Monday, 6 August 2018

கற்றதும் பெற்றதும்-18

கற்றதும் பெற்றதும்-18

*மணி

வீசிவிட்டு போன தினசரி நனைந்திருந்தது சற்று. வீசிவிட்டு போன பையன் நனைந்திருப்பான் முற்றிலும் - கல்யாண்ஜி"

கல்யாண்ஜி

காற்றுக்கு அறிமுகம் தேவையில்லை என்பதுபோல் கல்யாண்ஜிக்கு அறிமுகம் தேவையில்லை.வாழ்வின் அவசர ஓட்டத்தின் முன் நகர்தலை தடுத்து சொற்களில் இளைப்பாற வைத்தும்,அழகியலின் பிடிமானத்தை நம்முள்ளும் கடத்துவதில் ஒரு கவிதைக்காரர். சொற்களை விதை நெல்லைப்போல் கையாள்வதில் இவருக்கு நிகர் இவரே..

" எல்லோர் சொல்வதிலும் கொஞ்சம் உண்மை  இருக்கிறது

எல்லோரும் சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இல்லை..

எல்லாருக்கும் சொல்லே வேண்டுமெனில் யாரிடம் தருவேன் என் கண்ணீரை?

படைப்பு என்பதை படிப்பவரையும் சேர்ந்து கவனிக்க வைப்பது.தான் பார்த்த நுண்ணிய அழகியலை நம்மையும் காண வைக்க கவிஞன் நீட்டும் ஆள்காட்டி விரலே கவிதை. விரல் நீட்டும் திசையில் பார்க்கும் நம் பார்வை இன்னும் விசாலப்படும்

"பழகிய காலணிகளை இருட்டுக்குள் கால் நுழைத்து அணிந்து கொள்வது போல இருந்தது

கழற்றிப் போடப்பட்டிருக்கும் இருட்டில்

இந்த இரவின் ஊடாக

நாளைக்கு செல்வது

*இந்த தினத்தின் முதல் வகுப்பு எடுக்க வந்த ஆசிரியர்
முந்தைய தினத்தின் கடைசி வகுப்பு எழுத்து மிதக்கும் கரும்பலகையை பார்க்கிறார். மிகுந்த தயக்கத்துடன் ஒரு முந்திய தினத்தை எல்லோரிடமிருந்தும் அளிக்கிறார்

#எல்லா கவிதையும் புரிய வேண்டுமா?

கோயிலுக்குச் சென்று ஒரு வித அனுபவத்தை அல்லது குறிப்பிட்ட மனநிறைவை பெறுகிற மனிதனைப் போல கவிதையை அணுகும் நபர் ஏமாந்து போகிறார். குறிப்பிட்ட உணர்வினை கவிதைத் தர வேண்டும் என்று நினைக்கும் வாசகன் அவ்வுணர்வை பெறாமல் காணாமல் போகிறான். பிரதானமாய் புரிய தன்மை என்பது கவிஞன் இடத்தில் இல்லை கவிதை இடத்திலும் இல்லை மாறாக வாசகர்களாகிய நம்மிடம் தான் உள்ளது.ஆனால் கல்யாண்ஜியின் கவிதைகள் எட்டுவழிச் சாலைபோல் இல்லாமல் பெரும்பாலும் மேதாவித்தனம் இல்லாத எளிய சாலைபோலவே இருக்கும்.

" எல்லோரும் பசியில் இருந்தோம் எங்கள் முன்னால் இருந்த
ஒரே ஒரு ரொட்டி
அவரவர் கண்கள் அளவில் துண்டுகளாய் தெரிய.

#பார்வையில் இருக்கும் பசியின் அளவை வார்த்தையால் அளக்க முடியாது.

" யாரும் அகன்றுவிட வேண்டாம் கட்டிலைச் சுற்றி அப்படியே நில்லுங்கள்
உங்களிடமிருந்து பெற்றிருக்கும் சிரிப்பை
உங்களிடம் நான் ஒப்படைக்க வேண்டும்"

#மின்விசிறியின் காற்று வாங்கிப் பழகியவனுக்கு வெட்டவெளியில் கிடைத்த இயற்கை காற்று போல இருக்கும் கல்யாண்ஜியின் வரியை படிக்கும்போது.இவரின் புத்தகத்தின் பக்கத்தைக்கூட அன்பாய் புரட்ட இவரின் எழுத்துக் கற்றுக்கொடுக்கும்.

எழுத்துக்களில் உள்ள வியப்பை மனிதனிடத்தில் பார்க்கும் கவிதையாய்..

* எழுத்துக் கூட்டி யாவது மனிதர்களை வாசித்து விடுகிறேன்.

* வெயில் காலத்தில் ஒரு மாதிரி இருக்கிறேன். இந்த மழை காலத்தில் வேறு மாதிரி இருக்கிறேன். எனக்குள் வளரும் தாவரம் அப்படி.

#வெயிலிலிருந்து நகர்ந்து நிழலுக்கு வருவதுபோல..
சிந்தனையிலிருந்து வெளிப்பட்டு நனவுலகையும் கனவுலகையும் தொடர்படுத்தும் கயிதுபோல் இக்கவிதை

* நனைந்து வீட்டுக்குள் நுழைந்தவள்
தலையிலிருந்து மழை கொட்டிக்கொண்டிருந்தது. சொல்லலாம் மழையிலிருந்து அவள் சொட்டிக் கொண்டே இருந்ததாகவும்

* கடைசியாக பஸ்ஸிலிருந்து இறங்கி இறங்குபவர்களை கடைசியாக அரங்கில் இருந்து வெளியேறுபவர்களை
ஒரு பந்தி வரிசையின் நடுஇலை ஒன்றில் கடைசியாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பவரை...
நான் முயல்கிறேன் கடைசி வரிக்கு முந்தைய வரிகளில் ஒன்று எழுதி விடுவதை

#எவ்வளவு விளக்கங்களுக்கு அப்பாற்பட்டும் கவிதைகள் தமக்குள் ஒரு சூட்சும ஆழங்களை வைத்துக் கொண்டுதான் இருக்கும் என்பார் பிரம்மராஜன்.இன்று புரிந்து கொள்ளப்பட்டது அடுத்த சில தசாப்தங்களில் மீண்டும் மூடப்பட்டு விடலாம்.

* நீங்கள் என்னை சாப்பிட்டுக் கொண்டே இருந்தீர்கள்.
உங்கள் தட்டில் கொஞ்சம் மிச்சம் இருந்தேன் நான்.
எனக்கு இப்போது கடும் பசி. என்னை நான் சாப்பிடத் துவங்கி இருக்கிறேன் உங்கள் தட்டிலிருந்து எடுத்து.

*உருண்டு விழுந்தோடும் பென்சிலை
குனிந்தெடுத்தந்த சிறுமியிடம் கொடுக்கையில்
பென்சில் அழகாக இருந்தது
ஒரு உலகம் போல.
உலகம் அழகாக இருந்தது
ஒரு பென்சில் போல.

#எவ்வளவு எதார்த்தமான இருக்கிறது இந்த கவிதை சிறு சிறு விஷயங்களில் நாம் தவறவிட்ட அத்தனை இன்பங்களையும் தன் வார்த்தைகளில் வசப்படுத்தி விடுகிறார் கல்யாண்ஜி.

#கல்யாண்ஜியின் முத்திரை வரிகள்:

*எனக்கு இருக்கும் இறந்த காலம் போல,
பறவைக்கும் இருக்கும் அல்லவா
-ஒரு பறந்த காலம்

*போய்க்கொண்டிருக்கும் போது "ஒரு கைப்பிடிச்சு தூக்கிவிடுங்க" என்று கனத்த கூடையுடன் சில முகம் அழைக்குமே,
அப்படி அழைக்கும்படியாக
  நான்
போய்க் கொண்டிருந்தால்
போதும்

*எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தை விட,அணைந்த பொழுதில் தொலைந்த வெளிச்சம் பரவுகிறது மனதில் பிரகாசமாக...!

*நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன் 
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

*தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்

*முடி திருத்துகிற ஒரு தெய்வம்
செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக்
கொள்கிறது

*உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே!"

*என்ன செய்துகொண்டு
இருக்கிறாய் இப்போ?
என்று நானும்
இனிமேல் கேட்கலாம்
எனக்கு வேலை கிடைத்துவிட்டது

*"தானாய் முளைத்த செடி என்கிறார்கள் யாரோ வீசிய விதையிலிருந்து தானே

*கருப்பு வளையல் அணிந்து குனிந்து வளைந்து ஒருத்தி பெருக்கிவிட்டு போனாள்.வாசல் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு.'

-தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment