Monday, 6 August 2018

கற்றதும் பெற்றதும்-15

கற்றதும் பெற்றதும்-15
*மணி

எளிய மக்களின் நம்பிக்கையில் ஏதோ ஒரு அரசு அதிகாரம் / ஆன்மீக அதிகாரம் குறுக்கே வந்து விட்டால், அது மூட நம்பிக்கையாகிவிடும்.

-தொ.பரமசிவன்.

*பண்பாட்டு அசைவுகள்
தொ.பரமசிவன்
காலச்சுவடு பதிப்பகம்

தமிழில் வந்துள்ள ஆய்வு நூல்களை பட்டியலிட்டால் இந்நூல் நிச்சயம் இடம்பெறும்.ஒவ்வொரு பக்கத்திலும் அறிவுப்புதையல்.அறியாத விஷயங்கள்,கிராமத்து சொலவடைகள்,

இத்தனை நாள் இதை தெரிந்துகொள்ளாமல் விட்டோமே என ஏங்க வைக்கும் இவரின் கட்டுரைகள். தொ.ப வின் பெயரையே இப்போதுதான் கேள்விப்படுவோர்க்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன். இனிமேலாவது இவரின் நூல்களை தேடி வாசியுங்கள்.

#தண்ணீர்

மேலெழுந்தது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை அமிர்தம் என்றார் வள்ளுவர். நீர்நிலைகளுக்கு தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளிப்பதற்குப் பயன்படும் நீர்நிலை குளம் என்பதாகவும், உண்பதற்கு பயன்படும் நீர்நிலை ஊருணி எனவும், ஏர் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ஏரி எனவும், வேறு வகையான  மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் ஏந்தல் என்றும், கண்ணாறுகளை உடையது கண்மாய் என்றும் தமிழர் பெயரிட்டு அழைத்தனர்.

#உப்பு

மனிதகுல வரலாற்றில் உப்புக்கு தனி இடம் உண்டு. உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்கு சுவை என்பது முதல் பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு போன்றவையெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டு பிறந்தவை.

" செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது)  கொடுத்த வழக்கத்தினால் தான் "சம்பளம்" என்ற சொல் பிறந்தது. ஆங்கிலத்தில் salary என்ற சொல் salt என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இருந்து கிடைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னும் பலரிடம் இருக்கிறது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு. இறந்தவரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள்.

#வீடும் வாழ்வும்

நகர நாகரிகத்தின் அடையாளங்களில் ஒன்றாக இன்று நாடு முழுவதும் கற்காரை (கான்கிரீட்) வீடுகள் உருவாகி வருகின்றன.வீடு என்ற சொல் தொழில்களத்திலிருந்து விடுபட்டு நிற்கும் இடத்தை முதலில் குறித்தது. விடுதி என்னும் சொல்லும் அந்தப் பொருளில் வந்தது தான். சங்க காலத்தில் வீடு என்பதற்கு பதிலாக மனை என்ற சொல் காணப்படுவது உண்டு. உறங்கி இருக்கும் இந்த இடத்துக்கு உரியவள் மனைவி எனப்பட்டாள்.

சுட்ட செங்கல் வீடு கட்டிக் கொள்ளவும், வீட்டுக்கு மாடு எடுத்துக்கொள்ளவும், வீட்டு தோட்டத்தில் கிணறு வெட்டி கொள்ளவும் காலத்தில் அரசர்களின் அனுமதி வேண்டும். அந்த அனுமதியை பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாடு அரண் செய்வதற்கும் பேணிக்  கொள்வதற்கும், ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக கிணறுகள் இருப்பதை இப்போதும் காணலாம்.

உயர் சாதியை சேர்ந்த பெண்கள் 16 முழச் சேலையினை தார் இட்டுக் கட்டிக் கொண்டதால் மடிதார்-மடி சார் எனவும் அழைக்கப்பட்டது.

#உறவுப்பெயர்கள்

உறவுப்பெயர்கள் பொதுவாக விளிப் பெயர்களாகவே விளங்குகின்றன. அம்மை, அப்பன், மாமன் போன்றவை. இவற்றுள் அக்காவை குறிக்கும் மக்கள் என்ற சொல் வழக்கு முற்றிலும் மறைந்துவிட்டது.

சிறுமை அல்லது இளமை என்னும் பொருள் தரும் நல் என்னும் முன்னொட்டு சில இடங்களில் மட்டும் நல்லப்பன் என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதற்கு சிற்றப்பன் என்று பொருள். இப்பெயர் நேரடியாக வழங்காத இடங்களிலும்  "நடக்க மாட்டாதவன் நல்லப்பன்  வீட்டில் பெண் எடுத்தானாம்! என்று சொல்வார்கள்.

அது போலவே தம்+ அப்பன்=தமப்பன் என்ற சொல் தகப்பன் என்று புழக்கத்தில் உள்ளது. தமக்கை என்ற சொல்லையும் தம்+அக்கை என்று பிரித்துக் கொள்ள வேண்டும். அண்ணனை தம்+ஐயன் எனப் பிரிக்கலாம். பின்பிறந்த இளையவனை குறிக்க "தம் பின்" எனும் சொல் வழங்கி இருக்கலாம்  தம்பி என மருவி இருத்தல் கூடும்.

#மக்கட்பெயர்

5ம் நூற்றாண்டு காலம் தமிழகத்தில் செழித்து வளர்ந்திருந்த சமண பௌத்த மதங்களின் செல்வாக்கால் தமிழ் மக்களின் பெயரில் இன்றளவும் தங்கியுள்ளது. குணம் என்னும் முன்னடை யோடு கூடிய பெயர்களும், பாலன் என்ற பின்னடைவு கூடிய பெயர்களும் கல்வெட்டுகளில் மிகுதியாக காணப்படுகின்றன. குணசீலன், குணசேகரன், குணசீலன் ஆகிய பெயர்களும் நாகேந்திரன் ஜீவேந்திரன் ஆகிய பெயர்களும் ஆகும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பரவலாக வழங்கும் சில பெயர்களை அடையாளம் காணலாம். அம்மாவாசை, ஆபாசம், விரசம், சுடலை, கருப்பன் முதலியவை. பெரும்பாலும் சிறு தெய்வ பெயர்களை ஒட்டி அமைந்தவை இவை. அரசியல் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் இடத்தில் மட்டுமே வழங்கி வந்த பெயர்களாகும். பெரு தெய்வங்களின் பெயர்களையோ பெரியசாமி, ராஜா என மேன்மை சுட்டும் பெயர்களையும் ஒடுக்கப்பட்ட சாதியினர் தம் பிள்ளைகளுக்கு இடமுடியாது. மேல் சாதியினர் வேலை ஏவும்போது இந்த பெயரால் அழைப்பது தரக்குறைவாக கருதினர். பெயரிடும் முறையில் மேலோர் கீழோர் என்ற பிரிவு இருந்தது.

#இது போல் எண்ணற்ற அறியப்படாத தகவல்கள் உள்ள இப்புத்தகத்தை அனைவரின் வீட்டிலும் வைத்திருப்பது பழம் தமிழர் வாழ்வியலையும், பழந்தமிழக பழக்க வழக்கங்களையும் அறியக்கூடிய ஒப்பற்ற புத்தகமாகும்

-தொடந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment