுதந்திரமும்
#அட்லியின் அறிவிப்பு
1946 ஆகஸ்ட் 16ஆம் தேதி "இடைக்கால அரசாங்கத்தை" அமைக்குமாறு வைஸ்ராய் வேவல் பிரபு நேருவை கேட்டுக்கொண்டார். நேரு அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். ஜின்னா முதலில் மறுத்து விட்டார்.
அந்நாளை துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என்று அறிவித்தார்.கல்கத்தாவில் இனக்கலவரம். திட்டமிட்ட தாக்குதல்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வைஸ்ராய் வேவல் பிரபு செயலிழந்தார். அந்த நெருக்கடியான நேரத்தில் தொழிற்கட்சியின் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டார்.
*1948 ஜூன் முதல் தேதிக்குள் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு அதிகார மாற்றம் செய்து விடும். *அதிகார பொறுப்பை ஒப்படைப்பது என்பது பற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்யும். *வேவல் பிரபுவுக்கு பதில் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்படுவார்
#மெளன்ட்பேட்டன் திட்டம்
இந்தியா விடுதலை அடைவதற்கு சரியாக 73 நாட்களுக்கு முன் இந்தியாவை இரண்டாக பிளந்து விடுவதற்கான முடிவெடுத்தார் பேட்டன். இந்திய பிரிவினை பற்றி ஜூன் 3ஆம் தேதி மவுண்ட்பேட்டன், நேரும் ஜின்னாவும் டெல்லி வானொலி மூலம் அறிவித்தனர். அந்த அறிவிப்புக்கு இந்திய விடுதலைச் சட்டம் வடிவம் கொடுத்தது. தேசிய காங்கிரஸ் அங்கீகாரம் அளித்தது. உலக வரலாற்றில் சிக்கல் மிக்க "விவாகரத்து" நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவின் வளமிக்க மாகாணங்களான பஞ்சாபையும் வங்காளத்தையும் கூறுபோட இசைந்தனர்.
#விடுதலை நாள்
ஆகஸ்ட் மாதம் 14-15 ஆம் தேதி நள்ளிரவு பிறந்தது. நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் கூட்டம் கூடியது. ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். சரியாக இரவு 12 மணிக்கு சுதேசா கிருபளானி வந்தே மாதரம் பாடலை உணர்ச்சியோடும் பெருமிதத்தோடும் பாடினார். ஜவகர்லால் நேரு இந்திய சுதந்திரம் பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
" நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னால் நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அந்த ஒப்பந்தத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இந்த நள்ளிரவு நேரத்தில் உலகமே உறங்கிக்கொண்டிருக்கையில் இந்தியா சுதந்திரமாக வாழ்வதற்காக விழித்துக்கொள்கிறது.
நேரு முன்மொழிந்த தீர்மானத்தை செளத்ரி காலிகுவாஸ்மான் வழிமொழிந்தார். இறுதியில் உரையாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் தீர்க்கதரிசனத்தோடு குறிப்பிட்டதாவது..
" நமக்குள்ள வாய்ப்புகள் பெரிது.. நாம் அதற்கான தகுதியும் திறமையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர் பதவிகளில் ஊழல், உறவினர்களுக்கு சலுகை, அதிகார ஆசை, ஆதாயம் பெறல், கருப்புச் சந்தை ஆகியவற்றின் அடிச்சுவடுகளை அகற்றாவிடில் நிர்வாகத் திறமையும், நல்வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதை உறுதி செய்ய முடியாது.
பின்னர் பெண்களின் சார்பாக ஹன்சா மேத்தா மூவர்ணக் கொடியை எடுத்து கொடுக்க, இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு அதற்கு பதில் சுதந்திர இந்தியாவின் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை ஏற்றினார். இந்தியா விடுதலை அடைகிறது என்ற அரசியல் அமைப்பு சட்டமன்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அன்றிலிருந்து அரசியலமைப்பு சட்டமன்றம் இந்தியாவின் நாடாளுமன்றம் ஆயிற்று. மக்களின் ஆரவாரத்திற்கிடையே ராணுவ அணிவகுப்பை நேரு மற்றும் அவரது சகாக்கள் உடன் சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆனால் அதனைப் பார்த்த மகாத்மா காந்தி அங்கு இல்லை நவகாளியில் இருந்தார்.
#பிரிவு
பிரிவினை திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் முஸ்லிம்லீக் முறைப்படி அத்திட்டத்தை ஜூன் 9 இல் ஏற்றுக்கொண்டது. அதன்பின் காங்கிரஸ் செயற்குழு தன் சம்மதத்தை ஜூன் 12ஆம் தேதி தெரிவித்தது. சீக்கியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் பிரிவினையை ஏற்றுக்கொண்டனர். ஆனால் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் தேசம் துண்டாடப்படுவதை கடுமையாக எதிர்த்தனர்.
எப்படியாவது பிரிவினையை தவிர்க்க வேண்டும் என்ற தணியாத தாகத்தில் காந்தி சென்று ஜின்னாவை அவருடைய இல்லத்தில் பலமுறை சந்தித்துப் பேசினார்.ஐக்கிய இந்தியாவை காண வேண்டும் என்ற பல தலைவர்களும் விரும்பினார்கள். ஆனால் நடைமுறை நிகழ்ச்சிகள் நினைப்புக்கேற்றவாறு இல்லை. ஒன்றுபட்ட இந்தியாவை உயிருக்கும் மேலாக நேசித்த காந்தியே தேசப் பிரிவினை என்ற எதார்த்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
#சிறப்பு
இந்திய விடுதலைப் போராட்டம் வரலாற்றுச் சிறப்புடையது. உலகின் வேறு எந்த நாட்டின் சுதந்திரப் போராட்டமும் இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது. ஏனெனில் இந்த இயக்கத்தின் இலட்சியம் போராட்டங்களும், தியாகங்களும், பிற போராட்டங்களில் இருந்து வேறுபட்டவை. இது படிப்படியாக, விட்டுவிட்டு, பல முறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும்.
#தேசியக்கொடி
1921ம் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் அனைத்து இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தபோது பிங்காலி வெங்கையா எண் தையல்காரர் 30 நாடுகளின் கொடியை ஆராய்ந்து முடிவில் தேசியக் கொடி ஒன்றை உருவாக்கி காந்தியிடம் காட்டினார். சில மாறுதல்களுக்கு பின் நமது தேசிய கொடி உருவானது.
நமது கொடியில் உள்ள இரண்டு வண்ணங்களுக்கு 'இந்திய கேசரி 'இந்திய பச்சை' என்று பெயர். உலகிலுள்ள வண்ண தர நிர்ணய பட்டியலில் இந்த இரு வண்ணங்களும் இல்லை. எனவே இந்திய தேசிய கொடிக்கு என்ற விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
#சுதந்திரத்தைக் காப்போம்:
" சுதந்திர தின உரையில் ராதாகிருஷ்ணன் ஒரு மேற்கோளை குறிப்பிட்டார் "நேற்று வரை எந்த தவறுக்கும் நாம் ஆங்கிலேயரை குற்றம் சாட்டினோம். ஆனால் இன்று முதல் இந்த நிமிடம் முதல் செய்யக்கூடிய அனைத்து தவறுகளுக்கும் நாம் மட்டுமே பொறுப்பாகிறோம் என்று கூறினார். இது தான் நிதர்சன உண்மை. இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துவோம்.
"வரலாற்று நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போய்விடும் வெறும் தகவல்களாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன் தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம் என்பார் எஸ்.ரா.
வரலாற்றை வாழ்வியலோடு பொருத்திப் பார்ப்போம். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment