கற்றதும் பெற்றதும்-17
*மணி
எவன் தன்னைத்தானே செலவழிக்கிறானோ அவன் பணக்காரனாகிவிடுகிறான்
-ஸாரா பெர்ன்ஹர்ட்
#ருத்ரன்
கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு ஆசிரியை ருத்ரனின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறீர்களா.. என கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. ருத்ரன் மருத்துவர் ஆயிற்றே அவர் எழுதுவாரா.. அவரின் புத்தகங்கள் இருக்கின்றனவா.. என்று ஆச்சர்யப்பட்டேன். எதெச்சையாக பல ஆண்டுகள் கழித்து அவரின் புத்தகத்தை நூலகத்தில் தான் பார்த்தேன். சிறிய புத்தகம் ஆனால் எண்ணற்ற விஷயங்கள், நல்ல உளவியல் தத்துவங்கள், அவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தேன்
#அதோ அந்தப் பறவை
உள்ளே நிறைய வார்த்தைகள்
"மகிழ்வை விடவும்
ஆழமான பதிவுகள் சோகத்தினால் தான்"
சோகம் எப்போதுமே வலிதான். உணர்வாக மட்டுமின்றி, நினைவாகவும் வழிதான். சோகத்தைச் சந்திக்காதவர் எவரும் இல்லை எனலாம். சோகத்தைப் புரிந்து கொள்வதும் அது முடிந்த பிறகுதான்.
தாக்கி, நிலைகுலைந்து, தடுமாறி எழுந்து மீண்டும் இயங்குவதற்குள் சோகம் வாழ்க்கையில் ஒரு நிரந்தரமான ஞாபக வடுவை உருவாக்கிவிடும்.
ஜன்னலுக்கு அப்பால் ஒரு கிளையில் கவலை இல்லாமல் ஒரு பறவை. அந்தப் பறவை எது என்று தெரியவில்லை. அந்தப் பறவை கிளை மாறுகிறது. வேறு கோணத்தில் பார்க்கிறார்..
"விலகி நின்று பார்த்தால் எல்லாமே சுவாரசியம்தான்"
" வாழ்க்கை வரவு வாழ்வது தான் செலவு" இப்போது அமர்ந்திருக்கும் அந்த பறவையை பற்றி என் யோசனை. எதைப் பார்ப்பது தெருவையா பறவையையா தெரியாது. தெரியாது என்பதுபோல் ஒரு சௌகரியமான பதில் எதுவும் இல்லை. அதைப் போல பறவை உட்கார்ந்திருக்கிறது. கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. என பறவையின் இருப்பை பதிவு செய்கிறார்.
# அந்தப் பறவைக்கு பின்னால் வானம். வானுக்கு எல்லை இல்லை. பறவைக்கு பறக்க முடியும்.என்னால் யோசிக்க முடியும். என்னால் தான் யோசிக்க முடியும். யோசிக்க கஷ்டப்பட முடியும். அந்த பறவைக்கு அந்த கஷ்டம் இல்லை.
சன்னல் இல்லாவிட்டால் சுவற்றுக்கும் வானத்துக்கும் வித்தியாசமில்லை. பார்வை தான் அர்த்தம். மொழி தான் பார்வை. பார்க்கும் விழி தான் பார்வை. கிளைகளாய் கேள்விகள் பெருகினாலும் பறவைகள் போல் பதில்கள் அவ்வப்போதுதான் இளைப்பாறும்.
#தத்துவ வார்த்தைகள்
காலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. ஒரே திசையில் சென்று கொண்டிருக்கின்றன.மனம் தான் அலைகிறது. பழையதை மீண்டும் புரட்டிப் பார்க்கிறது. அறிமுகமானதை மீண்டும் அறியத் துடிக்கிறது.வலி போய் வடு மறைந்தாலும் அடிபட்ட இடத்தை வருடிப் பார்க்கிறது.பறவையின் குணத்தை கூறிவிட்டு தன் சுய மதிப்பை கூறும்போது..
" எனக்கு நிறைய தெரியும். அதை விட நிறைய தெரியாது. தெரியாது என்பது சவுகரியமாய் நினைவில் வராததால், தெரியும் என்பதே எளிதில் மனதில் தெரியும்.
#பாவம் அந்தப் பறவை
பாவம் அந்த பறவை
இன்று சாப்பிட்டிருக்குமா?
நாளை சாப்பிடுமா? எனக்கு நாளை உணவு நிச்சயம். வாழ்வு?
பேனா முனைக்கு வராமல் போன வார்த்தைகள் எத்தனை! ஆனால் நினைவுக்கு வந்து போகாத எண்ணங்களை இல்லை. அது வருவதும் போவதும் தெரியாது.
எனக்கு வேடிக்கை பார்க்க விஷயங்கள் முக்கியம் என சொல்லும்போது ருத்ரன் சொல்கிறார்
" விஷயங்கள் எல்லாமே மலர்கள். சில அழுக்காக கூட இருக்கும்; சில துர்நாற்றம் கூட வீசும். எல்லாவற்றையும் மனம் ஆண்டாள் போல பதிவு செய்யும். சூடி கொடுத்து, மீண்டும் எடுத்துக்கொள்ளும். மறுநாள் காய்ந்தவுடன் குப்பையாக்கி வீசும்.
#ஒரு மாதம் கழித்து அதே பறவை இருந்த இடத்தை பார்க்கும்போது அதே நினைவு.தனிமை தத்தளிக்கும்,கூட்டு (கூட்டாளிகள்) கரை சேருவது போல.
" அது என்ன எப்போதும் எதிலும் கூட்டு 10 பேர் நாலு பேர்.. "தனிமைக்கு தைரியம் போனால் அழ மடி வேண்டும்,
அரண்டிருக்கும்போது அண்டி கொள்ள கை வேண்டும். எடுத்து அடி வைக்க,எக்கி விடும் கால் வேண்டும். படுத்து தூங்கவும் ஒரு ஆறுதல் பிடி வேண்டும்.
பயம் ஏன்?
இல்லாதிருந்தாலும்
எல்லாமிருந்தாலும்
கல்லாதிருந்தாலும்
கற்றதால் நினைத்தாலும்
பயம்
"பயம் தனிமையின் கேள்வி; அது துணை மனதின் விடை.
அந்த இருட்டில் இருப்பதாய் நான் நம்பும் பறவை.
#கோபம்
பறவையை தொடர்புபடுத்தி மனிதனின் கோபத்தை படம் பிடிக்கிறார்.
"ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும் அவை வேகமாக சிந்தனையை அலசியிருக்கும். அவை இப்போது நினைவில் இல்லை. நினைவில் நிற்பது அதன்பின் நேர்ந்த அவமானம் மட்டுமே. அவமானத்தின் பின்விளைவு எப்படி கோபமாக இருக்க முடியும். வெட்கமல்லவா வரவேண்டும்.
முதலில் என் மீது கோபம். அழுகை வரவில்லை, ஆத்திரம்தான் வருகிறது. கட்டுப்படுத்திக் கொள்ளவே கட்டாயப்படுத்தி நானே என்னை எழுத வைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வெறுமையின் அச்சுறுத்தல்கள் கோபத்தை இன்னும் அதிகரிக்கிறது.
இவ்வாறாக எண்பது பக்கம் கொண்டநூலில் மனவியலையும், வாழ்வியலையும் தத்துவ வரிகொண்டு நேர்த்தியாக நெய்திருக்கிறார்.ஒரு மேட்டில் ஏறி பள்ளத்தில் இறங்கி,திரும்பவும் மேட்டில் ஏறி இலக்கை அடைந்திருப்பது போல சொல் சிக்கனத்துடன் எழுதியிருப்பது வியப்பளித்தது.
#மனம் கவர்ந்த வரிகள்
* துயரம் முடியும் போது, சோகம் தீரும் போது அப்போதுதான் உள்ளே எவ்வளவு குப்பைகள், எத்தனை வைரங்கள் என்று தெரியும்.
* பெரும்பாலும் பெருமூச்சு வருகிறது
*வாழ்க்கை நிஜம் வாழ்வது கற்பனை
* வாழ்வு கடிகாரத்தில் செலவாகிறது வாழ்க்கை காலத்தில் வரவாகிறது
*ஒரே விஷயம் தான். ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு விதமாக படுகிறது- ஞாபகங்களை அவ்வப்போது அடுக்கி வைப்பதால்; சில நேரங்களில் அவசரமாய் கலைத்துவிடுவதால்.
* கவனித்தால் எல்லாமே அழகாகத் தெரிகிறது
* அழுக்கும் குப்பையும் கூட அப்புறப்படுத்தும் வரை தான் என்று தொனிக்கின்றன
*நிதானம் தவறாது போல நிம்மதி அடைவதும் ஒரு கணத்தில் தான்
* வாழ்வின் தேடலில்
தேடலில் இலக்கு மட்டுமல்ல, தேடலும் சுகமாகும்
* விலங்குகளுக்கு மட்டும் அல்ல வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது வெளி
*எழுத்து வேண்டுமானால் வர்ணிக்கலாம் எழுத்து வலிக்காது
* பொய் எப்போதுமே வரலாகாது அது செலவுகளை ஈடுகட்ட முற்படும் இன்னொரு பொய்மை
* யாரும் யார் மாதிரியும் ஆகிவிட முடியாது
அவர்கள் முன்மாதிரி என்றால் அவர்களுக்கு முன் அது மாதிரி யாரும் இல்லை என்பதால்.
-ருத்ரன்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment