Monday, 29 May 2017

வாசிப்பனுவம்

நன்றி-சதீஷ்

வாசிப்பனுபவம் - மீள்

நான் தீவிர இலக்கியவாதி எல்லாம் அல்ல. நான் படித்த மிகச்சில நாவல்களுள் மிகச்சிறந்த நாவல் "புயலிலே ஒரு தோணி" ...

தமிழின் முதல் புலம்பெயர் இலக்கியமான இந்த நாவல் முதலில் கண்டுகொள்ளப்படாமலே  போனதாம்..ப.சிங்காரம் ஒன்பது ஆண்டுகள் இதை பதிப்பிக்க அலைந்தாராம்.இவர் மொத்தமே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியுள்ளார்.இவரைப்பற்றி மேலதிக தகவல்களுக்கு...சாருவின் பழுப்பு நிற பக்கங்களை படிக்கவும்.

முதலில் புயலிலே ஒரு தோணி

தென்கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின் மைடான் நகருக்கு ஜப்பானிய படைகள் வருவதாய் தொடங்கும் நாவல் , இரண்டாம் உலகப்போர், ஜப்பானியர்களின் எழுச்சி-வீழ்ச்சி, போரினால் நிலைகுழையும் வாணிப பொருளாதாரம்,இந்திய-மலேய-பர்மா-சீன நாடுகளுடனான இந்தோனேஷியாவின் கடல் வாணிபம், வியாபாரம் நலிவடைதல்-பினாங்-பேங்காக்-மீண்டும் சுமத்ரா தீவுகள்-இந்திய தேசிய ராணுவம்-கொரில்லா படைகள்-டச்சு படைகளோடு மோதல்-யுத்தம் என்ற ரீதியில் பயணிக்கிறது.இடை இடையே மதுரை, சின்னமங்கலம் என்று கதையின் நாயகனான பாண்டியன் நினைவின் ஊடாக அன்றைய தமிழ்நாட்டின் காலகட்டமும் சுவாரஸ்யமாக சொல்லப்படுகிறது. போர் , போர் நடந்த காலகட்டம், போரினால் ஏற்படும் இழப்புகள், சூதாட்டம்,விபச்சாரம்,திரைப்படம்,மதுபான விடுதிகள், ஹோட்டல்கள் என பலதரப்பட்ட நாடுகளின் கேளிக்கைகள்,பலதரப்பட்ட வாழ்க்கை முறைகள், பொருளாதார நலிவுகள், பிரிட்டிஷ் வருகையால் ஏற்படும் வியாபார  மறுமலர்ச்சி, இந்திய தேசிய ராணுவம், கொரில்லா படைகளின் எழுச்சி, அவர்களின் பயிற்சிமுறைகள், யுத்த யுக்திகள்,டச்சு ராணுவத்தின் எழுச்சி என நாவல் முழுக்க விவரணைகள் கொட்டிக்கிடக்கின்றன.

குறிப்பாக கடற்கூத்து (எ) புயல் பற்றிய வர்ணனையும், யுத்தகாலத்தின் போது நடக்கும் சண்டைகளை பற்றிய வர்ணனையின் பிரமாண்டமும் எந்த வார்த்தைகளாலும் சொல்லி தீராது.நாவலுக்காக ப.சிங்காரத்தின் உழைப்பு அளப்பரியது,சொல்லில் அடக்க முடியாதது...நூற்றுக்கும் அதிகமான மலாய் மற்றும் மற்றைய நாட்டு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.அவரின் எழுத்து நடை,இலக்கிய நயம், சொல்லப்படாத களம் இந்நாவலை உலகத்தரத்திற்கு எடுத்துச்செல்கிறது.சந்தேகமே இல்லை இது தமிழின் மிகச்சிறந்த நாவல்.

நாவலை விட அதில் சொல்லப்பட்டுள்ள ideology psychoanalysis அதிகமாக ஈர்க்கிறது.கதையின் நாயகனான பாண்டியன் ஒரு progressive thinker.நாவலின் முன்பாதியில் பாண்டியன் நம் புனிதம் ,வீரம், போலி இனப்பெருமை, நிரூபிக்கப்படாத வரலாறு ,சங்க இலக்கியங்கள்,ஆதர்சங்கள் ஆகிய அனைத்தையுமே அவன் பகடி செய்கிறான் ,அவற்றை குறித்த நம் பிம்பங்களை உடைக்கிறான்.நீங்கள் பெருமையாக, பாரம்பரியமாக நினைத்தவை ஒன்றுமே இல்லை என தக்க ஆதாரங்களுடன் தர்க்கம் புரிகிறான். இரண்டாம் பகுதியிலோ "பகுத்தறிவு" என்ற பெயரில் நாம் அறிவியல் ,விஞ்ஞானம் , சிந்தாந்தம் என ஏற்றுக் கொண்டதன் மூலம் உண்மையிலேயே தன்னிறைவு அடைந்துவிட்டோமா...கடவுள்அமைப்புகள் போல அறிவியலும் கற்பனைகளை முன்வைத்து செயல்படுவது தானே என உளவியல் ரீதியான கேள்விகளை முன்வைக்கிறான். "கிரியான்" கப்பல் பயணத்தின் போதும், முத்தையா உடனான உரையாடலின் போதும் பாண்டியனின் சிந்தனைகள் முழுமையானதாக,எல்லையற்றதாக எல்லாவற்றிற்கும் விடையளிக்கும் வகையில் உள்ளது.எனக்கு ஏற்படுவதை போலவே பாண்டியனுக்கும் வாழ்க்கையில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது.

"மனதில் சலிப்புத் தோன்றியிருக்கிறது.கொஞ்ச காலத்திற்காவது இடம் பொருள் ஏவல் மாறினால் தான் மனதில் அமைதி பிறக்கும்" என எண்ணும் வேளையில், அவன் குறிப்பிட்ட கொஞ்ச காலத்திற்கு பின்,

"எனக்கு காட்டுமிராண்டி வாழ்க்கை ஒத்துவராது.நான் ஊர்ப்பிராணி.பிரிந்து பிணங்கி வாழ்வது பிழை.இணைந்து இணைய வாழ்வதே முறை" என்பதை உணர்கிறான். ஆசிரியரே பல கேள்விகளை எழுப்பி அதற்கு அவரே விடையும் அளிக்கிறார். "தமிழ்பேரவை" எனும் அத்தியாயத்தில் இன்று நாம் பேசும் சாதிஒழிப்பு , மதம், தமிழரின் மேம்பாடு , கிணற்றுதவளை மனப்பான்மை, புலம்பெயர் தமிழர்கள் நிலை குறித்து அட்டகாசமான விவாதப்பகுதி ஒன்று உள்ளது.

நாவலின் எந்த பகுதியிலும் வலிந்து திணிக்கப்பட்ட நம்பகத்தன்மை இல்லாத சம்பவங்களோ, சுவாரஸ்யத்திற்காக சேர்க்கப்பட்ட பகுதிகளோ இல்லை.இது ஒரு அசல் வாழ்க்கை.பல எழுத்தாளர்கள்  சொன்னது போல இது போன்ற ஒரு நாவல் இதுவரை வந்ததில்லை,இனி வருவதற்குமில்லை.அதற்காகவேனும் இந்த நாவலை ஒருமுறை வாசித்துவிடுங்கள். இந்த நாவல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களை வார்த்தைகளில் வெளிப்படுத்த தெரியவில்லை. புயலிலே ஒரு தோணி ஒரு வாழ்க்கை அதை வாழ்ந்துபார்க்க வேண்டும் ஒவ்வொருவனும்.

-பிரபு

No comments:

Post a Comment