கற்றதும் பெற்றதும்-23
*மணி
சுயநலமாக வாழ்பவனுக்கு புகழ் இல்லை,
பொதுநலமாய் வாழ்பவனுக்கு பணம் இல்லை...
-கழனியூரன்
#கழனியூரன்
நெல்லையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், நல்லாசிரியர் விருதுபெற்றவர்.நாட்டார் வழக்காற்றுத் துறையில் இவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
கி.ரா வின் முதன்மைச் சீடராக விளங்கியவர்.கதை சொல்லி இதழிலும், சொலவடைகள் தொகுத்தது, கி.ராவுடன் இணைந்து மறைவாய் சொன்ன கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை தொகுத்தது உட்பட 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து,கதைகளையும் சொலவடைகளையும் தொகுத்து நாட்டுப்புற கதைகளை உலகறியச் செய்தவர். அவ்வகையில் அவரின் "நிறைசெம்பு நீரில் விழும் பூக்கள்" புத்தகத்திலிருந்து சில..
#நேற்றுவரை தூற்றியவர்கள்
நாளை முதல் போற்றுவார்கள்
இன்று அவன் இறந்துவிட்டான்
- எனும் இவர் வரிகள் வாழ்வியலை சுருக்கமாய் கூறியுள்ளார்.
தாலாட்டில் ஆரம்பித்து வாழ்க்கை ஒப்பாரியில் முடிகிறது போல தாலாட்டிலிருந்து இக் கட்டுரைத் தொகுப்பு துவங்குகிறது. தாலாட்டுப் பாடலின் பொருளும், சுவையும் வானத்தில் பட்டம் ஒன்று பறப்பதைப் போல சுதந்திர வெளியில் மிதப்பதாக கூறுகிறார். மிகை கற்பனையும் யதார்த்தமும் கலந்து ஒலிக்கும்.பாடும் சாக்கில் தன் உள்ளக் கிடக்கையையும் பிறருக்கு அல்லது சமூகத்திற்கு சொல்ல நினைத்ததை தாலாட்டு பாடல் மூலம் சொல்லிவிடுவதாக கூறுகிறார்.
#சுதந்திர போராட்ட சுவடுகள்
வாசுதேவ நல்லூருக்கு மேற்கே உள்ள ஒரு குகையின் பெயர் பூலித்தேவர் குகை என்பதாகும். அதை விட்டு வெகு தூரம் விலகி ஒரு பாறை உள்ளது அதற்கு "சோறு ஊட்டும் பாறை" என்று பெயர். பாறை எப்படி சோறூட்டும்? புலித்தேவன் போரில் ஈடுபட்ட போது மன்னனின் உத்தரவுப்படி அப்பகுதி மக்கள் பகலெல்லாம் சமையல் செய்து அந்திக் கருக்கல் நேரத்தில் சற்றே பெரிய நார் பெட்டியில் போட்டு மேலே வைத்திருப்பார்களாம்.காவலுக்கும் இருப்பார்கள். எனவே இப்பாறையை சோறு ஊட்டும் பாறை என்று பெயர்.
* புலித்தேவர் படையின் தளபதியாக இருந்தவர் பெரிய காலாடி. தேவேந்திரகுல வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். கான்சாகிப்பின் படைகள் முகாமிட்டிருந்த செய்தி அறிந்து அதனை தாக்கி எதிரில் இருந்த ஒருவன் தாக்கியதில் காயம் ஏற்பட்டு, வயிறு கிழிந்து குடல் வெளியே வந்த போதிலும் தன் தலைப்பாகையை கட்டியிருந்த துண்டை எடுத்து வெளியே வந்த குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி தன் உயிர் போகும் வரை எதிரிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தார். பிற்காலத்தில் பூலித்தேவர் வீரக்கல் ஒன்றை நட்டு வைத்தான் அந்த இடம் காலாடி மேடு என்று அழைக்கப்படுகிறது.இதுபோலவே ஒண்டிவீரன் கதையும்.
#வெற்றிலை
வெற்றிலை பயன்பாட்டில்
தாம்பூலம்,வரவேற்க,மங்கல வீட்டில்,பெண் பார்த்து வெற்றிலை மாற்ற,மொய் வைக்க, ஆரத்திக்கு, இன்னும் பல.எச்சிலை கண்ட இடத்தில் துப்பாமல் இருக்க,
வெற்றிலை போட்டு துப்பும் பாத்திரத்துக்கு பெயர் துப்பாணி.
*கன்னிப்பெண்ணின் இரண்டாம் தார மணத்தை "வாட வெத்தல பாட்டும்..
*சவத்தை சுடுகாட்டுக்கு அனுப்பும்போது இடது கையில் வெற்றிலை வைத்து அனுப்புவார்கள்.அந்த வெற்றிலையை செத்தவன் கை பிடிக்காது என்பதால் இடது கையின் கீழே வெற்றிலையை வைப்பார்கள்.இதை சொல்லும் மரபுத்தொடர்தான் "செத்தவன் கையில் வெத்தலை கொடுத்தது போல""! என்பர்.
# சில சமுதாயத்தில் சாவு நிகழ்ந்த வீட்டில் பறை ஒலி எழுப்புவார்கள். இதற்கு சாவு பறை என்று பெயர். இது ஒரே சுதியில் இல்லாமல் முதலில் ஒரு செய்தியை ஊராருக்கு அறிவிக்கவும், மாமன் கோடி வரும்போதும், குளிப்பாட்டும் போதும், இறுதி ஊர்வலம் போகும் போதும்.. நுணுக்கமான வேறுபாட்டுடன் அடிப்பார்கள். இதை வைத்து என்ன சடங்கு நடக்கிறது என்பதை ஊர் மக்கள் அறிந்து கொள்வார்கள்.
கிறித்தவ சமயத்திலும் துக்க செய்தியை சர்ச்சைகளின் மணி மூலம் தெரியப்படுத்துவார்கள். குழந்தை இறந்தால் 3 தட்டு, பெண் இறந்தால் 4, ஆண்-5 அவ்வூர் பங்குத்தந்தை இறந்தால் 6, மறைமாவட்ட கத்தோலிக்க குரு இருந்தால் 7 மணி அடிப்பார்கள்.
#அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள்
பொதுவாக கிராமத்தினர் செய்வதை மூட நம்பிக்கையாய் நினைத்துக்கொள்வோம்.ஆனால் அதிலுள்ள அறிவியல் உண்மைகளை.அறிய முற்படும் வகையில் சில
* உச்சி வெயில் நேரத்தில் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. இதனால் சூரியனின் ஒளிக்கதிர்கள் உடம்பின் நரம்புகளைத் தாக்கும் என்பதால்
*மூஞ்சூரை கொன்றால் தலைவலி வரும். மூஞ்சூறு அரிய உயிரினம் கொல்லக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் சொல்லப்பட்டது
*சுடுகாட்டில் பிணம் எரியும் புகையை சுவாசிக்க கூடாது. அதில் அதிகப்படியான கார்பன் உள்ளது.
*வெறும் உரலை ஆட்டக் கூடாது. அதனால் உரலின் உட்புறம் உள்ள கல் கரையும். அதிகமான சத்தம் ஏற்படும்.
* உள்ளங்கையில் படாமல் சாப்பிடுவது உறவுக்கு நல்லது ஏனெனில் உள்ளங்கையில் உள்ள அழுக்கு வயிற்றின் செல்லாமல் இருக்கும் என்பதால்.
*சிவப்பு எறும்பு சாரிசாரியாக வந்தால் வீட்டிற்கு ஆகாது. ஏனெனில் வீட்டில் குப்பை கூளங்கள் இருந்தால்தான் சிவப்பு எறும்பு சாரைசாரையாக வரும்.
* நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது அவ்வாறு கழிக்கும்போது அந்த துளிகள் தெறித்து காலில் படுவதால் நோய்கள் தோன்றும்.
# நமது நாட்டார் மரபில் அறியப்படாத, பதிவு செய்யப்படாத எண்ணற்ற தடங்களை தன் எழுத்துக்களில் சொல்லியிள்ளார். அனைத்து புத்தகங்களும் நிலம் சார்ந்த எதார்த்தத்தையும் வாழ்வியலையும் பதிவு செய்துள்ளார். இவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment