Monday, 29 May 2017

மேத்தா

*மு.மேத்தா*

*சிறப்புப் பதிவு*

*இந்தியா என் காதலி*

உண்மையை நான்
ஒப்புக் கொள்கிறேன்...
காதலித்து உன்னைக்
கட்டிக்
கொள்ளவில்லை...
கட்டிக்
கொண்டதால்தான்
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!


உன்
தர்பார் மண்டபங்களில்
நியாயங்கள்
தற்கொலை
செய்துகொள்ளும்
முன்பே
கொலை
செய்யப்படுகின்றன.

சட்டங்கள் விசிலடிக்க
ஜனநாயகம்
கை தட்டுகிறது!

உன் மைய மண்டபத்தில்
குயில்களின் குரலை
அவைக் குறிப்பிலிருந்து
நீக்க வேண்டுமென்று
காக்கைகள்
கலகம் செய்கின்றன.

மக்கள் தொகையில்
நூறு கோடியைத்
தாண்டிவிட்டாய்
ஒரே ஒரு
வறுமைக் கோட்டைத்
தாண்ட முடியாமல்
வழுக்கி விழுகிறாய்...

இராம ஓவியம்
தீட்டுவதற்கு
இரத்தம் போதவில்லை
என்று
சத்தம் போடுகின்றன
தூரிகைகள்...

நீயோ
'தூரிகை வாழ்க' என்று
பேரிகை கொட்டுகிறாய்!

மதங்களுக்கும்
சாதிகளுக்கும்
மகுடம் சூட்டிவிட்டு
மனிதர்கள் கிடக்கிறார்கள்
மருத்துவ மனைகளின்
சவக் கிடங்குகளில்!

எந்த நேரத்தில்
இடிப்பார்களோ
எந்த நேரத்தில்
வெடிப்பார்களோ
என்று
ஊர் ஊராகக்
கடவுள்
ஔிந்து வாழ்கிறான்...

அன்னிய முதலாளிகளின்
கோப்பைகளை எமது
குருதியால் நிரப்பிவிட்டு
அவர்களது
குளிர்பானங்களால்
எம்மைக்
குளிரவைக்கப் பார்க்கிறாய்...

ராமராஜ்யக்
கனவுகள்
மெல்ல மெல்ல
ரோம ராஜ்யக்
கனவுகளாய்
மாறிவருகின்றன...

வாழ்க்கையை
முதுமக்கள் தாழிக்குள்
மூடி வைத்துவிட்டு
வடிவங்களைப் பற்றி
மோதிக்
கொள்கிறார்கள்
நவீன
இலக்கியவாதிகள்...

கவிஞர்களோ வெறும்
கட்டியங்காரர்களாய்...
சுட்டெரிக்க
வேண்டிய
அவர்களின் சொற்கள்
சுருட்டுப்
பற்ற
வைத்துக்கொண்டு...

உண்மையை நான்
ஒப்புக் கொள்கிறேன்...
காதலித்து உன்னைக்
கட்டிக்
கொள்ளவில்லை...

கட்டிக்
கொண்டதால்தான்
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!

No comments:

Post a Comment