Thursday, 1 April 2021

கற்பதுவே.. பகிர்வதுவே-20*மணி




நாள்:8
புத்தகம் 10

#மாயவலை
-அ.முத்துகிருஷ்ணன்

அரவணைக்கப் பட்டவர்களை
காட்டிலும் 
பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது
கைவிடப்பட்டவர்களின் சமூகம்
-மனுஷ்யபுத்திரன்

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகம்.
மாட்டிக்கொள்ளும் போதுதான் நாம் செய்த தவறுகள் அனைத்தும் நினைவுக்கு வருவது போல.. ஒரு பிரச்சனை வளர்ந்த போது தான்.. அடிப்படை தவறுகள் குறித்து மனித மனம் ஆராயும்.இப்புத்தகமும் அப்படிப்பட்ட மனித தவறுகளை தோலுரித்துக் காட்டுவது மற்றும் மறந்துபோன சம்பவங்களை நினைவு கூர்ந்து புத்திக்கு உரைப்பதும்தான்.

அணு உலைகள் தேவையா எனும் கட்டுரையில் 1998-99ல் மொத்த மின் உற்பத்தி 90ஆயிரம் மெகாவாட்.அணு உலையிலிருந்து கிடைத்தது 1840 மெகாவாட் மட்டுமே.அது 2%. தற்போது 2000ல் 3%. தற்போது 2020ல் 20,000 மெகாவாட் உ ற்பற்த்திக்கு செலவு 80 ஆயிரம் கோடி என்கிறார்கள். பொதுவாக ஒரு அணு உலையின் மையப்பகுதியில் இருந்து 1.6 கிலோமீட்டர் வரை இடத்தை விலக்கல் பகுதி என்கிறார்கள். அதேபோல் அஞ்சு கிலோ மீட்டர் வரை பகுதி பாதுகாப்பு பகுதி என்கிறார்கள். 

ஆனால் நடைமுறையில் அணு உலையில் இருந்து 300-400 மீட்டருக்கு அருகில் கூட தற்காலிக கொட்டகைகள் இருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருந்தது.
அணு உலையில் எரிக்கப்பட்டு ஆற்றல் இழந்த யுரேனியம் சேகரிக்கப்படும். இவை அடுத்த ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். மேலும் அணுக்கழிவு போன்றவை குறித்தும் மிக விரிவாக கட்டுரை அலசுகிறது

கோடைகாலத்தில் வெயிலை கூட சமாளித்து விடலாம். ஆனால் தண்ணீரின் தேவையை மனிதனால் சமாளிக்க முடியாது. ஏனெனில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. இந்த தண்ணீர் அரசியல் குறித்தும் தண்ணீரின் வியாபாரம் குறித்தும் பொலிவியாவின் கொச்சா பம்பா வில் நடைபெற்ற சம்பவமும், தண்ணீருக்காக போராடி உயிர்துறந்த மதுரை கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் லீலாவதியின் தியாகமும்,கேரளா பிளாச்சிமாடாவில் கொக்கோ கோலா எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மயில்லம்மாவின் தியாகமும் இக்கட்டுரை பேசுகிறது. சிவகங்கையில் கோக் நிறுவனம் படமாத்தூர்க்கு மாற்ற முனைந்த போது அங்கிருந்த இடதுசாரி தோழர்கள் போராடி அங்கிருந்து விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.

நஞ்சாகும் நீதி கட்டுரையில்.. இந்தியாவில் யூனியன் கார்பைடு நிறுவனம் 1905 இல் கல்கத்தாவில் தன் பணியை தொடங்கி..1942ல் சென்னை, 1967ல் ஐதராபாத்,1968ல் மும்பை& போபால் என பல ரசாயன ஆலையை நிறுவியது.1976ல் முதல் தன் ஆய்வுப் பணிகளை இந்தியாவில் துவங்கியது.1975 நெருக்கடிநிலை காலத்தில் அனுமதி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

போபால் சம்பவம் குறித்து பேசும்போது அந்நிறுவனத்தை பிறகு வாங்கிய டவ் நிறுவனம் பழைய வரலாற்றுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியதுடன், பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு 2004 ஆம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையை சிறுபகுதி வழங்கப்பட்டது.2005- 2007ஆம் ஆண்டு வரை கட்சிகள் பெற்ற நன்கொடை தாக்கல் செய்யப்பட்டபோது.. பிரபல தேசிய கட்சி ஒன்று டவ் நிறுவனத்திடம் இருந்து 2,500 அமெரிக்க டாலர்களை பெற்றிருப்பது தெரிய வந்தது.

உலகின் மிக வளமான பகுதியாக ஆப்பிரிக்கா இருந்தது. அதனை ஆக்கிரமித்த அத்தனை வளர்ந்த நாடுகளும் அதனை சுரண்டினர். விளைவு அதனை மூன்றாம்தர நாடாக்கி அங்குள்ள வளங்களை எல்லாம் சுரண்டிய தோடு அவர்களை ஏழை நாடாகவும் ஆக்கி விட்டனர்.

நுகர்வு எனும் மாயவலை யில் மக்களிடம் நுகர்வு ஆசைகட்டி நமது தேவையை என்ன என்பதை எங்கோ எவரோ உருவாக்கி.. நாள்தோறும் அதனை நம்மிடமே அறுவடை செய்கிறார்கள் என்பதை ஒரு கட்டுரையில் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன

பழங்குடிகள் என்னும் நவீன அகதிகள் கட்டுரையில் பழங்குடிகளை பற்றிய பல்வேறு விஷயங்களை நம்முன் எடுத்துக் காட்டுகிறா.காட்டில் உள்ள 9000 தாவரங்களைப் பற்றிய அறிதல் அவர்களுக்கு உண்டு என்றும், 7500 வகையான தாவரங்களை உணவாகவும் மருந்தாகவும் பாவித்து வந்தார்கள். நீலகிரியில் காடு அளித்தது, காடுகள் யாருக்கு என்ற கட்டுரைகளும், பல்வேறு தொலைக்காட்சிகள் பழங்குடியினரை எப்படி பயன்படுத்துகின்றன என்பதையும் விளக்கத்தோடு ஆய்வுக் கட்டுரையாக விளக்கியிருக்கிறார்.

இன்றைய மருத்துவம் என்பது Bad health at high cost  ஆக உள்ளது. மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகையில் அதற்கான மருந்துகளும்,விலையும், ஒரு நவீன அரசியலை மருத்துவத் துறைக்கு இறக்குமதியாகி உள்ளதாக தெரிவிக்கிறார்.

இறுதியாகும் வெம்மையாகும் புவிக்கோளம்,வருங்காலம் எப்படி இருக்கும் என நடைமுறை யதார்த்த சித்தாந்தங்களோடு விளக்கியிருக்கிறார்.வகுப்பில் ஒருவர் பேசியதற்காக வகுப்பே எழுந்து நிற்றலை போல ஏதோ ஒருவன் செய்யும் நச்சு வேலைக்காக உலகமே தலை குனிந்து தான் நிற்கிறது.

"இந்த உலகில் எல்லா மனிதர்களின் தேவைக்கும் போதிய செல்வம் இருக்கிறது.ஆனால் ஒரு தனிமனிதனின் பேராசைக்கு அது போதாது எனும்  காந்தி வரி நினைவுக்கு வருகிறது.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment