கற்றதும் பெற்றதும்-26
*மணி
"முடிக்கிறதிலே என்ன கஷ்டம்...ஆரம்பிக்கிறதிலேதான் கஷ்டம்" -வண்ணதாசன்
*சின்னுமுதல் சின்னுவரை
வண்ணதாசன் எழுத்துக்களை படிக்கிறோம் என்றால் புத்தகத்தின் பக்கங்களை கூட மென்மையாய் திருப்புவோம்.லைலாவின் முகத்தை பார்த்த மன்னன் இவளையா காதலிக்க்கிறாரய் என்பார்.உடனே மஜ்னு..மன்னா அவளை என் கண்களின் வழியே பாருங்கள். அவள் எவ்வளவு அழகென்று புரியும் என்பது போல வண்ணதாசனின் எழுத்து எனும் விழி வழியில் பார்த்தால் உலகம் எவ்வளவு அன்பானது, பொறுமையானது என்பது புரியும்.
ஒரு கதையிலோ நாவலிலோ புனைவின் வழி சொல்லிவிடலாம்.ஆனால் கட்டுரையில் மட்டுமே தம் சொந்த கருத்தை பதிவிடும் அல்லது தீர்வு சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.அவ்வகையில் இக்கட்டுரையில் வந்த அழகியலில் ஒரு சில..
#"இடது உள்ளங்கையை வட்டமாக குவித்து, அதன் மேல் தாள் பூ இலையை வைத்து, வலது கையை அகல விரித்து அடிப்போம். "டொப்" என்று சத்தம் வரும் .அது ஒரு விளையாட்டு. அது எல்லாவற்றையும் ஒரு விளையாட்டாக ஏற்றுக் கொள்கிற மனம் இப்போதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எளிய உதாரணத்தின் மூலம் ஒரு வாழ்வியல் உண்மையை நமக்கு விளக்குகிறார் அதாவது விளையாட்டு மனத்திலிருந்து பக்குவப்பட்டு மனதிற்கு வந்துவிட்டாலும் அந்த விளையாட்டு மனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கம் எல்லாருக்கும் இருக்கிறது.
# மனிதர்களின் வாசம் எனும் கட்டுரையில் மாம்பழ வாசனை அடிக்கிற என் உள்ளங்கையை யாருடைய நாசியில் சற்று பொத்தலாம்? பொத்தின கையையும் பொத்தாத இன்னொரு கையையும் தோள் வழியாக முன் இழுத்து தன் மீது அணைத்துக் கொள்ளும் நிகழ்வையும்..கூறி
அம்மாச்சிக்கு மாம்பழ வாசம் அல்ல.தாத்தா வாசம் அடிக்கும்.மனிதர்கள் வாசம் எவ்வளவு அருமையானது.
# கைக்கடிகாரம் வாங்கும் கடையில்..
" இவ்வளவு பேசி, தீர்மானித்து, தேர்ந்தெடுத்து அந்த சிறுமி இதுவரை செய்தது எல்லாம் பெரிது இல்லை. அப்பா கொடுத்த ரூபாயை வாங்கி கடைக்காரரிடம் கொடுக்கிறது. வாங்கிறவர் கைகளில் ஒரு விரல் நகத்தில் ரத்தம் கட்டி நீலமாக இருக்கிறது.
" கையில் அடிபட்டுவிட்டதா அங்கிள்' என்று கேட்கிறது. "சரியா போச்சு அதெல்லாம்" விசாரிப்புக்கு பதில் சொல்லும் அவர் முகம் கனிந்து நெகிழ்கிறது.
எல்லாம் சரியாகத்தானே போகும், இப்படி அக்கறையாக கேட்க ஒரு 8 வயது சிறுமி இன்னும் நம்மோடு இருக்கும் போது.
# அசோகமித்திரனின் கைவிரல்கள் பற்றி கூறும்போது
நமக்கும் விரல்கள் இருக்கின்றன. நாம் அந்த விரல்களால் அனேகமாக என்ன செய்கிறோம்? அப்புறம் படித்துக் கொள்ளலாம்' என அந்தப் பக்கங்களை, எச்சில் தொட்டுப் புரட்டி, அடுத்த பக்கத்திற்குச் சென்று விடுகிறோம். அந்த "அப்புறம்" வருவதே இல்லை என்பதுதான் துயரமானது.
#எங்களுக்கெல்லாம் அல்ஜீப்ரா தெரிகிறது என்றால் அது திலகா அக்கா புண்ணியம்.கணக்கை நிலா நிலா ஓடிவாபோல் எளிதாய் இருக்கும்படி சொல்லிக்கொடுத்தார்.சின்ன வயதில் கண்ணாடி போடுவது அபூர்வம்.அதுவும் தங்க பிரேம் போட்ட கண்ணாடியை பெண்கள் அணிந்து பார்த்ததேயில்லை.கட்டுமரத்தை எப்போது கடலுக்குள் தள்ளுகிறார்கள்,அதில் எப்போது ஏறுகிறார்கள் என்ற மாயத்தை சொல்ல முடியாதது எப்படியோ அப்படியே திலகா அக்காவின் கண்ணாடிச்சட்டம் முகத்தின் பக்கவாட்டில் பொருந்துவதும் அவர்கள் சிரிப்பதும்.
#ரேடியோ போட்டால் அதிக சத்தம் வைத்து,முள்ளை அங்கே இங்கே சுழற்றி, கரகரப்பை அகற்றி, மறுபடி ஒலி அளவை கச்சிதமாய் குறைப்பாள்.குறைந்த பிறகு அமிர்தமாய் காதில் இறங்கும். சன்னமான தீர்க்கத்துடன் குத்து விளக்குச் சுடரை முத்துப்போல ஏற்றுவதும் ஒரு கலை...
#அருவியில் குளிக்கத்தடை.
ஒரு நடுத்தர வயதுப் பெண் ஒலிவாங்கியை பொருட்படுத்தாமல் முதன்முதலில் பார்க்கிறார் அருவியை. இதுதான் முதல் தடவையாக வருகிறோம். அருவியில் குளிக்க முடியவில்லையா பரவாயில்லை. இப்படி ஒரு விஸ்வரூபத்தில் அருவியை பார்க்க முடிந்தது. அதுவே போதும் என கைகளைக் கும்பிடுவது போல் இணைத்துக் கொண்டன. அருவியைத்தான் கும்பிட்டு இருக்கிறார். இன்றைக்கு அந்த பெண்ணை எனக்கு கும்பிடத் தோன்றுகிறது. என்ன துயரம் எனில், அருவி அங்கேயே தான் இருக்கும். அருவியை மீண்டும் பார்த்துவிடலாம். அந்தப் பெண்ணைத்தான் பார்க்கவே முடியாது.
#மனம் கவர்ந்த வரிகள்
*எல்லாவற்றிற்கும் மனம்தான் அளவு
எல்லாவற்றையும் விட மனம்தான் அழகு
* ஒரு வருடத்தின் 365 தினங்களையும் நாம் 365 பறவைகளின் தினங்களாக அறிவிக்க நேர்ந்துவிடக் கூடாது என்பதே என் சிட்டுக்குருவிகள் தினம் பிரார்த்தனை
* ஒவ்வொருவர் பறிக்கவும் ஒவ்வொரு பூக்கள்
* மழைதான் பெய்கிற நேரத்தை அழகாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது
* மழை பாருங்கள். மறையும் உங்களை பார்க்க விரும்புகிறது.
#வண்ணதாசனின் பார்வை எல்லாமே எளிமையானது. சாதாரண மக்களின் அன்றாட நிகழ்வைக்கூட "அட" என்று உணர்த்திவிடுவார்.இவரின் எழுத்துக்களே நம்மை அன்பு செய்யத் தூண்டும்.மஞ்சள் பூக்களும்,வாத மரமும், ரங்கூஸ்கான் பழமும், தாமிரபரணியின் வாடையும் இருக்கும்.இவரின் உள்ளங்கையை எடுத்து நம் கன்னத்தில் வைத்தால் எப்படி இருக்கும் எனக்கூட நான் யோசித்திருக்கிறேன்.புல்லட் ரயிலில் செல்லும் உலகத்தை நிதானத்துடன் பாசஞ்சர் ரயிலில் ஏற்றி உலகத்தை ரசிக்க வைக்கும் இவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்போம்.
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment