Thursday, 16 August 2018

படித்தது

[20/05, 5:38 pm] TNPTF MANI: எழுத்தாளர்களிடம் இரண்டு கெட்ட பழக்கங்கள் கட்டாயம் உண்டு.

1. கன்னத்தில் ஒரு கை வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் எழுதும் பேனா பிடித்துக் கொண்டு வடமேற்கு மூலையைப் பார்த்துக் கொண்டு, போட்டோ பிடித்துக் கொள்வது.

2. தன் பெயரில் ‘ஒரு பக்கக் கட்டுரைகள்’ எழுதுவது.

முதல் பழக்கத்தை நான் ஒருவாறு தவிர்த்துக் கொண்டு வந்திருக்கிறேன். இரண்டாவதை தவிர்க்க இயலவில்லை. இலக்கியம், பல்பொடி, சினிமா, தத்துவம் என்று கலந்த சங்கதிகளைப் பற்றி என் வாராந்திர அபிப்பிராயங்களுக்காக தமிழ் கூறும் நல்லுலகம் காத்திருக்கிறது என்று நான் நம்ப விரும்பவில்லை. இருந்தும் ‘சுஜாதா பக்கம்’ கட்டுரைகளைத் தொடர்ந்து 24 வாரங்களுக்கு மேல் குங்குமம் பத்திரிகையில் எழுதியதற்கு காரணங்கள், அளவு, எதை வேண்டுமானாலும் எழுதும் சுதந்திரம், ‘யான் பெற்ற இன்பம் (துன்பம் கூட) பெறுக இவ்வையகம் என்கிற சந்தர்ப்பம், எப்போது வேண்டுமெனினும் முடிக்கலாம் என்கிற தைரியம்....

இப்புத்தகத்தை இலவசமாகவோ விலைக்கு வாங்கியோ படிக்க முன்வந்துள்ள உங்களுக்கு வரும் நான்கு தினங்களில் அனுகூலங்களும், கட்டிடங்கள், நிலங்கள், புதிய வாகனங்கள், ஆபரணங்கள் போன்றவைகளில் முதலீடு செய்யும் யோகமும் ஏற்படுமாறு எ.வ. இறைவனிடம் சிபாரிசு செய்கிறேன்.

- சுஜாதா (‘சின்னச் சின்னக் கட்டுரைகள்’ முன்னுரையில் -1987)

[20/05, 8:46 pm] TNPTF MANI: குரலை மட்டுமே சுமந்து வரும் தொலைபேசி உரையாடலின்
சொற்களின் இடையில்
ஊடாடும் நுண்ணிய
மௌன இழைகள்
தானே நெய்து கொள்கிறது
புரிதலின் அடர்த்தியை..

-லதா

[21/05, 7:49 am] TNPTF MANI: என்முகம் பார்த்தபடியே
பயணித்தாள்

புருவம் உயர்த்தி
ஆச்சர்யம் காட்டினாள்

முகம் தாழ்த்திக்
கொஞ்சமாய்ச் சிணுங்கினாள்

உதடு வலிக்காமல்
ஏதேதோ முணுமுணுத்தாள்

ஏதோ யோசித்துத்
திடீரெனச் சிரித்தாள்

நிறுத்தம் வந்ததும்
இறங்கிப்போனாள்
அலைபேசிக்குத்
தலையைச் சாய்த்தபடி.

-கார்த்தி

[21/05, 8:00 am] TNPTF MANI: என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்.

சுஜாதாவின் குரலோடு ஆரம்பமாகிற பாடல். கதையின்படி பெண்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். களைப்புத் தெரியாமல் பாடுகிற பாடல். பின்னணியில் ரஹ்மான் ஓர் ஓசையைப் பயன்படுத்தியிருப்பார். பாடல் நெடுக அந்த ஓசை இருக்கும். கிராமிய உணர்வுக்காக அந்த ஓசை பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.

அதைப் பெண்கள் நெல் குற்றும் ஓசைபோல கற்பனை செய்துகொள்ளவும்.
பெண்கள் உலக்கையால் நெல் குற்றும்போது, இருகைகளையும் மாற்றி மாற்றிக் குற்றுவர். அப்போது அவர்கள் அணிந்திருக்கும் வளைகள் குலுங்கி ஓசை எழுப்பும். அதை வள்ளைப்பாட்டு என்பார்கள். உள்ளத்தில் இருப்பதை உள்ளபடி தலைவி பாடுவாள். இடிக்க இடிக்க உமி எப்படிக் கழன்று போகுமோ அதுபோல இந்தப் பாடல்மூலம் அவள் உள்ளத்து துன்பம் நீங்கும். காதல் வெளிப்படும்.

முற்றத்தில் தினை குற்றுகையில், தலைவி கோபத்தில் தலைவனைப் பழித்துப் பாடுவாள். தோழி, தலைவனுக்கு ஆதரவாகப் பாடுவாள். உதாரணமாக, அவனுடைய நாட்டு வண்டுகள் எல்லாம் பூவினை மணந்துவிட்டு அதன் அழகு கெட கைவிட்டுச் செல்லும் என்று தலைவி சொல்வாள்.

உடனே அதற்கு மறுமொழியாக, அவனுடைய நாட்டு ஆண் யானை, தான் விரும்பிய பெண்யானைக்கு கடினப்பட்டுக் கரும்பு கொண்டுவரும் என்று தோழி கூறுவாள். கலித்தொகையில் கபிலர் எழுதிய "அகவினம் பாடுவம்" பாடல் தலைவிக்குத் தோழி மறுமொழி சொல்லும் பாடல்.

"என் வீட்டுத் தோட்டத்தில்" பாடலில், ஒருபக்கக் காதல் மட்டும் கொண்டிருக்கும் இவள், தன் காதலை பூக்களிடமும் ஜன்னல் கம்பிகளிடமும் கேட்டுப்பார்க்கச் சொல்கிறாள். இருவரும் மாற்றி மாற்றி எதிர்ப்பாட்டு பாடுவார்கள். முதலில் பெண் மறுத்துக் கூறுவாள். பிறகு ஆண் மறுத்துப் பாடுவான். வைரமுத்து அதைக் கையாளும் நயம் அழகு.

வாய்ப்பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது.
வாய்ப்பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது.

வண்டெல்லாம் சத்தம்போட்டால் பூஞ்சோலை தாங்காது. மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது.

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம்போல சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது.

-சுதர்சன்

[21/05, 3:35 pm] TNPTF MANI: எதிலிருந்தாவது விடுபட விரும்பினால் அதை துச்சமாக நினை.

#சரவணன் சந்திரன்

[21/05, 8:48 pm] Yathra Neela: உலகியலை கனவுகளுக்காக உதாசீனம் செய்தால் உலகியலுக்காக கனவுகளைக் கைவிடவேண்டியிருக்கும். ~ ஜெயமோகன்

[22/05, 6:40 am] TNPTF MANI: அருந்ததி ராயின் 'சின்ன விஷயங்களின் கடவுள்' புத்தகத்தின் வாசிப்பனுபவத்தைப் பற்றிய தேடலில் ஒரு blogல் ஒரு வாசகரின் குறிப்பு எனக்குள்ளாக சட்டென ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அது, முதன் முதலாக Inception மற்றும் A beautiful mind படம் பார்த்த போது அந்த அனுபவம் எப்படி இருந்ததோ அதே அனுபவம் அருந்ததி ராயின்' சின்ன விஷயங்களின் கடவுள்' வாசித்த போது கிடைத்தது என்று அந்த நண்பர் குறிப்பிட்டிருந்தார். அதற்காக இந்த மூன்று படைப்புகளுக்கிடையிலேயும் ஒன்றை ஒன்று ஒத்த அம்சங்கள் இருக்குமென்ற அர்த்தமில்லை. மாறாக, ஒவ்வொன்றும் அதனதன் தனித்துவத்தில் பார்வையாளனை, வாசகனை அதுவரை எட்டியிராத உணர்வுகளின் தளத்திற்குள் எடுத்துச் சென்று பழக்கத்தில் இருந்திராத உணர் நரம்புகளை விழிப்பு கொள்ளச் செய்து கற்பனைக் கெட்டாத அகன்ற பிரம்மாண்ட வெளியை தத்ரூபமாக, எப்போதும் அதன் சாரம் குறையாத அனுபவமாக தக்க வைத்துக் கொள்ளும் தன்மையே அந்த படைப்புகளுக்கிடையிலான ஒற்றுமை என்பதே அந்த நண்பரின் கூற்றில் நான் உணர்ந்தது.

பாகீரதியின் மதியம் புத்தகத்திலிருந்து, பாகீரதியின் மதிய நேர தூக்கத்தில் வரும் கனவைப் பற்றிய ஒரு பகுதியின் துணுக்கு என்றோ ஒரு நாள் முகநூலில் முதல் முறை தென்பட்ட நொடியிலேயே எனக்கு நிச்சயமாக தெரிந்தது நான் தேடும் புத்தகம் இது தான் என்று. தமிழ் நவீன இலக்கியத்தில் தி. ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்களுக்குப் பிறகு மறக்கமுடியாத அழகான பெண் கதாபாத்திரமாக பாகீரதியாக தான் இருக்க முடியும் என்ற ஒரு குறிப்பைத் தவிர கதையைப் பற்றிய எந்த வாசிப்பனுபவங்களைப் பற்றியோ, விமர்சனங்களைப் பற்றியோ தேடிப் பார்க்கவில்லை (பார்க்க விருப்பமில்லை). எந்தவித முன் கதை அறிதலுமின்றி வெற்று மனதோடு பாகீரதியின் மதியம் புத்தகத்தை அணுக வேண்டும் என்று எதுவோ என்னைத் தீவிரப்படுத்தியது. சாரு நிவேதிதா வின் ஒரு பேட்டியை யூடியூபில் பார்த்த போது சமீபத்தில் தமிழில் வாசித்த புத்தகங்களில் தன்னைக் கவர்ந்தது பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் என்று கூறியிருந்தார். அப்போதும் அதன் கதைக்களத்தை விவரிக்காமல் ஒரு வரி பதிலோடு நிறுத்திக் கொண்டதற்காக இப்போது அவருக்கு ஒரு நன்றி.

அந்த வகையில், சமீபத்தில் எங்கள் ஊரில் நடந்த புத்தகத் திருவிழாவில் தீவிரமான காத்திருப்பின் தாகத்தோடு வாங்கிய புத்தகங்கள் இரண்டு. ஒன்று எம். ஏ சுசீலா அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியான தஸ்தயேவ்ஸ்கி யின் குற்றமும் தண்டனையும், இன்னொன்று பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம். குற்றமும் தண்டனையும் நான் என்ன எதிர்பார்த்தேனோ அதற்கு பலமடங்கு அனுபவத்தை தந்தது. பாகீரதியின் மதியம் இரண்டு நாள் முன்னதாக படிக்க ஆரம்பிக்கும் போதே புத்தகத்தை முழுவதும் முடிக்கும் முன்னதாக புத்தகம் பற்றி வெளியில் எதுவும் சொல்லக்கூடாது என்று நினைத்துக் கொண்டே புரட்ட ஆரம்பித்தேன். ஆரம்பித்த முதல் பத்து வரியிலேயே என் இருப்பை முழுவதாக கவ்விக் கொண்டதை நானே என்னில் விடுபட்டு போனதை வாசிப்பை ஒரு புள்ளியில் நிறுத்தி வைத்த பின் நிதானத்திற்கு வந்த பின்பே உணர முடிந்தது. முதல் 30 பக்கம் வாசிப்பில் அதன் நீள நீளமான வாக்கியத் தொடர்கள் கவனத்தை வெட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து செல்வதில் மிகச் சவால் நிறைந்ததாக, ஆனால் வாசிப்பில் நிதானமாக ஊன்றும் போது அந்த சவாலே பரவசமான அனுபவமாக உயரமான ராட்டினத்தில் உச்சியில் ஏறும் போது உள்ளுக்குள் கிளரப்படும் கிளர்ச்சியான அனுபவமாக இருந்தது. 30 பக்கங்களைத்தாண்டிய பின் அதன் நடை எளிமையாகிப் போனதா அல்லது மனது அதன் தீவிரமான ஓட்டத்தோடு ஒன்றிப்போய்விட்டதால் வாசிப்பு சரளாகிப் போனதா என்று தெரியாத வண்ணம் கவனத்தை திருப்ப விடாமல் கட்டியிழுத்துக் கொண்டு பயணிக்கிறது கதை. தனிப்பட்ட முறையில் என்னை வெகுவாக கவர்ந்த அம்சம் எழுதப்படுவதற்கு முன்னரே கதையின் கட்டுமானம் அதன் அத்தனை எல்லைப் பரப்புகளோடும், கதைக்குள்ளும் நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கிறதென்பதை உணர்த்தும் படியான காலத்தில் பின்னோக்கிச் செல்லும் கதை ஓட்டம். உதாரணமாக, ஒரு நிகழ்கால சம்பவத்தில் ஏதேனும் ஒரு குறுக்கீடாக வரும் ஒரு கதாபாத்திரம் வாசகனுக்குள் அதற்கான இடத்தை ஒதுக்கிக்கொண்டு விட்டு, அதற்கான பங்கை இரண்டு மூன்று அத்யாயங்கள் கடந்த பின்பு அதன் நிகழ்காலத்தொடர்பின் தாக்கத்தை அதன் அறிமுகமான இறந்த காலத்திற்குள் அழைத்துச் சென்று அங்கிருந்து மீண்டும் நிகழ்காலமான அதன் எதிர்காலப் பார்வைக்கு சிதறல் ஏற்படுத்தாத கவனத்தோடு வாசகனை கொண்டு வரும் பா. வெங்கடேசனின் லாவகம். வரிக்கு வரி வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய மிக முக்கியமான மறக்க முடியாத அனுபவத்தில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை ஆழமாக உணர்த்துகிறது பாகீரதியின் மதியம். 700 பக்கங்களுக்கு மேல் இருக்கும் புத்தகத்தின் 100 பக்கங்களை மட்டுமே இரண்டு நாளில் தாண்டியிருந்தாலும் அனுபவத்தை வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கதையைப் பற்றிய குறிப்புகளையும் சொல்வதற்கு தோணவில்லை. ஏனெனில் எனக்கு Inception படம் முதலில் பார்த்த போது என்ன அனுபவம் கிடைத்ததோ, அதே அனுபவம் பாகீரதியின் மதியம் புத்தகத்தில் கிடைத்தது. அதை என் மூலம் வாசிக்க இருக்கும் நண்பர்களுக்கும் குறையாமல் கிடைக்கட்டும் என்றே.

-ரஞ்சித் குமார்

[22/05, 6:43 am] TNPTF MANI: ஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்
அ.வெண்ணிலா

பதினோரு மணிக்கு மட்டுமே
வெளியே வர வேண்டும்
காலையில் ஒரு முறை
மத்தியானம் ஒருமுறை
குழாயில் தண்ணீர் வரும்
வேளை தப்பி
வெளியே வருபவர்கள்
மைதானம் பெருக்க வேண்டும்
கடும் விதிகளை அறியாமல்
வயிறு பிசையும்
உள்ளாடை நனைந்து
ஈரம் பரவும்
உள்ள யாரு, வெளிய வா
உரத்து ஒலிக்கும்
அதிகாரக் குரலுக்குப் பயந்து
பல்லியாய் சுவரொட்டும் பிம்பம்
தண்ணீர் போகாமல்
வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன
நாப்கின்களால் நிறையும்
கழிப்பறை பீங்கான்கள்.

o

தினம் பத்து பேர்
அந்த நேரத்துக்குப்
போக மாட்டேன்றீங்க
என்ன சொன்னாலும்
உங்க இஷ்டத்துக்குத்தான்
போவீங்க
பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது
அதிகாரத்தின் குரல்
கூச்சம் தொலைக்கலாம்
நின்று மாற்றவாவது
இடம் வேண்டுமல்லவா
கழிப்பறையில்.

o

மாசத்துக்கு
மூணு, நாலு நாள்
லீவு எடுத்தா என்ன பண்றது?
பதில் எதிர்பார்க்காமல்
ஒலிக்கும் கேள்வி
அறை முழுதும் பரவும்
வெட்கம் பூசிய சிரிப்புகளும்
நமுட்டுப் புன்னகைகளும்
வலி தோய்ந்த மௌனங்களும்
ஆங்காங்கு எழும்
கொடுக்குள்ள விலங்கொன்று
விஷம் இறக்கிய மகிழ்வில்
இடம் நகரும்.

o

அங்க நின்னு பேசின
இங்க நின்னு பேசினன்னு
பேச்சு வந்தது
படிச்சது போதும்னு
சோறாக்க வேண்டியதுதான்
அங்க பார்த்தேன்
இங்க பார்த்தேன்
இப்படித் தொட்டேன்
அப்படித் தொட்டேன்னு
யார்கிட்டயாவது சொன்ன
பள்ளிக்கூடம் வர முடியாது
காலையில சீக்கிரம் வரணும்
சாயந்திரம் என் சைக்கிள்ல வரணும்
படிக்கிறேன்னு திமிரா
உங்கம்மாகிட்ட சொன்னா
வீட்டவிட்டு வெளிய வர முடியாது
சொல்றபடி நடந்துக்க
இதெல்லாம் படிக்க வரலன்னு
யார் அழுதா
ஏறிக்கிட்டு நின்ன இடத்துல
நிக்குது பாரு
எல்லாம் ஜோடி ஜோடியா
இந்த வயசுல
தவறாமல் படித்துத்
தொலைக்க வேண்டியிருக்கிறது
மாதராய்ப் பிறந்திடவே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா.

o

எங்க காலத்துல எல்லாம்
கட்டுன ஆளத் தவிர
ஏறெடுத்துப் பார்க்க முடியுமா
அப்ப ஏது இந்த கசமுசால்லாம்
எங்க காலத்துல எல்லாம்
காலேஜ் படிக்கும்போதுதான்
கண்ணயே நிமிரவிடுவோம்
எங்க காலத்துல எல்லாம்
2 படிக்கும்போதுதான்
அதுகூட ஒண்ணு ரெண்டுதான்

இப்ப காலம் கெட்டுப்போச்சு
எட்டாவது பத்தாவது படிக்கிறதெல்லாம்
ஆளுக்கொரு ஜோடி வெச்சிருக்கு
எல்லாக் காலத்திலும்
கைதாகிக்கொண்டிருக்கிறார்கள்
ஆறு வயதுக் குழந்தை
பலாத்கார வழக்கில்.

o

முதல் ரத்தம் பார்த்துக்
கலங்கி
பாதி வகுப்பில் வெளியேறும்
பெண்
ஒரு செவிலித் தாய்க்கான
பிரியத்தை விட்டுச் செல்கிறாள்
தன் வகுப்பறையிடம்!

[22/05, 6:50 am] TNPTF MANI: இலக்கியத்துக்கு முதல் தேவையே மனிதர்களைக் கவனிக்கிறதுதான்.மிச்சமெல்லாம் தானா வரும்.
- ஜெயமோகன்

[22/05, 6:52 am] TNPTF MANI: கவிதை என்பது - கா.நா.சு.

"பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லலாம். புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்கும் பொதுவான விஷயங்கள் இவை.

வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒரு தரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி.

இரண்டாவதாக , எந்தக் காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தந்தக் காலத்து கவிதை - நல்ல கவிதை - அந்த காலத்து சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப் புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி.

இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாதது போல இருந்து, படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி.

கடைசியாகக் கேட்டுக் கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்போது, இந்தக் கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரணகாரியமே இல்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா?
எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம், ஆம், ஆம், ஆம் என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதை நல்ல கவிதை - உயர் கவியையென முடிவுகட்டிவிடலாம்

[22/05, 7:17 am] TNPTF MANI: தினம்= தமிழ்ச் சொல்லே!
-க.ர.ச

*நாளைத் தின்பதால்= தினம்
*நாளைப் பகுப்பதால்= பகல்
*நாளை யாப்பதால்= யாமம்
*நாளை வைகுவதால்= வைகறை

தமிழ்க் காரணப்பெயர்

*அர்த்த ஜாமம் என சொல்லாதீர்கள்!
யாமம் என்பதே தமிழ்!
ஜாமம்= Sanskrit திருட்டு வேலை.. வேட்டி= வேஷ்டி போல்!

யா= கருமை
நாளின் கரும்பகுதி= யாமம்!

*தினம்= Thinam எ. ஒலிக்க! Dhinam அல்ல:)

தேவாரம்= ThEvaaram; Devaram அல்ல
தெய்வம்= Theivam; Deivam அல்ல

சொல் முதல் எழுத்து த= Tha, எப்பவும்!

#"முதலெ"ழுத்து..
க= ka  kolu NOT golu
ச= cha  chol NOT sol
த= tha  theivam NOT deivam
ப= pa  pambaram NOT bambaram
[22/05, 9:50 am] TNPTF MANI: சொன்னார்கள்....

எனக்கு யாருமே இல்லை, நான் கூட.

- நகுலன்

நான் என்பது எனக்குள் இல்லை. எனக்கு வெளியே இருக்கிறது.

- ழாக் லக்கான்

நாம் எந்தச் செயல்களைச் செய்யலாம் என்று முடிவு செய்வோம். நாம் செய்யும் செயல்கள் நம்மை இத்தகையவர் என்று முடிவு செய்யும்.

- வெர்ன்ஸ்

நீங்கள் தேடுவது யாராக இருந்தாலும் அது நான் அல்ல.

- பிரெக்ட்

எனக்குத்தான் நான் என்று பேசத் தோன்றுகிறது. பிரம்மாண்டங்கள் எல்லாம் மௌனமாகவே இருக்கின்றன.
- நித்ய சைதன்யா

உன்னுடைய புகழ் பூமியில் பரவ வேண்டும் என்று நினைக்காதே. உன் புகழை அறிந்தவர்கள் எல்லாம் மடிந்து போன பிறகு, யார் அறிவார் உன் புகழை?

- மார்க்கஸ் ஆரிலியஸ்

[22/05, 3:26 pm] TNPTF MANI: அவ்வளவு பேசியிருக்க வேண்டாம் அப்போது.
இவ்வளவு மௌனமாயிருக்க வேண்டாம் இப்போது!

- நேசமிகு ராஜகுமாரன்

[22/05, 3:32 pm] TNPTF MANI: ஒரு தருணத்திற்கு தேவையான பாடலை மனம் எவ்வளவு அனிச்சையாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது
-P

[22/05, 8:20 pm] TNPTF MANI: குருதியில் நீந்தும் காலம்
.......
மனுஷ்ய புத்திரன்
......
சுடுடா சுடு
நிராயுதபாணிகளை
நெஞ்சுக்கு நேராகச் சுடு
குண்டுகள் வீணாக்காமல் சுடு
பத்துக்குண்டுகளுக்கு
பத்துப்பேர் விழவேண்டும்

முதலில் ஆகாயத்திற்கு நேரே சுடவேண்டியதில்லை
முதலில் முட்டுக்கு கீழே சுடவேண்டியதில்லை
கண்ணீர் புகைக் குண்டுகள் வேண்டியதில்லை
வீண் செலவுகளை தவிர்க்கவேண்டும்
துப்பாக்கியை நெஞ்சுக்கு நேரே உயர்த்து
நாங்கள் சாகப்பிறந்தவர்கள்
மக்கள் வாழ்வதற்காக சாகப்பிறந்தவர்கள்

சுடுடா மறுபடி சுடு
குருவிகளை சுடுவதென்றால்கூட
குறிபார்க்கவேண்டும்
மிருகங்களை சுடுவதென்றால்கூட
மறைந்து காத்திருந்து சுடவேண்டும்
மக்களைச்சுட எதுவுமே தேவை இல்லை
எதிர்த்து நிற்பவர்கள் நெஞ்சில்
ஈய ரவைகளை செலுத்து
அவர்கள் அதை புரிந்துகொள்வதற்குள்
தம் நெஞ்சில் வழியும் குருதியைக்கண்டு
அவர்கள் வியக்கும்படி
அத்தனை விரைவாய் சுடு

மக்கள் நச்சுக்காற்றை எதிர்த்துப்போராடினார்கள்
கேன்ஸரை எதிர்த்துப்போராடினார்கள்
கருவிலிருக்கும் தம் குழந்தைகள்
ஊனமடைவதை எதிர்த்துப்போராடினார்கள்
எளிய மக்கள் தாங்கள் நஞ்சாகக்கப்படுகிறோம்
என்று அறிந்த நாளில் தெருவுக்கு வந்தார்கள்
பின்னர் அவர்கள் வீடு திரும்பவே இல்லை
இப்போது துப்பாக்கிக்குண்டுகளால்
அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது

ஒரு பதினேழு வயது சிறுமி
ஒரு அறுபட்ட புறாவைபோல
ரத்த வெள்ள்த்தில் மிதந்துகொண்டிருக்கிறாள்
இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள்
எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கின்றன

திறந்த கண்களுடன்
ஒரு இளைஞன் கைகளை விரித்தபடி
வீழ்ந்துகிடக்கிறான்
அவன் மனைவி மார்பில் விழுந்து கதறுகிறாள்
அவள் நெற்றியில் துப்பாகிக் குருதி
குங்குமம் போல பரவுகிறது
இப்படித்தான் நீதி கேட்கப்படுகிறது

இந்த அந்தியின் வெளிச்சம்
குருதிவண்ணத்தில் இருக்கிறது
இந்த அந்தியின் காற்றில்
குருதியின் உப்புக் கரிக்கிறது

பத்துப்பேர் இறந்துவிட்டார்கள்
இன்றைய இலக்கு நிறைவடைந்ததா?
திரும்பிச்செல்லுங்கள்
உங்கள் முதலாளிகள்
இன்றிரவு நிம்மதியாகக் குடிப்பார்கள்
உங்களுக்கு ஆணை பிறப்பித்தவர்கள்
இன்றிரவு நிம்மதியாக புணர்வார்கள்

ஊரில் பத்துவீடுகளில்
சாவின் அதிகாரம் நிரம்பியிருக்கிறது
பத்து சவ ஊர்வலங்கள் ஒரே நேரத்தில்
கிளம்புகின்றன
மக்கள் மனம் சிதறி அழுகிறார்கள்
இயலாமையுடன் சாலைகளை மறித்து
லத்தியால் அடிவாங்கி ஓடுகிறார்கள்

மக்களை இன்னும் எப்படி அச்சுறுத்துவதெனெ
வேட்டை நாய்கள்
ரகசியமாக கூடிப்பேசுகின்றன
பத்துப்பேரை கொல்லும் அளவு
தனக்கு அதிகாரம் இருப்பதைக் கண்ட தலைவன்
அந்தரங்க கிளுகிளுப்புடன்
நீலிக்கண்ணீர் வடிக்கிறான்

நமது காலம் நெருப்பில் நீந்துகிறது
நமது காலம் கண்ணீரில் நீந்துகிறது
நமது காலம் குருதியில் நீந்துகிறது

அடுத்த வெடியோசைக்கு மக்கள் காத்திருக்கிறார்கள்
தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்

எதற்கு என்று கேட்காதீர்கள்
மக்கள் தங்களை வன்மத்துடன் ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்

22.5.2018
மாலை 6.16
மனுஷ்ய புத்திரன்

[22/05, 10:13 pm] TNPTF MANI: அ.தி.மு.க எதுவரை வாழும்?

"மக்களின் ஏமாளித்தனத்தின் எல்லை வரை"

-சோ

[22/05, 10:43 pm] TNPTF MANI: பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு ...

-அறிவுமதி

[23/05, 6:58 am] TNPTF MANI: சாகும்வரை உன் பிணத்தை நீ தான் சுமக்க வேண்டும்
#இக்பால்

No comments:

Post a Comment