Thursday, 30 August 2018

@மணி

[28/06, 6:40 am] TNPTF MANI: "புல்லின் மீது நடக்காதீர்கள்.நாலு பேருக்குத் தெரியும்படி வளர்வதற்கு நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பதை நினைத்து நடக்கவும்"!
-p

[28/06, 6:41 am] TNPTF MANI: ஊரிலிருந்து கிளம்புகையில்
அழுகை வந்தது
ஊரைப் பிரிந்த ஒருவனால்
அழ மட்டும்தான் முடிகிறது
-யுகபாரதி

[28/06, 6:42 am] TNPTF MANI: கற்பது குறித்த விளக்கம்

தெரியாத அறியாமையில் இருந்து தெரிந்த அறியாமைக்கு போவதுதான் அதன் முதல்படி.பிறகு தெரிந்த அறியாமையில் இருந்து தெரிந்த அறிதலுக்கு செல்ல வேண்டும்.

அதற்கு பின்னர்,தெரிந்த அறிதலில் இருந்து தெரியாத அறிதலுக்கு மறுபடியும் பயணிக்க வேண்டும்.

தெரிந்ததைக்கூட இயல்பாக பிரயத்தனம் இல்லாமல் செய்கிற அளவிற்கு கற்று உயரும்போது தான் கல்வி முற்றுப் பெறுகிறது.

-டெனின்

(குறிப்பு:தேடிப்பிடிச்சு,கைவலிக்க டைப் பன்னியிருக்கேன்,காப்பி பேஸ்ட் செய்யாதீங்க)

[28/06, 7:04 am] TNPTF MANI: இல்லாத மீதிச் சில்லறைக்கு
சேர்த்து வாங்கிக் கொண்டேன்
கூடுதலாய் ஒரு முழம் காதல்
-யாழிசை

[29/06, 6:58 am] TNPTF MANI: புள்ளிவிபரங்கள் வரத் தொடங்கியிருந்தன.இனி விழுக்காடுகள் பின் தொடரும். ஒருபோதும் சோதனை செய்யப்படாத வலுவை ஆசிர்வாதமாகக் கொண்டவை
-சுந்தர ராமசாமி

[29/06, 6:59 am] TNPTF MANI: பரட்டைத் தலையுடன் இலந்தை மரம்
முடி வெட்டுகின்றன
ஆடுகள்!

# பிரபலமானவர்களின் வீடு
வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள்
எதுவும் ஓடவில்லை!

# காலியான தைல புட்டி
நிரம்பியிருக்கிறது
வாசனையால்!

# காற்று பறித்து போட்டது
தரையெல்லாம் நட்சத்திரங்கள்
வேப்பம் பூக்கள்!

# யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்!

# இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன!

# பறவைகள் முகம் பார்க்க
கண்ணாடியின்று திரும்பின
வறண்டு போனது நதி!

# கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது
வாழ்க்கையை மீன்!

# குழந்தைகள் நிறைந்த வீடு
சத்தமாக ஒலியெழுப்புகிறது
ஐஸ் வண்டி!

-நா.முத்துக்குமாரின் குழந்தைகள் நிறைந்த வீடு புத்தகத்திலிருந்து..

[29/06, 7:04 am] TNPTF MANI: ஆர்டர் செய்யாமலே
விரைவாய் வந்தது
"வாழை இலை"!

-மணி

[29/06, 7:34 am] TNPTF MANI: பழைய புகைப்படங்களை பார்த்துவிட்டு
நாம் தேடுவது
நம் அறைக்கண்ணாடியைத் தான்

நேற்றுகளின் அடுக்கிலிருந்து
சுருக்கங்களற்ற
நம் முகங்களை
நம் கன்னங்களை கிள்ளும்
கைகளுடைய முகம் தான்
மயிலிறகாய் நழுவுகிறது

அதை பிடித்துவிட எத்தனிக்கும்
கைகளில்
காலம் கால் நூற்றாண்டை
திருகி வைக்கிறது

-ப்ராங்க்ளின்

[29/06, 7:40 am] TNPTF MANI: நடந்த தடங்களில்
பின்னோக்கி நடப்பதற்கும்
பாதையோரத்தை
அன்போடு பார்ப்பதற்கும்
தொடங்கிய இடத்திற்கு
நன்றி சொல்வதற்கும்
குரைக்க எழுந்த நாயை
அமர்த்துவதற்கும்
எதிர்பட்டவர்களின்
இன்முகம் காண்பதற்கும்
ஒரு காலம்
வாய்க்கும்.

அதை முதுமை
என்கிறோம்!

-மகுடேசுவரன்

[29/06, 1:01 pm] TNPTF MANI: சாலையில்
அடிபட்டு இறந்தது
"விவசாய நிலம்"!

[29/06, 8:28 pm] TNPTF MANI: காஃபி வந்த கதை

அவர்கள் சரியாய் மதியம் மூன்று மணிக்கு வந்தார்களாம். அரை ட்ரவுசர், புஷ் கோட், சானிட்டரி இன்ஸ்பெக்டர் தொப்பி,அழகான வெள்ளைக் கப்புகளை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம்,”நாங்க, காஃபி என்று ஒரு பானம் கொண்டுவந்திருக்கோம். இது இலவசம் நீங்க சாப்பிட்டுப் பாருங்க.” என்று தந்தார்களாம். மறு நாள் அதே மூன்று மணி.”இன்று உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள், யாராவது விருந்தினர் வந்திருக்கிறார்களா அவர்களையும் சேர்த்து எட்டுப்பேரா,அப்படியானால் எட்டுக் கப்  காஃபி கொண்டு வருகிறோம். எட்டுக் கப் இலவச காஃபி வருகிறது.
மறுநாள், ’ இன்னக்கி கூடரெண்டு விருந்தாள் வந்திருக்காங்க’ -இது நம்ம ஆளுங்க பொய்யி. ’அப்படியாஅப்போ பத்து கப் கொண்டு வருகிறோம்’. 
பத்து நாள் போனது. ’காஃபி என்னும் பானம் பிடித்திருக்கிறதா...அதை எப்படித் தயாரிப்பது என்று சொல்லுகிறோம். வீட்டில்பால் இருந்தால் கொடுங்கள்,இல்லையா பரவாயில்லை,நாங்களே தருகிறோம்’. செயல்முறை விளக்கம். இந்தாருங்கள் இந்தப் பொடியை கண்ணாடி பாட்டிலில் கொட்டி இறுக மூடி வையுங்கள்.வேண்டுகிற போது தயாரித்துச் சாப்பிடுங்கள். இரண்டு மூன்று நாட்கள் யாரும் வரவில்லை.காஃபிப் பொடி காலி.மூன்று மணிக்கு நாக்கு பரபரக்கிறது. அவர்கள் வருகிறார்கள். இந்தப் பாட்டில் காஃபிப் பொடி விலை நாலணா... உங்களுக்குக் கட்டுப்படியாகும் விலைதான்.வாங்கிக் கொள்கிறீர்களா.’இந்த எழவுக்கு சில்லரை வேறியா.. எங்களுக்கு வேணாம்’. பரவாயில்லை நாங்கள் இரண்டு நாள்கழித்து வருகிறோம்.

இரண்டு கழித்து முற்றத்து அரட்டை நாக்குகள், “வாருவானுவளா வே..” தேடுகிறது. அவர்கள் வருகிறார்கள் அதே மூணுமணிக்கு. இவர்கள் வாங்குகிறார்கள்.அருந்துகிறார்கள் அதே மூணு மணிக்கு.

அருந்திக் கொண்டே இருக்கிறோம் நேரம்காலமில்லாமல்

’காஃபி வந்த கதை’,அப்பா சொன்னது.கி.ராவும் இதேபோல் சொல்லி இருக்கிறார்

-கலாப்ரியா

[29/06, 8:40 pm] TNPTF MANI: அவளுக்கு வெடித்து அழுகை வந்தது. கார் கண்ணாடித் துடைப்பான்போல இரண்டு கைகளாலும் மாறி மாறி கன்னத்தை துடைத்தாள். அப்படியும் நிற்காமல் கண்ணீர் பெருகி வழிந்து கன்னத்தை நனைத்தது..

-அ.முத்துலிங்கம்

[29/06, 9:05 pm] TNPTF MANI: நாள்கள், நாட்கள் - எது சரி ?
**
இந்த ஐயம் எல்லாரையும் பாடாய்ப் படுத்துகிறது. இதுவரை நாட்கள், ஆட்கள் என்று எழுதியபோது நமக்கு எந்த ஐயமும் ஏற்படவில்லை. ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள்’ என்பது புகழ்பெற்ற அறிவுப்புப் பலகை. ‘அந்த 7 நாட்கள்’ என்பது திரைப்படத் தலைப்பு. இப்போது நாட்கள் என்பது சரியா, நாள்கள் என்பது சரியா என்னும் பலத்த ஐயம் தோன்றிவிட்டது. நான் நாள்கள் என்றுதான் எழுதுகிறேன். ஆனந்த விகடன் ஆசிரியர் குழாத்தோடு பேசியபோது அவர்களும் நாள்கள் என்றே பயன்படுத்துவதாகச் சொன்னார்கள். ஆக, இப்போது நாள்கள் என்ற பயன்பாடு மிகுந்துவிட்டமையால் இந்த ஐயமும் பரவலாகிவிட்டது.

முதலில் இந்த வழக்கை முழுமையாக விளங்கிக்கொள்வோம்.

கள் விகுதி என்பது தனிச்சொல் இல்லை. கிறு கின்று போல, அன் அள் அர் போல, அத்து அற்று போல, ஐ ஆல் கு போல - கள் என்னும் விகுதியும் சொல்லுக்குள் ஓர் உறுப்பாகப் பயில்வது. சொல்லுருபு. பன்மையை உணர்த்தத் தோன்றும் விகுதி.  அதனால் இது சொல்லுக்குள் முன்மொழிக்கேற்ப புணர்ந்து நிற்குமா, இயல்பாய் நிற்குமா என்பது முதற்கண் விளங்கிக்கொள்ளப்படவேண்டியது.

ல் என்ற மெய்யில் முடியும் சொற்கள், ள் என்ற மெய்யில் முடியும் சொற்கள் - என இரண்டு வகைமைகளை எடுத்துக்கொள்வோம். இவை இரண்டுக்கும் ஏறத்தாழ ஒரே வகையான புணர்ச்சித் தன்மைகள் அமையும். 
--------

நம் எளிமைக்காக இங்கே பெயர்ச்சொற்களை எடுத்துக்கொள்வோம்.

ல் என்ற மெய்யில் முடியும் சொற்கள் என்னென்ன ?
பல், சொல், கால், வால், விரல், குழல், பகல், நிழல், காதல், பாடல். 

ள் என்ற மெய்யில் முடியும் சொற்கள் என்னென்ன ?
முள், புள், திரள், குறள், பொருள், மருள், கோள், தேள், நாள், ஆள்.
--------

ல் மெய்யில் முடியும் சொற்களும் கள் விகுதியும்
*************

ல் என்ற மெய்யில் முடியும் பெயர்ச்சொல்லின் பன்மையை உணர்த்த கள் விகுதி சேர்கிறது எனக்கொள்வோம். என்னாகிறது ?

பல் = பற்கள். 
சொல் = சொற்கள். 

தனிக்குறிலை அடுத்து ல் தோன்றும் சொற்களில் கள் விகுதிக்குப் புணர்ச்சி நேர்கிறது. அங்கே ல், ற் ஆகி விடுகிறது.

எடுத்துக்காட்டுகளில் அடுத்தே உள்ள சொற்களை எவ்வாறு எழுதுகிறோம் ? புணர்த்தி எழுதுகிறோமா ? 

கால் = கால்கள் (காற்கள் என்று எழுதுவதில்லை)
வால் = வால்கள் (வாற்கள் என்று எழுதுவதில்லை)

ஆக, தனி நெடிலை அடுத்து ல் தோன்றும் சொற்களில் ‘கள்’ விகுதியைப் புணர்த்தி எழுதுவதில்லை.

குறிலிணை எழுத்துகளை அடுத்து ல் மெய் தோன்றும்போதும், பிறவகைக் கலப்பு எழுத்தமைவை அடுத்து ல் மெய் தோன்றும்போதும் கள் விகுதிக்குப் புணர்த்தாமல்தான் எழுதுகிறோம்.

விரல்கள் = விரல்கள்(விரற்கள் என்று எழுதுவதில்லை)
குழல் = குழல்கள் (குழற்கள் என்று எழுதுவதில்லை)
பகல் = பகல்கள் (பகற்கள் என்று எழுதுவதில்லை)
நிழல்கள் = (நிழற்கள் என்று எழுதுவதில்லை)
காதல் = காதல்கள் (காதற்கள் என்று எழுதுவதில்லை)
பாடல் = பாடல்கள் (பாடற்கள் என்று எழுதுவதில்லை )

***
ள் மெய்யில் முடியும் சொற்களும் கள் விகுதியும்
*************

ள் என்ற மெய்யில் முடியும் பெயர்ச்சொல்லின் பன்மையை உணர்த்த கள் விகுதி சேர்கிறது எனக்கொள்வோம். என்னாகிறது ?

முள் = முட்கள்
புள் = புட்கள்

தனிக்குறிலை அடுத்து ள் தோன்றும் சொற்களில் கள் விகுதிக்குப் புணர்ச்சி நேர்கிறது. அங்கே ள், ட் ஆகி விடுகிறது.

குறிலிணை எழுத்துகளை அடுத்து ள் வந்தாலோ கள் விகுதிக்குப் பெரும்பாலும் புணர்த்துவதில்லை.

திரள் = திரள்கள் (திரட்கள் என்று எழுதுவதில்லை)
குறள் = குறள்கள் (குறட்கள் என்று எழுதுவதில்லை )

தனி நெடிலை அடுத்து ள் தோன்றும் இரண்டெழுத்துச் சொற்களில் கள் விகுதிப் புணர்ச்சி நேருமா ? கோள், தேள், தோள், நாள், ஆள்.

கோள் = கோள்கள் (கோட்கள் என்று எழுதுவதில்லை)
தேள் = தேள்கள் (தேட்கள் என்று எழுதுவதில்லை)
தோள் = தோள்கள் (தோட்கள் என்று எழுதுவதில்லை)
நாள் = நாள்கள் (நாட்கள் என்று எழுதுவது எப்படி ?) :)
ஆள் = ஆள்கள் (ஆட்கள் என்று எழுதுவது எப்படி ?) :)

நாட்கள், ஆட்கள், பொருட்கள் என்னும் சில நிலைமைகளில் மட்டும் புணர்த்தியும் கோள்கள், தேள்கள், தோள்கள், குறள்கள் என்று அதே விதியுடைய இன்னோரிடத்தில் புணர்த்தாமலும் எழுதுகிறோம்.

கால்கள், வால்கள், கோல்கள், பகல்கள், நிழல்கள் என்று அங்கேயும் இயல்பாக எழுதுகிறோம்.

ஆக நம்மிடம்தான் ஏதோ தவறிருக்கிறது. 

நாட்கள் ஆட்கள் என்று எழுதினால் “மழை பெய்ததும் தேட்கள் வந்தன” என்று எழுதவேண்டும். “ஒன்பது கோட்களும் உச்சம் பெற்ற ஒருவன்” என்று எழுதவேண்டும். “அவளுக்கு மூங்கில்போன்ற தோட்கள்” என்று எழுதவேண்டும். “இரண்டு காற்களும் நன்றாக இருந்தால்தான் ஓடமுடியும்” என்று எழுதவேண்டும். “குதிரைகளுக்கு அழகிய வாற்கள்” என்று எழுத வேண்டும்.

பொருட்கள் என்று எழுதினால் இருட்கள் என்று எழுதவேண்டும். ”திருக்குறட்களை நன்கு பயில வேண்டும்” என்று எழுத வேண்டும்.   

இப்போது நமக்கு என்ன விளங்குகிறது ? ஓரிடத்தில் கள் விகுதிக்குப் புணர்த்தியும் (ஆட்கள், நாட்கள், பொருட்கள்) அதே நிலைமையுடைய பிறவிடங்களில் கள் விகுதிக்குப் புணர்த்தாமலும் எழுதுகிறோம். (கால்கள், வால்கள், விரல்கள், குறள்கள்).

நம்மிடம்தான் இடத்திற்கேற்ப ஒரு நிலைப்பாடு இருக்கிறது. புணர்ச்சி குறித்து நாம் ஒரு கொள்கைக்குள் நிற்கவில்லை. இங்கேதான் நாம் ஒரு முடிவெடுக்க வேண்டும். அதில் நிற்க வேண்டும். 

*****

நாம் என்ன செய்ய வேண்டும் ? இந்த வழக்குக்குத் தீர்ப்பு என்ன ? இதுதான் :)

1). தனிக்குறிலை அடுத்து ல்/ள் வந்தால் கள் விகுதிக்கு ற்/ட் என்ற புணர்ச்சி நேரும் (பற்கள், சொற்கள், முட்கள், புட்கள்)

2). குறிலிணையை அடுத்து ல்/ள் வந்தால் கள் விகுதிக்குப் புணர்த்தல் தேவையில்லை. (விரல்கள், நிழல்கள், குறள்கள், பொருள்கள்).

பொருட்கள் என்று புணர்த்தினால் எல்லாச் சொற்களுக்கும் அவ்வாறே புணர்த்தி எழுத வேண்டும். அது இயல்பாய் இல்லை. எனவே அதைக் கைவிடுக. 

3). தனி நெடிலை அடுத்து ல்/ள் வந்தால் கள் விகுதிக்குப் புணர்த்தல் தேவையில்லை (கால்கள், வால்கள், கோள்கள், நாள்கள், ஆள்கள்).

4). நாட்கள், ஆட்கள் என்று புணர்த்தி எழுதினால் எல்லாச் சொற்களுக்கும் அவ்வாறே புணர்த்தி எழுத வேண்டும். அது இயல்பாய் இல்லை.

5). நாள்கள், ஆள்கள், பொருள்கள் என்பது ஒரு சொல்லைப் புணர்ச்சியிலிருந்து பிரித்து எழுதுவதாகத்தான் கருதப்பட வேண்டும். மருணீக்கியார் என்பதைப் பிரித்து எழுதுகையில் மருள் நீக்கியார் என்று எழுதுகிறோம். இது குற்றமில்லையே. ‘கடவுட்டன்மை’ என்றெல்லாம் புணர்த்தி எழுதாமல் ‘கடவுள் தன்மை’ என்றே எழுதுகிறோம். ஆக, ஒன்றைப் புணர்த்தாமல் எழுதினால், எளிமை கருதி அதைப் பிரித்து எழுதியதாகவே எடுத்துக்கொள்ளலாம். அதனால், நாள்கள் ஆள்கள் பொருள்கள் என்றெழுதுவது அதைப்போல் பிரித்தெழுதிய நிலைமையே. ஒருபோதும் குற்றமாகாது.

ஆக, நாட்கள் ஆட்கள் பொருட்கள் என்றெழுதுவதைவிட எல்லா நிலைமைகளோடும் ஒரே கொள்கையுடையவராய் நாள்கள், ஆள்கள், பொருள்கள் என்றே எழுதுக !

- கவிஞர் மகுடேசுவரன்   

பின்குறிப்பு :

கள் விகுதிக்கு மட்டும்தான் இது பொருந்தும். இரண்டாவதாய் வருவது தனிச்சொல்லாக இருப்பின் அது ற்/ட் என்று தவறாமல் புணரும். சொற்சுவை, பாற்கடல், பாடற்பொருள், காதற்கிளியே.
நாட்குறிப்பு, காலாட்படை, பொருட்குற்றம், குறட்பா.

[29/06, 9:15 pm] TNPTF MANI: யாகாவாராயினும் யோகா செய்க,
செய்யாகால் பேஜாராயிடும் ஹெல்த்து!

-ரா.பார்த்திபன்

[29/06, 10:17 pm] TNPTF MANI: கலைஞரின் நகைச்சுவை பதில்கள் ..

*கேள்வி :* _அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துக் கொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களை திறந்து வைக்கிறாரே?

*கலைஞர் :* _ஸ்ரீரங்கத்தில் இருந்துக் கொண்டு சொர்க்கவாசலை திறந்துவிட்டோம் என்கிறார்களே.. அதுபோல நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்!

*கேள்வி :* _செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே?

*கலைஞர் :* _செவ்வாயில் இருந்தால் அது உமிழ்நீர். தண்ணீர் அல்ல.

*கேள்வி :* _கோழி முதலா, முட்டை முதலா?

*கலைஞர் :* _முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும், கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல் (capital)

*கேள்வி :* _மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

*கலைஞர் :* _இந்த வயதில் அரசியல் என்பது அத்தைப்பெண் போல. பேசலாம். பழகலாம். சுற்றி சுற்றி வரலாம். ஆனால்- தொட்டு மட்டும் விடக்கூடாது

*கேள்வி :* _தலையில் முடி கொட்டியதை குறித்து எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா?_

*கலைஞர் :* _இல்லை. அடிக்கடி முடிவெட்டிக் கொள்ளுவதற்கு ஆகும் செலவு மிச்சமென்று மகிழ்ந்துதான் இருக்கிறேன்.

[30/06, 6:44 am] TNPTF MANI: பறவை மண்ணில் பலவீனமானது

-சலீம் அலி

[30/06, 6:51 am] TNPTF MANI: தெரிந்து கொள்ளும் விஷயங்களில் நமக்குப் பயனற்றவை உள்ளன.ஆனால் அறிந்துகொள்ளும் விஷயங்களில் பயனற்றவையே இல்லை
-ஜெயமோகன்

[30/06, 11:28 am] TNPTF MANI: புத்தகம் கைக்கு கிடைக்கும் தருணம் எளிதான ஒன்றாக இருந்துவிடும் போது தோன்றும் வழக்கமான அசிரத்தை உணர்வு புத்தகத்தின் மௌனமான இருப்பை பெரிதாக லட்சியம் செய்யாதபடி வாசிக்கப்படாத புத்தகங்களின் பட்டியலில் காலவரையின்றி தக்க வைக்கிறது. வாசிக்க இருக்கும் புத்தகங்களாக பெரும்பாலும் சிரத்தை எடுத்து அகப்படுத்திக் கொண்ட ஒன்றாகவோ அல்லது இன்னும் வாங்கப்படாமல் அது பற்றிய தேடலின் கருத்துக்களால் உருவான ஆர்வத்தை எப்போதும் புதிதாக நிறைத்து வைத்திருக்கும் தொலைதூரத்து புத்தகங்களாகவோ மட்டுமே இருக்கின்றன.

ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதே அசிரத்தை உணர்வோடு வாங்கப்பட்ட ஒன்றாக இருக்க நோபல் பரிசு பெற்ற மகத்தான படைப்பு என்று தெரிந்திருந்தும் ஏதோ விளங்காத காரணத்தால் இன்று வரை மனம் அதில் லயப்படாமலே இருந்தது.

ஏற்கனவே இரண்டு முறை பார்த்திருந்த Robert Zemickies ன் இயக்கத்தில் Tom hanks நடிப்பில் வெளியான Cast away மூன்றாம் முறையாக ஆங்கில டிவி சேனலில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. படத்தின் இறுதி வரை படம் தவிர்த்த புற எண்ணங்கள் எதுவும் குறுக்கிடவே இல்லை. படத்தின் இறுதியில் Tom hanks 4 வருட தீவில் தனியாக அகப்பட்டுக்கொண்டுவிட்ட விதியால் தோய்ந்து போய் உயிர் மட்டுமே மிஞ்சிய உடலோடு இறுதி முயற்சியாக தீவை விட்டு வெளியேற ஒரு படகை உருவாக்கி துணிந்து கடலின் சீற்றங்களை எதிர்த்து போராடிச் செல்லும் காட்சியில் அது வரை இரண்டு வருடங்களாக எந்த இடையூறையும் ஏற்படுத்தாத ஒரு மின்னல் வெட்டு மூளையில் தோன்றி மறைந்தது. படம் முடிந்தது. 'கிழவனும் கடலும்' எடுத்தேன். ஒன்றரை மணிநேரத்தில் வாசித்து முடித்தேன். வெளிப்படையாக Cast Away திரைப்படத்திற்கும் Hemingway நாவலுக்கும் கடலில் தனித்து போராடும் அந்த ஒற்றை நிகழ்வைத் தவிர பெரிதாக எந்த ஒற்றுமையும் கிடையாதெனினும், எப்படி ஒரு படைப்பு ஒரு நிச்சயமற்ற நிகழ்வின் சாரத்திலுருந்து உருவாகும் அகத்தூண்டல் மூலம் தன்னை உயிர்ப்பிக்க முடியுமோ, அதைப்போல அதே படைப்பை கிரகித்துக் கொள்ள இருக்கும் அந்நியனுக்கும் ஒரு நிச்சயமற்ற நிகழ்வின் மூலம் பிறக்கும் அகத்தூண்டல் அவசியமாகிறது.

கிழவனும் கடலும் கதை ஒரு வரியில் அடங்கிவிடக்கூடியதென்பதால் கதையை வைத்து தேர்வு செய்ய வேண்டிய புத்தகம் அல்ல இது. ஆனால் விதியினால் இயற்கையின் முன்பாக தனித்து விடப்படும் நிலையில் அதை எதிர்கொள்வதின் தொடர் தோல்விகளால் மனபலம் குன்றிப்போக வைக்கும் எப்பேர்ப்பட்ட துரதிர்ஷ்ட நிலையிலும் சாவினால் வீழ்த்தப்படும் வரை விட்டுக்கொடுக்க முனையாத ஒரு போராட்டம் கதையின் ஒவ்வொரு வரியிலேயும் உயிர்ப்புடன் நகர்த்திக் கொண்டு செல்லுதலே இலக்கியம் நிகழ்த்தியிருக்கும் செறிவான பணி. புத்தகத்தில் வெகுவாக என்னைக் கவர்ந்த ஒரு அம்சம் The old man and the sea ஆங்கிலப் பதிப்பு வெளியாகும் முன்பு அதை வெளியிடும் பதிப்பகம் இரண்டு பிரபலமான ஓவியர்களிடம் கதையை வாசிக்க கொடுத்து கதைக்கு தகுந்த கோட்டோவியங்களை வரையக் கேட்டு அவற்றையும் கதையின் இடையூடாக சேர்த்து பதிப்பித்திருக்கிறார்கள். அதில் பயன்படுத்தப்பட்ட அதே கோட்டோவியங்களை காலச்சுவடு பதிப்பகம் நேர்த்தியான பதிப்பில் சேர்த்து பதிப்பித்திருக்கிறது.

-ரஞ்சித்குமார்

No comments:

Post a Comment