தன் மகளின் கழற்றப்பட்ட
உள்ளாடையை கையில் வைத்துக்கொண்டு
தேர்வு மைய வாசலில் அமர்ந்திருந்தார்கள்
பொறுப்பு மிக்க தந்தையர்கள்
தேர்வு முடிந்தது வெளியே வந்த மகள்கள்
மறுபடி உள்ளாடைகளை
அணிந்துகொண்டதும்
ஒளிமயமான எதிர்காலம் நோக்கி
வீடு திரும்பினார்கள்
ஜல்லிக்கட்டு மாடுகளை
அவிழ்த்துவிடும்படி
முஷ்டிகளை உயர்திக்காட்டிய இளைஞர்கள்
தங்கள் சட்டையின் கைகள் கத்தரிக்கப்படுவதை
சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார்கள்
விமான நிலையங்களில்
கறுப்பு இந்தியர்களின் ஆடைகளுக்குள்
வெள்ளை அமெரிக்கர்கள்
கைவிட்டு சோதனை நடத்தியபோது
பொங்கி எழுந்த தேசபக்தர்கள்
மாணவர்களின் அந்தரங்க இடங்களைத்தொட்டு
தகுதியும் திறமையும் ஒளிரும்
புதிய இந்தியாவை தேடினார்கள்
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக
தொலைக்காட்சி காமிரா முன்
உரத்து முழங்கிய மாணவி ஒருத்தி
எந்த முணுமுணுப்பும் இல்லாமல்
தன் காதணிகளை கழற்றிக்கொடுக்கும் காட்சியை
அதே தொலைகாட்சியில் கண்டேன்
தங்கங்கக் காசுகளையும்
போதை மருந்துகளையும்
கடத்தி வருபவர்கள்
அவற்றை ஆசன வாயில்களில்
அடைத்துவைப்பதுண்டு
மாணவர்கள்
தேர்வுக்கான ரகசியக் குறிப்புகளை
அங்கே வைக்க மாட்டார்கள் என்பது
என்ன நிச்சயம்?
அடுத்த முறை
மாணவர்களை மாணவிகளை
குப்புறப்படுக்க வைத்து
அவர்கள் ஆசன வாயில்களில்
விரல்களை செலுத்தித் தேடுங்கள்
உங்களுக்கு
எந்த எதிர்ப்பும் இருக்காது
எல்லோருக்கும் Career முக்கியம்
மேலும்
திறமை வாய்ந்தவர்களின் இந்தியாவை
அந்த ஆசனவாய் தேடலில்
கண்டிப்பாக கண்டடைந்துவிடுவீர்கள்.
#மனுஷ்யபுத்திரன்
No comments:
Post a Comment