ஷெல்லி சொல்லுவான் ''பாதையில் நடந்து போகிறபோது எனது பாதச் சுவடுகளெல்லாம் கவிதைகளாக 'பிரிண்ட்' ஆகவேண்டும்'' என்று.
ஆனால் என் கவிதைகளெல்லாம் நீங்கள் நடந்து போகிற பாதைகளாக வேண்டும் என்று சொன்னவர் நா.காமராசன்.
இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில்... கிளிமூக்கு தீ நாக்குக் கவிதைகளால் கிளர்ச்சிகளை வளர்த்தவர்...
''நாங்கள் சேற்றில் கை வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது'' என்று விவசாயிகளின் வியர்வையை துடைத்தவர்...
''நாங்கள் நிர்வாணத்தை விற்கிறோம் ஆடைகள் வாங்குவதற்காக''
என்று பாலியல் தொழிலாளிகளின் துயரத்தை வடித்தவர்...
''சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள்'' என்று திருநங்கைகளின்
கண்ணீரை உணர்த்தியவர்...
கடைநிலை மனிதர்களுக்காகக் கவிதைக்குடை விரித்தவர்...
முதிர்கன்னி, ஊமைச்சதங்கை, ராஜ திரவம் இப்படிப் புதிய சொற்பூச்செண்டுகளைத் தமிழுக்கு அளித்தவர்...
கவிதையிலிருந்து விடுபட்ட ஒரு வார்தையைப் போல நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார்...கவிஞர்களின் கதாநாயகன் நா.காமராசன்.
ஆழ்ந்த அஞ்சலி... - பழநி பாரதி
No comments:
Post a Comment